
பொதுவாக வீடுகளின் அனைத்து இடங்களிலும் வாஸ்து குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பதாக வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் படி, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அறைகளையும் வடிவமைத்து வைத்திருப்பீர்கள்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகள் கழற்றி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டின் வாசலில் செருப்புகளை கழட்டி விட்டு வருவார்கள். சிலர் அடுக்கி வைப்பார்கள், சிலர் ஏனோ தானோ என கழட்டிவிட்டு வருவார்கள். இதனால் பலரது வீடுகளில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது. பலருக்கும் வீட்டில் என்னதான் நல்லது செய்தாலும் பண கஷ்டம் வருகிறது, குடும்பத்தில் சச்சரவுகள் வருகிறது என்ற கவலை இருக்கும். இதற்கு காரணம் வாஸ்து தோஷமாக கூட இருக்கலாம். எனவே உங்கள் வீடுகளில் உள்ள வாஸ்து தோஷத்தை சரி செய்தால் வீட்டில் உள்ள பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் சீராகும் என சொல்லப்படுகிறது.
அப்படி வீட்டின் வாசலில் எந்த திசையில் காலணியை கழட்டலாம் என்று பார்க்கலாம். பொதுவாக வீட்டு வாசல் எந்த திசையில் இருக்கிறதோ அதற்கு எதிர் திசையில் செருப்பை கழட்டுவது வாடிக்கையாகும். ஆனால் அந்த திசை சரியானதா என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதில் உள்ள திசையை தெரிந்து கொண்டு அங்கே இனி காலணிகளை கழட்டுவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
வடகிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்க வேண்டாம்:
நம்மில் பலர் காலணிகளை இஷ்டத்திற்கு எங்காவது கழட்டி வைப்போம். ஆனால், அது நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் காலணிகள் மற்றும் செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கக்கூடாது என கூறப்படுகிறது. ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.
வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது. இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.
பொதுவாக பலரும் கிழக்கு பார்த்த திசையில் தான் வீடு பார்ப்பார்கள். அதனால் அதை வைத்து வாஸ்து பார்த்து காலணிகளை கழட்டுவது நல்லதாகும்.
சரியான திசை:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஷூ மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது, தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்கவும். வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதே போன்று பெரியவர்கள் காலணிகளை தலைகீழாக வைக்க கூடாது என்று சொல்வார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இனி அதில் கவனம் செலுத்துங்கள்.