

இந்தியாவில் இணையவழி மோசடி வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதில் ‘டிஜிட்டல் கைது மோசடிகள்’ மற்றும் யுபிஐ (UPI) தொடர்பான மோசடிகள் மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன.
இணையவழி குற்றங்கள் முழுமையாக தீர்க்கப்படுகிறதா?
உலகளவில் எழும், அனைத்து ஆன்லைன் மோசடி வழக்குகளும் முழுமையாகத் தீர்க்கப்படுவதில்லை; அதிலும், நிலுவையில் பல இருக்கின்றன. இன்டர்போலின் (INTERPOL’s) 2026 தரவின்படி, இதுவரை திருடுபோன 293 மில்லியன் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஆனால் இது ஒட்டுமொத்த மோசடியில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்கிறார்கள். காரணம் நிகழ்கால சட்டங்களைவிட; மோசடியில் ஈடுபடுவோர் வேகமாகத் தங்களை அப்டேட் செய்து, திட்டத்தை மாற்றிக்கொள்கின்றனர் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில், தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் (NCRP), 2021-2025-க்கு இடையில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ₹55,050 கோடி வரையிலான இழப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், ₹8,189 கோடி மட்டுமே முடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீட்பு நடவடிக்கையில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
மோசடியில் முன்னணியில் உள்ள மற்றும் அதிக மோசடியைத் சந்திக்கும் நாடுகள்:
வலுவான நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொழில்நுட்பம் காரணமாக, நோர்டிக் (Nordic) நாடுகள் (லக்சம்பர்க், டென்மார்க், பின்லாந்து, நார்வே, நெதர்லாந்து) போன்றவை ஆன்லைன் மோசடி வழக்குகளைத் தீர்ப்பதில் உலகளவில் முன்னணியில் உள்ளன.
அதற்கு அப்படியே எதிர்மறையாக, இந்தியா (7.1% மோசடி விகிதம்), நிகரகுவா (12.5%), மற்றும் அமெரிக்கா (3.4%) ஆகியவை டிஜிட்டல் மோசடிக் குற்றங்கள் எழும் முக்கிய இடங்களாக உள்ளன.
இந்தியாவில் நிகழும் அபாயகரமான இணையவழி மோசடி வழக்குகள் டிஜிட்டல் கைது மோசடிகள்:
காவல்துறை/சிபிஐ போல ஆள்மாறாட்டம் செய்யும் டீப்ஃபேக் வீடியோ அழைப்புகள் மூலம் மக்கள் மிரட்டப்படுகிறார்கள்; 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை மக்கள் ₹3,000 கோடி இழந்துள்ளார்கள்.
முதலீடு மற்றும் வேலை மோசடிகள்: போலி வர்த்தகச் செயலிகள் மற்றும் ஆள்சேர்ப்பு மோசடிகள் அதிக வருமானம் தருவதாக வாக்குறுதியளித்து ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கின்றன.
எல்லை தாண்டிய பிற நாடு மோசடிகள்: இங்குள்ள இடைத்தரகர் கணக்குகள் மற்றும் கிரிப்டோ பண மோசடி மூலம் கிட்டத்தட்ட ₹250 கோடி கையாடல் செய்யப்பட்டிருக்கிறதாம்.
குறுஞ்செய்தி (SMS) மோசடிகள்: இதனால் 2026-ல் புகார்கள் 146% அதிகரித்துள்ளன. இது மோசடிக்காரர்கள் SMS வழிகளைப் பின்பற்றி மக்களை அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
வெளிநாட்டினரால் இந்தியர்கள் அதிகம் ஏமாற்றப்படுக்கிறார்களா?:
வெளிநாட்டினரால் இந்தியர்கள் இணையத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மைதான். சீனா, நைஜீரியா, கம்போடியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை தளமாகக்கொண்ட பல மோசடிக்காரர்கள் பல்வேறு பரிமாணங்களில் இந்தியர்களைக் குறிவைக்கின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் நடத்தப்படும் கிரிப்டோகரன்சி மோசடிகள் மற்றும் போலி வர்த்தகச் செயலிகள் மூலம், இந்தியர்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை இதுபோன்ற மோசடிகளால் இழக்கிறார்கள் என்று அறிக்கைகள் காட்டுகின்றன. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த வழக்குகளின் முக்கியப் புள்ளிகள் இந்தியாவிற்கு வெளியே, நம் நாட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு இருப்பதால்; இவற்றைத் தீர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது.
சரி இதை எப்படித் தடுக்கலாம் மற்றும் எப்படி மீண்டு வரலாம்?:
மோசடிக்கு முன்:
நாம் ஒரு விஷயத்திற்குப் பதிலளிப்பதற்கு முன், முதலில் அது அதிகாரப்பூர்வ எண்ணா அல்லது இணையத்தளங்களா என்பதை சரிபார்க்க வேண்டும்.
பணத்தைப் ‘பெறுவதற்காக’ யாரோ உங்களிடம் QR குறியீடுகளை அனுப்பினால் அதை ஸ்கேன் செய்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
உங்களின் எந்த ஒரு ‘டிஜிட்டல் பயன்பாட்டிற்கும்’ two-factor authentication வழியை பின்பற்றுங்கள்.
மோசடி ஏற்பட்ட பிறகு:
1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும்.
வங்கிக் கணக்குகள்/ வங்கி அட்டைகளை உடனடியாக முடக்கவும்.
உங்களிடம் உள்ள ஆதாரங்களை (ஸ்கிரீன்ஷாட்கள், பரிவர்த்தனை ஐடிகளை (ID) சேமித்து வைத்திடுங்கள்.
சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக முதல் தகவல் அறிக்கைகளை (FIR) காவல் நிலையத்தில் பதிவு செய்யவும்.
இணையவழி மோசடிகள் முழுமையாக முடிவுக்கு வராது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றும் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளும் தங்களை அதனுடன் அப்டேட் செய்துகொள்வதால்; தொழில்நுட்பத்துடன் சேர்ந்து குற்றமும் தொடர்ந்து வளரத்தான் செய்யும். எனவே, எதிலும் எச்சரிக்கை இருந்தால் மட்டுமே, நாம் தப்பலாம்.
References: