

வட இந்திய உணவகங்களில், நம் கண்களை ஈர்க்கும் ஒரு மிக முக்கியமான உணவு ‘வெஜ் திவானி ஹண்டி (Veg Diwani Handi)’. 'திவானி' என்றால் அரசவை அல்லது ராஜஸ்தானிய அரசர்களின் உணவுப் பழக்கத்தைக் குறிக்கும் சொல். 'ஹண்டி' என்பது அகலமான வாய்ப்பகுதி கொண்ட ஒரு பாரம்பரிய பாத்திரம்.
பல்வேறு வகையான காய்கறிகள், முந்திரி மற்றும் கிரீம் ஆகியவை இணைந்து, ஒரு ராஜ விருந்தின் சுவையை இந்த உணவு நமக்கு வழங்குகிறது. பலரும் இதை உணவகங்களில் மட்டுமே சுவைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், சரியான அளவுகளில் மசாலாக்களைப் பயன்படுத்தினால், நமது வீட்டிலேயே அந்த அசல் சுவையை எளிதாகக் கொண்டுவர முடியும்.
தேவையான பொருட்கள்:
கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பச்சை பட்டாணி - தலா அரை கப்
குடைமிளகாய் - 1
கிரேவி:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
முந்திரி - 10 முதல் 12 வரை
வெள்ளரி விதை - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மசாலாப் பொருட்கள்:
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இதர பொருட்கள்:
Fresh Cream - 2 டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
நெய் மற்றும் எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க.
செய்முறை:
முதலில், காய்கறிகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் மற்றும் பட்டாணி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகள் முழுமையாகக் குழைந்துவிடக் கூடாது. குடைமிளகாயை வேகவைக்கத் தேவையில்லை, அதைத் தனியாக லேசாக எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக, கிரேவிக்கான பிரத்யேக அரவையைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரி மற்றும் வெள்ளரி விதைகளைச் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
இவை ஆறிய பின், மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளவும். முந்திரி மற்றும் வெள்ளரி விதைகள் தான் இந்த கிரேவிக்கு அந்த 'ரிச்' ஆன மற்றும் கிரீமியான பதத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பொருட்களாகும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடாக்கவும். இதில் சீரகம் தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
விழுது நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை தொடர்ந்து கிளறவேண்டும்.
மசாலா நன்கு வெந்து தொக்கு பதத்திற்கு வந்தவுடன், வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளை இதில் சேர்க்க வேண்டும். காய்கறிகளில் மசாலா நன்கு படியும் வரை பிரட்டிவிட்டு, கிரேவிக்குத் தேவையான அளவு சுடுநீர் மற்றும் உப்பு சேர்க்கவும். பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
இறுதியில், காய்கறிகள் மசாலாவை உறிஞ்சி கிரேவி சற்று கெட்டியானதும், கஸ்தூரி மேத்தியைக் கைகளில் கசக்கித் தூவ வேண்டும். அடுப்பை அணைப்பதற்கு முன், பிரஷ் கிரீம் சேர்த்து ஒருமுறை மெதுவாகக் கலந்துவிடவும்.
மேலே நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கினால், அரசர்கள் உண்ட அதே சுவையில் ‘வெஜ் திவானி ஹண்டி’ தயார்.