

இனிப்புகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் சொட்டச் சொட்ட இருக்கும் அல்வா என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் நெய்யோ,எண்ணெயோ சேர்க்காமல் 'தேங்காய் பால் அல்வா' செய்யும் முறை குறித்து இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்!
மைதா மாவு - அரை கப்
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய் பால் - 2 கப்
முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் தூள் -சிறிதளவு
எலுமிச்சை சாறு -சிறிதளவு
செய்முறை!
முதலில் அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் சர்க்கரையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடி ஆக்க வேண்டும்.
பின்பு அதை சிறிது நீரூற்றி கேரமலாக காய்ச்சிக் கொள்ள வேண்டும் அப்போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக ப்ரவுன் நிறம் வருமாறு காய்ச்சி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் அரைத்த தேங்காய் பாலையும், இரண்டாவது அரைத்த தேங்காய் பாலையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரை கப் மைதா மாவை இரண்டாவது எடுத்த தேங்காய் பாலுடன் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை அடி கனமான பாத்திரத்தில் கைவிடாமல் கிண்டிக்கொண்டே முதலில் எடுத்த தேங்காய் பாலையும் சிறிது சிறிதாக ஊற்றி கிண்ட வேண்டும் .
சிறிது நேரம் ஆன பிறகு நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த சர்க்கரை கேரமலை ஊற்றி நன்கு சுருள கிண்ட வேண்டும். அப்போது மைதா மாவு ,தேங்காய் பால், சர்க்கரை சேர்த்ததினால் அல்வா பதத்திற்கு பொங்கி வரும்.
இந்த பதத்தில் நமக்குத் தேவையான அளவு முந்திரி பருப்பு போட்டுக் கொள்ளலாம். பிறகு சிறிதளவு ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கிண்டிக்கொண்டே இருக்கும் போது சுருண்டு லேசான ப்ரவுன் நிறத்தில் அல்வா தயாராகிவிடும்.
அடியில் நுரை நுரையாக தெரியும் இந்தப் பதத்தில் எடுத்து வைத்தால் சுவையான தேங்காய் பால் அல்வா தயார். ஒரு மாதம் ஆனாலும் கெடாத இந்த தேங்காய் பால் அல்வா மிகவும் சுவையாக அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
சுவையான அதிகம் செலவில்லாத தேங்காய் பால் அல்வாவை படித்தவுடன் எளிமையாக தயார் செய்வோமா!