

உறவுகளை எப்படி பேணவேண்டும்? இப்படி பேணுவதனால் என்ன நன்மை? பேரக்குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கும் பெற்றோர்களை ஏன் கோபிக்கக் கூடாது என்பது பற்றிய விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.
இணக்கம்:
ஒரு வீட்டில் திருமணம் மற்ற எந்த சுபநிகழ்வுகள் நடந்தாலும் விருந்தினர்களின் வருகை இருக்கும் பொழுதுதான் வீடே களைக்கட்டும். ஆதலால் நம் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை முறைப்படி உறவினர்களுக்குத் தெரிவிப்பது நல்லது. உறவுகளை பிறர் முன்பு விட்டுக் கொடுக்கக்கூடாது. சூழ்நிலை அறிந்து அளவோடு வெளியில் கூறத்தக்க நல்ல விஷயங்களை மட்டும் கூறி அவர்களை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவது நல்ல இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும்.
உறவினர்கள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முறைப்படி சென்று வரவேண்டும். ரத்த சம்பந்தமான உறவுகளின் பங்கின்றி எந்த விசேஷம் நடத்தினாலும் அது நிறைவு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படாது. ஆதலால் உறவுகளை புறக்கணித்து ஒதுக்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
புரிதல்:
கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டால் வீட்டில் பெரும் பிரச்னைகள் அதிகரித்து நிம்மதியை கெடுக்காது. குறிப்பாக ஈகோ பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வீண் சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுக்காது. முக்கியமாக கணவன் மனைவிக்குள் ஏற்படும் எந்த பிரச்னையையும் மூன்றாம் நபர் இடத்தில் எடுத்துச் செல்லாமல் தங்களுக்குள்ளே பேசி தீர்வு காணும் பொழுது தன்மானம் பாதுகாக்கப்படுவதுடன் தன்னம்பிக்கை ஏற்படும்.
மனைவியின் கோலத்தைப் பார்த்து ஆஹா… வாசலில் என்ன அழகாகப் போட்டிருக்கிறாய்? அந்த ஒரு வார்த்தை அவளை உச்சத்துக்கு கொண்டு செல்லும். கணவனின் பேச்சுத் திறனைப் பார்த்து அற்புதமான பேச்சு அது உங்களால்தான் முடியும். போதுமே! மொத்தத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் புரிந்து வைத்திருப்பதும் கணவன் மனைவி உறவை மேலும் சுவாரஸ்யப்படுத்தும்.
நெருக்கம்:
வேலைக்கு போகும் பெண்மணிகள் குழந்தையிடம் அதிக நேரம் செலவிட முடியாத அவர்களின் ஏக்கத்தை போக்குவதற்கு விதவிதமான விளையாட்டு பொருட்களை வாங்கி தந்து அவர்களை குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் குழந்தைகள் அதை விரும்புவதில்லை. தாயின் அருகாமையைத்தான் விரும்புகிறார்கள். ஆதலால் நேரம் கிடைக்கும்போது குழந்தைகளிடம் மனநெருக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும் .அப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் தவறான வழிக்கு செல்லாமல் பிடித்தமானபடி வாழ நினைக்கிறார்கள்.
ஒற்றுமை:
மாமியார்- மருமகள் உறவு ஒற்றுமையுடன் இருக்க, வேலைக்குப் போகும் பெண்மணிகள் தன் குழந்தையை பார்த்துக்கொள்ளும் உன்னத பணியை மாமியார் செய்கிறார் என்பதற்கு தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும். வயதான முதுமைப் பருவத்தில் மருமகள்தான் நம்மை தாங்கி பிடிக்கும் தூணாக இருக்கப் போகிறார். ஆதலால் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மாமியாரும் நினைத்து நடந்து கொண்டால் கசப்புக்கே வாய்ப்பு இருக்காது. இந்த ஏட்டிக்கு போட்டி இல்லாமல் இருப்பதால் குழந்தைகளும் அதை பார்த்து கவலையின்றி வளர்வார்கள்.
அன்பு:
வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற பெற்றோர்கள் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பதைக் கவனித்திருப்போம். அதற்கு காரணம் அந்த பெண்மணி தன் மகள், மகன்களை வேலைக்குச் செல்லும் அவசரத்தில் அதிக அன்பு காட்டி வளர்க்க முடியாது தவித்து இருந்ததை பேரக்குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி புரிந்துகொண்டால் அவர்கள் மீது நமக்கு கோபம் வராது. அவர்களும் மக்கள், பேரக்குழந்தைகள் நம் மீது அக்கறையுடன் இருக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள் என்று மன நிம்மதி அடைவர். இதுதான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பவர்களுக்கு நாம் செலுத்தும் அன்பு.