

மோட்டார் சைக்கிள் பராமரிப்பில் அவற்றைக் கழுவுவது ஒரு அவசியமான அம்சமாகும். அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் கடினமான சுற்றுச்சூழல் நிலைமைகளால் பைக்கை பராமரிப்பதற்கு சிறிது முயற்சியும் நேரமும் தேவைப்படும். உற்பத்தியாளர்கள் நீடித்து உழைக்கும் பொருட்களைப் பயன்படுத்தினாலும், வழக்கமான பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது.
பைக்கை அடிக்கடி வாட்டர் வாஷ் செய்வது நல்லதா?
பைக்கை அடிக்கடி வாட்டர் வாஷ் செய்வது நல்லதல்ல. அதிகப்படியான வாட்டர் வாஷ் பைக்கின் பெயிண்ட் மங்கிப் போவதற்கும், முக்கியமான உதிரி பாகங்களில் துருபிடிப்பதற்கும், எலக்ட்ரிக்கல் கோளாறுகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். தினமும் அல்லது அடிக்கடி பைக்கை பயன்படுத்துபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வாட்டர் வாஷ் செய்வது போதுமானது. தினமும் பைக்கில் படியும் தூசியை ஈரமான காட்டன் துணியால் (microfiber cloth) மெதுவாகத் துடைத்தாலே போதும். முறையாக பராமரிக்க வாஷ் செய்த பிறகு, செயின் லூப் (Chain Lube) அடிக்க மறக்கவேண்டாம்.
பைக் வாஷ் வகைகளும், பராமரிப்பு முறைகளும்:
பைக்கின் மீது தடிமனான ஃபோம் அடுக்கை பூசி அதை சுத்தம் செய்வது ஷாம்பு கொண்டு கழுவுவதை விட மிகக் குறைந்த நேரத்தில் அழுக்கு மற்றும் கறைகளைத் தளர்த்தி போக்க உதவும்.
அதிக தண்ணீர் பற்றாக்குறை அல்லது வறட்சி உள்ள பகுதிகளில் உலர் கழுவல் முறை சிறப்பானது.
வீட்டிலேயே மோட்டார் சைக்கிளை கழுவதற்கான மற்றொரு சிறந்த முறை டீசல் கொண்டு சுத்தப் படுத்துதல். டீசலைப் பயன்படுத்தி எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்ற சில கடினமான கறைகளைப் போக்க முடியும். இது ஓரளவுக்கு துருபிடிப்பதை தடுக்கிறது.
பைக் ஷாம்பூ வாஷ் வீட்டிலும் செய்யலாம். மைக்ரோஃபைபர் துணியை பைக் ஷாம்பூ தண்ணீரில் நனைத்து, பைக்கை மேலிருந்து கீழாக சுத்தம் செய்த பிறகு (ஏனெனில் பைக்கின் கீழ் பகுதியில்தான் அதிக அழுக்கு இருக்கும்) சிறிது நேரம் உலர விட்டு பின்பு உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தி லேசான கறைகளை அகற்றலாம்.
நல்ல முறையில் பராமரிக்க:
பைக்கை நீண்ட காலம் நல்ல நிலையிலும், சிறந்த மைலேஜுடனும் பராமரிக்க, பைக்கின் என்ஜின் ஆயுளை நீட்டிப்பதற்கு ஒவ்வொரு 3,000 முதல் 5,000 கிலோ மீட்டர் இடைவெளியில் எஞ்சின் ஆயில் மாற்றப்பட வேண்டும்.
முறையான கால இடைவெளியில் பைக்கை சர்வீஸ் செய்வது அவசியம்.
எலக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டர் வைத்திருந்தால், பேட்டரி மற்றும் மின்சாரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தண்ணீர் படாமல் கவனமாக துடைப்பது அவசியம்.
ஒவ்வொரு வாட்டர் வாஷிற்குப் பிறகும், பைக்கின் செயினில் உள்ள எண்ணெய் அல்லது கிரீஸ் (Chain Lube) கரைந்துவிடும். எனவே வாஷ் செய்த பிறகு செயின் ஸ்பிரே அல்லது லூப் அடிப்பது கட்டாயம்.
தினமும் பைக் அழுக்காகும் பொழுது அதிக தண்ணீர் ஊற்றி கழுவுவதற்குப் பதிலாக ஒரு மென்மையான துணியை (microfiber cloth) தண்ணீரில் நனைத்து துடைத்தாலே போதுமானது.
பைக்கை பராமரிக்கும் பொழுது தவிர்க்கவேண்டிய விஷயங்கள்:
ஹை - பிரஷர் வாஷ்:
அதிக அழுத்தத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதைத் தவிர்க்கவும். இது இன்ஜின் மற்றும் பேரிங் பகுதிகளுக்குள் தண்ணீரை செலுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கடினமான நீர் (Hard Water):
உப்புத் தண்ணீர் அல்லது கடினமான தண்ணீரை வாட்டர் வாஷ் பண்ண பயன்படுத்துவதை தவிர்க்கவும். அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை கொண்ட நீரை பயன்படுத்துவது சரியல்ல. pH அளவை நடுநிலையாக பராமரிக்க உதவும் pH நடுநிலை ஆட்டோமொபைல் ஷாம்பூவைப் பயன்படுத்தலாம்.
மோட்டார் சைக்கிளை கழுவதற்கு சாதாரண சோப்பு மற்றும் சலவைத்தூளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை இரண்டிலும் பெயிண்டிற்கு தீங்கு விளைவித்து, அதன் தரத்தைக் குறைக்கும் ரசாயனங்கள் உள்ளன.
பைக்கை டீசல் கொண்டு கழுவதால் பெயிண்டின் தரம் மற்றும் பளபளப்பு குறையக்கூடும். ஆனால் கடினமான கறைகளை நீக்குவதற்கு மோட்டார் சைக்கிளின் அடிப்பகுதியை டீசல் கொண்டு சுத்தம் செய்யலாம்.