அனைத்து மதத்தினரும் தவறாமல் கடைபிடிக்கும் ஒரு பழக்கம்தான் விரதம். இது ஆன்மிகத்தோடும் அறிவியலோடும் தொடர்புடையது என்பதால் முன்னோர்கள் ஏற்படுத்திய மிகச்சிறந்த பழக்க வழக்கங்களில் ஒன்றாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைவராலும் பேசப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் இடைக்கால விரதம் பற்றி இப்பதிவில் காண்போம்.
'இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்' எனப்படும் இடைக்கால விரதம் சமீப நாட்களில் அதிகமாகப் பேசப்பட்டு வந்தாலும், இது நம் பாட்டி தாத்தாவின் உணவு பழக்கத்தில் இயல்பாக இருந்த ஒன்றுதான். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிட்டு மற்ற நேரங்களில் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பதுதான் இடைக்கால விரத முறை எனப்படும்.
சாப்பிடுவது, விரதம் இருப்பது இரண்டையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வது. இதில் காலையிலும் இரவிலும், சாப்பிடாமல் இருந்து, மதியமும், மாலையிலும் சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகள் இடைக்கால விரத முறையில் அடக்கம். உடல் நலம் ஆரோக்கியத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய அணுகுமுறை இல்லை என்றாலும் பலருக்கு பலன் தந்துள்ளது. விரதம் இருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து சாப்பிடும் நேரங்களில் வழக்கமான உணவை சாப்பிடலாம். இதனால் உடல் எடை குறையும் என்று சொல்வது சரியாக இருந்தாலும், அதைவிட பல நன்மைகள் இதில் இருக்கின்றன.
குறிப்பாக, சிதைந்த செல்களை சீரமைத்து புதிய செல்கள் உருவாகும். சிதைந்த செல்கள் ரிப்பேராகாமல் அப்படியே தங்குவதுதான் கேன்சர், அல்சைமர் போன்ற பல வியாதிகளுக்குக் காரணம். செல்களுக்கு அதிக வேலை தராமல் விரதம் இருந்து ஓய்வு தரும்போது அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். நீண்ட ஆயுளுடன் நோயில்லாமல் வாழ வழி செய்யும். உடலில் உள்ள செல்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் இது பொருந்தும்.
இடைக்கால விரத முறைகளில் பல வகைகள் இருந்தாலும் சுலபமாக 16 மணி நேரம் விரதம் எட்டு மணி நேரம் சாப்பிடும் 16:8 முறை பொதுவானது. அடுத்தது 5:2 முறை. இதில் ஐந்து நாட்களுக்கு வழக்கம் போல சாப்பிட்டு இரண்டு நாட்களுக்கு தண்ணீர், பால் சர்க்கரை கலக்காத காபி போன்ற கலோரி இல்லாத உணவுகளை சாப்பிடுவதால் 500 முதல் 600 கலோரி குறையும். இது தவிர, ஒரு நாள் சாப்பிடுவது, அடுத்த நாள் விரதம் இருப்பது. இதில் நம் வாழ்க்கைக்கு ஏற்ற ஒன்றை வாழ்க்கை முழுவதும் பின்பற்றலாம்.
இடைக்கால விரதம் இருக்கும் நாட்களில் காய்கறிகள், பழங்கள் குறைந்த கலோரி கொண்ட புரதங்கள், நல்ல கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதால் விரத நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இடைக்கால விரத நாட்களில் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் எடை குறைவது, செரிமான மேம்பாடு, நல்ல பாக்டீரியா அதிகரிப்பு, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது, நாள்பட்ட வீக்கத்தை குறைப்பது போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தை தடுப்பது உட்பட இடைக்கால விரதத்தால் பல நன்மைகள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், இளம் வயதினர் சர்க்கரை கோளாறு உட்பட நாள்பட்ட இணை நோய்கள் இருப்பவர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இடைக்கால விரதம் முறையை கடைபிடிக்கக் கூடாது. வாழ்க்கைக்கு ஏற்ற கேம் சேன்ஜராக இந்த விரத முறை இருந்தாலும் இதை துவக்குவதற்கு முன் அவசியம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.