

சமீப காலமாக குழந்தைகள் துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அல்ட்ரா ப்ராசஸ் ஃபுட் (UPF) என்ற பெயரில் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளால் ஏற்படும் சீர்கேடுகளுக்கு மக்கள் அடிமையாகி வருகிறார்கள். வீடுகளிலும் சரி ஹோட்டல்களிலும் சரி அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு (processed foods) வகைகளை பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவு உணவுகளின் தரத்தை குறைத்து நோய்க்கு அடிமையாக்கி விடுகிறது.
ஊட்டத்தை கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு யூபிஎப் (UPF) உணவு வகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
மக்கள் பாரம்பரியமான உணவுகளை தவிர்த்து யுபிஎப் உணவு வகைகளுக்கு அடிமையாகி உள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
யுபிஎப் உணவு வகைகள் பெரும்பாலும் கொழுப்பு சர்க்கரை உப்பு ஆகியவற்றை அதிகம் சேர்த்து அதிக நாட்கள் கெட்டுப்போகாத வகையில் வேதிப்பொருட்கள், நிறமூட்டிகள், சுவையூட்டும் பொருட்களை சேர்த்து வழங்குவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.
குழந்தைகள் இளம் வயதினர்கள் இவர்களை குறி வைத்து கிராமம் முதல் நகரம் வரை விளம்பரப்படுத்தி தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
தீவிரமான சந்தைப்படுத்துதல் அதிக விளம்பரங்கள் விளம்பர உத்திகளால் குழந்தைகள் இளம் வயதினர் பெரியவர்கள் என அனைவரும் இதற்கு அடிமையாகி விடுகின்றனர் என்பதுதான் வேதனையான செய்தியாகும்.
சில்லறை விற்பனை கடைகளில் கூட அலமாரிகளில் இப்போது நூடுல்ஸ், சர்க்கரை, இனிப்பு வகை பானங்கள், சிப்ஸ், காலை உணவு, தானியங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை கவர்ச்சியான முறையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு இவற்றை தடுக்க நாட்டில் பல சட்டங்கள் இருந்தாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதன் ஓட்டைகளை அடைத்து தங்கள் சுயநலத்திற்காக யுபிஎப் உணவுப் பொருட்களை வாங்குமாறு மக்களை தூண்டுகின்றன. நம் நாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த 20 ஆண்டுகளில் யுபிஎப் உணவு வகைகள் 40% அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை.
இத்தகைய செயல்களால் ஒரு காலகட்டத்தில் நான்கு பேரில் ஒருவர் உடல் பருமனாலும் 10 பேரில் ஒருவர் நீரிழிவுநோயாலும் ஏழு பேரில் ஒருவர் நீரிழிவுக்கு முந்திய நிலையிலும் மூன்று பேரில் ஒருவர் அடிவயிறு பருமனாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வருகிறது.
இதில் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் ஏற்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதற்கும் யுபிஎப் உணவு வகைகளுக்கு தொடர்பு உள்ளது. எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.
யுபிஎப் போன்ற துரித வகை உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இத்தகைய துரித உணவுகளுக்கு அரசும் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற செய்ய வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் யுபிஎப் உணவு வகைகளை முழுமையாக தடை செய்யாவிட்டாலும் அதனை நாம் தவிர்ப்பதன் மூலம் நாம் எதிர்காலத்தை பேணிப் பாதுகாக்கலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். எனவே துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.