எந்த ஒரு மனிதரும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழவே விரும்புவார்கள். ஆரோக்கியமான ஆயுளுக்கு சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவு முறையும் உடற்பயிற்சிகளும் அவசியமாகிறது. நாம் உட்கொண்ட உணவின் அளவிற்கு ஏற்ப நம் உடல் உழைப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். உழைப்பினை விட உணவு அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் கெட்டு தேவையற்ற கொழுப்புச்சத்து உடலில் தங்கி விடுகிறது. இதனால் உடல் பருமன் மற்றும் எண்ணற்ற நோய்களுடன் வாழ்ந்து வருகிறோம்.
உடற்பயிற்சி எனும்போது அதில் அடங்குவதுதான் யோகாசனமும். நமது முன்னோர் வகுத்த யோகாசனம் என்பது நோயற்ற வாழ்வுக்கு ஓர் அடித்தளம். இந்த யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தால் மேலும் உடல் நலம் காணலாம்.
1. யோகாசனம் செய்யும் முன் நல்ல காற்றோட்டம் உள்ள இடமாக தேர்வு செய்ய வேண்டும். கீழே தரைவிரிப்பு நிச்சயம் வேண்டும்.
2. காலை 4 மணி முதல் 6 மணி வரை யோகாசனப் பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம். காலைக்கடன் கழித்த பிறகு வெறும் வயிற்றுடன் யோகாசனம் செய்வது மிகவும் நல்லது.
3. யோகாசனத்தை மிகவும் நிதானமாகப் பழக வேண்டும். அவசர அவசரமாகவும், முரட்டுத்தனமாகவும் செய்வது மோசமான பின்விளைவுகளைத் தரும்.
4. ‘திசைகள் என்ன செய்யும்?’ என்று நினைப்போம். ஆனால், யோகாசனம் செய்யும்போது வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து செய்வது சிறப்பு.
5. ஒவ்வொரு ஆசனம் செய்து முடித்த பின்பும் அவசியம் சாந்தியாசனம் செய்தல் வேண்டும். அதேபோல், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம்.
6 ஆசனம் செய்யும் இடம் அசுத்தமின்றி நறுமணமாக இருக்க வேண்டும். யோகாசனம் செய்யும்போது பேசாமல் அமைதியாக செய்தல் மிகவும் அவசியமாகும்.
7. கண்ணாடி போன்றவற்றை போட்டுக்கொண்டு யோகாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காலையில் குளித்துவிட்டு யோகாசனம் செய்தல் நன்று.
8. உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் இவை மூன்றையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து செய்தல் கூடாது. யோகாசனத்தை மொட்டை மாடியில் அல்லது வெட்டவெளியில் செய்வதைத் தவிர்த்து, மேற்கூறையிட்ட இடங்களில் செய்தல் நலம்.
9. ஆசனங்கள் செய்யும் நேரத்தில் மூச்சினை தம் பிடிக்கக் கூடாது. நிதானமாக ஒரே சீராக சுவாசம் இருக்க வேண்டும். அதேபோல், வாயினால் சுவாசிப்பதும் தவறு.
10. இதயம் மற்றும் வேறு அறுவை சிகிச்சை செய்தவர்கள் சிரசாசனம், சர்வாங்கசனம், மயூராசனம் போன்ற கடுமையான ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்கவும்.
11. உடல்நிலை சரியில்லாத காலங்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாதவிடாயின்போதும் பெண்கள் கட்டாயம் யோகாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
12. உணவு சாப்பிட்ட உடனே அல்லது நீண்ட தூரம் பயணம், வெகு நேரம் கண் விழித்தல் போன்ற நாட்களில் யோகாசனம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.