
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பார்கள். இது சகஜம்தான். ஆனால், ஒருசில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், குடும்பத்தில் ஒருவருக்கு ஆரோக்கிய கேடு என்றாலும் அது அந்தக் குடும்பத்தையே பாதிக்கும்.
நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு தவறுகள் நம் உடல் ஆரோக்கியக் கேடுக்கு வழி வகுத்து விடும் என்பது நமக்குத் தெரிந்தும், தெரியாமல் கூட இருக்கலாம். நாம் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். உணவுப் பழக்கத்தில் அப்படி என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும், சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்பட்ட உணவையும் உட்கொண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
5. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவுகளை உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்.
6. புகைப்பது மற்றும் அந்தக் காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்.
7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உட்கொண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்.
8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்.
9. அதிக அளவு இனிப்பான உணவை உட்கொண்டால் நீங்களே உங்கள் கணையத்தை காயப்படுத்துவதற்கு சமம்.
10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும். அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்.
11. எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் மூளையை காயப்படுத்துவதற்கு சமம்.
12. எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை, துன்பத்தை, அன்பைப் பகிர உறவுகள் இல்லையோ அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்.
உங்கள் உடல் மீதும், உடல் உறுப்புகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.