

வெயில் காலம் ஆரம்பமாக போகிறது. இந்த சமயத்தில் வற்றல், வடகம் வகைகளை போட்டு வைத்துக்கொள்ள நமக்கு பல வகைகளில் பயன்படும்.
சாமை வடாம்
தேவையானவை:
சாமை அரிசி -2கப், ஜவ்வரிசி -1/4கப், சீரகம் -1டீஸ்பூன், பெருங்காயம் -1டீஸ்பூன், உப்பு -தேவைக்கு.
செய்முறை:
சாமை அரிசி, ஜவ்வரிசி இரண்டையும், மிஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும். ஒரு டம்ளர் மாவிற்கு 2டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து ப மிளகாய் அரைத்ததை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு கை விடாமல் கிளறவும். கட்டி இல்லாமல் நன்கு வெந்து பளபளப்பாக ஆனதும் இறக்கவும். சற்று ஆறியதும் வடாமாக முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து காயவிடவும். நன்கு மூன்று நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
சிவப்பு அவல் வடகம்
தேவையானவை:
சிவப்பு அவல் -2கப்,பொடியாக நறுக்கிய சி வெங்காயம் -1கப், ப மிளகாய் -5, எலிமிச்சை பழம்-1, உப்பு -தேவைக்கு
செய்முறை:
ப மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரைத்த விழுது, அவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து எலிமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும். எல்லாம் வெந்து பளபளப்பாக ஆனதும் இறக்கி பிளாஸ்டிக் வீட்டில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும். நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
நெல்லிக்காய் வடகம்
தேவையானவை:
நெல்லிக்காய்-20,ப மிளகாய் -5,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி-1கப், பெருங்காயம் -1டீஸ்பூன், உப்பு -தேவைக்கு.
செய்முறை:
கொட்டையை நீக்கி நெல்லிக்காய் உடன் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து இதில் நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து கலந்து சிறிய வடைகளாக தட்டி காயவைத்து டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும். இதை பொரித்து அப்படியே அல்லது குழம்பிலோ சேர்க்க சுவை நன்றாக இருக்கும்.
பூசணி வத்தல்
தேவையானவை:
உளுத்தம் பருப்பு -1கப், துருவிய பூசணி-1கப்,ப மிளகாய் -5, பெருங்காயம் -1டீஸ்பூன், உப்பு.
செய்முறை:
ஊறவைத்த பருப்புடன் ப மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து துருவிய பூசணிக்காயை பிழிந்து சேர்த்து, பெருங்காயம் சேர்த்து கலந்துகொண்டு இதை துணியில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அவியல் செய்யும்போது, மோர்க்குழம்பில் பொரித்து போட சுவை நன்றாக இருக்கும்.
தாளிக்கும் வடகம்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -1/4கிலோ, வெள்ளை உளுந்து-1கப், சீரகம்-1/4கப், கடுகு-2டீஸ்பூன், வெந்தயம்-1டீஸ்பூன், விளக்கெண்ணெய்-2டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம்-தேவைக்கு, சின்னதாக நறுக்கிய பூண்டு -2டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
உளுந்தை ஒருமணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, வெந்தயம், மஞ்சள் தூள், கடுகு, சீரகம், நறுக்கிய பூண்டு பற்கள் போட்டு பிசைந்து வி எண்ணெய் தொட்டுக்கொண்டு உருட்டவும். மறுநாள் காலையில் வெயிலில் வைத்து திரும்பவும் உருண்டைகளை பிரித்து விளக்கெண்ணெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைத்து இரண்டு, மூன்று நாட்கள் வைத்து டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இதை புளிக்குழம்பு, காரக்குழம்பு, மீன் குழம்பு தாளிக்க உபயோகிக்க நல்ல மணமாக உணவிற்கு சுவையை தரும்.