

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடும், அறுசுவை நிவேதனங்களும் தான் நினைவுக்கு வரும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடி பெருக்கு நாட்களில் வீடே மணக்கும் வகையில் செய்யக் கூடிய ஆடி மாத ஸ்பெஷல் ஆடி பலகாரங்கள். ஆடிப்பெருக்கு அன்று காவேரி தாய்க்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு.
1. தேங்காய் பால் பாயசம் (ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்)
தேவையான பொருட்கள்:
கெட்டித் தேங்காய்ப்பால் – 1 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் – 2 கப்
பச்சரிசி – ½ கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து, சிறிது தண்ணீர் தெளித்துத் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்ல மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி தனியாக வைக்கவும்.
இரண்டாம் தேங்காய்ப்பாலைச் சூடாக்கி, அதில் அரைத்த அரிசி விழுதைச் சேர்த்து கட்டியில்லாமல் மிதமான தீயில் வேகவைக்கவும். அரிசி வெந்ததும் வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பின்னர் ஏலக்காய்த்தூள் மற்றும் கெட்டித் தேங்காய்ப்பால் ஊற்றி, அடுப்பை அணைத்துவிடவும் (தேங்காய்ப்பால் ஊற்றிய பின் கொதிக்கக் கூடாது). நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்த்தால் சுவையான தேங்காய்ப் பால் பாயசம் தயார்.
2. ஆடி வெள்ளி தேங்காய் பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
நேந்திரம் வாழைப்பழம் _3
அரிசி மாவு _1/4 கப்
உப்பு _1/2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் _ 1 ஸ்பூன்
நெய் _ 2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் _1 கப்
பொடித்த வெல்லம் _ 1 கப்
செய்முறை:
முதலில் நேந்திரம் பழத்தை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும். பழம் ஆறியப்பிறகு ஒரு பாத்திரத்தில் வைத்து மத்து வைத்து மசித்து அத்துடன் அரிசி மாவு, உப்பு, சிறிது சுடு தண்ணீர் ஊற்றி விரவி இடியாப்ப மாவு பக்குவத்தில் வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து பின்னர் பழ உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
உருண்டைகள் வெந்ததும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கலவை வற்றி வந்ததும் இறக்கி தேங்காய் பால் சேர்க்கவும். மிகவும் சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.
3. அரிசிப் பூரண தேங்காய்:
(சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கரூர்) இங்கு ஆடி மாதம் பிறந்ததும் இதை செய்து அம்மனுக்கு படைப்பார்கள்.
இதன் செய்முறை: நடுத்தரமான தேங்காயைத் தேர்ந்தெடுத்து, அதன் வெளிநாரைச் சீவி சுத்தப் படுத்துவார்கள். தேங்காயின் ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவார்கள். பின்னர் தேங்காய்க்குள்ளே பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், எள், ஏலக்காய் மற்றும் உடைத்த கடலை ஆகியவற்றை நிரப்புவார்கள். துளையிட்ட பகுதியை ஒரு கூர்மையான பச்சை மூங்கில் குச்சியால் அடைத்து, தேங்காயைச் சுற்றி மஞ்சள் பூசுவார்கள்.
தயார் செய்யப்பட்ட தேங்காயை மூங்கில் குச்சியில் செருகி, திறந்தவெளியில் மூட்டப்படும் நெருப்பில் (சுள்ளிகள்/நெருப்புத் தணலில்) காட்டி சுடுவார்கள். தேங்காயின் வெளிப்பகுதி நன்கு கருகி, உள்ளே இருக்கும் பொருட்கள் வெந்து மணக்கும் வரை சுடப்படும். நன்றாகச் சுட்ட பிறகு, அதை விநாயகர் கோவிலில் வைத்துப் படைத்து, தேங்காயை உடைத்து குடும்பத்தினருடன் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பார்கள்.
இதன் சிறப்பு மற்றும் நம்பிக்கை
மகாபாரதப் போர் ஆடி 1-ம் தேதி தொடங்கி, தர்மத்தின் வெற்றிக்கு வழிவகுத்ததாகக் கருதப்படுகிறது. அந்த நல்ல தொடக்கத்தைக் குறிக்கவும், தீயவை அழிந்து நன்மைகள் பெறவும் இந்நாளில் தேங்காய் சுட்டு வழிபடுகின்றனர்.
கிராமத்து பாரம்பரிய முறைகளை உங்களது நவீன சமையலறையில் எளிமையாகக் கொண்டுவந்து, ஆரோக்கியமான மற்றும் சுவையான பலகாரங்களைச் செய்து அசத்துவதற்கான முழுமையான வழிகாட்டலைப் பெறுவீர்கள்.