கட்டிடங்களில் தீத்தடுப்பு நோக்கங்களும் வழிமுறைகளும்!

Fire
Fire
Published on

கட்டடங்களில் தீயினால் ஏற்படக்கூடிய அழிவுகளைத் தடுப்பதற்கான செயல்முறைகளை, தீத்தடுப்பு (Fire Protection) அல்லது தீக்காப்பு என்று சொல்கின்றனர். பொதுவாக, கட்டிடங்களில் தீத்தடுப்பு நிலைகளை ஏற்படுத்துவதன் நோக்கம் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதாகும். கட்டடங்களில் அமையக்கூடிய தீத்தடுப்பு உத்திகள் கட்டிட வகை, அதனைப் பயன்படுத்துபவர்களின் வகை, அவர்களின் எண்ணிக்கை போன்றவைகளைப் பொறுத்து அமைகிறது.

தீத்தடுப்பு உத்திகள் என்பது கீழ்க்காணும் நிலைகளை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

  • உயிர்களைப் பாதுகாத்தல்,

  • சொத்துக்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்,

  • செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படாது பாதுகாத்தல்.

  • மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்க வேண்டியது இல்லை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், கட்டடங்கள் பரப்பளவிலும், உயரத்திலும் அதிகரித்து வருவதுடன், அதிகச் சிக்கல் தன்மை கொண்டவையாகவும் உருவாகி வருகின்றன. பல்வேறு தேவைகளுக்காக அவ்வாறான கட்டிடங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இதனால் தீ ஏற்படும் போது மக்களைப் பாதுகாப்பது முன்பைக் காட்டிலும் கடினமாகியுள்ளது.

இன்றைய கட்டிடங்கள், அவற்றின் அளவு, பல்வேறுபட்ட நவீன வசதிகளுக்கான தேவைகள், அவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றில் உள்ளிடப்படுகின்ற அதிகரித்த நிபுணத்துவக் கூறுகள் என்பவற்றின் காரணமாகக் கட்டிடங்களுக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தீயினால் பெரும் பொருளாதார நட்டங்கள் உண்டாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதை விடக் கட்டடங்கள் பல இன்றியமையாத செயற்பாடுகளுக்கும், பெறுமதியானதும், விலைமதிப்பு அற்றவையுமான பொருட்களுக்கும், சாதனங்களுக்கும் உரிய இடமாகவும் அமைவதால், மீள்விக்க முடியாத இழப்புகளும் ஏற்படக்கூடும். அத்துடன், மனித உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், கட்டிட உறுப்புக்களின் பாதுகாப்பு முக்கியமாகின்றது.

இதையும் படியுங்கள்:
காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
Fire

தீயினால் பொருளாதாரச் செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டி ஏற்படுவதும், பெரும் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துவதுடன், பல வேளைகளில் மக்களுடைய இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் நிலையும் உள்ளது.

கட்டிடங்களில் தீத்தடுப்பு மூன்று வழிகளில் செயல்படுத்தப்படுகின்றது.

1. மறைமுகத் தீத்தடுப்பு

இது கட்டிடங்களில் தீ ஏற்படாமல் தடுப்பதையும், தீ ஏற்படும் போது, அது உருவாகிய இடத்திலிருந்து வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுப்பதையும், தீயினால் கட்டட உறுப்புக்கள் அழிந்து விடும் முன் குறிப்பிட்ட நேரம் நின்று பிடிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

2. நேரடித் தீத்தடுப்பு

இது தீ ஏற்படும் போது அதனைக் கண்டுபிடித்து அணைக்கும் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளைக் குறித்து நிற்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்த மரத்தில் தீ பிடிக்காது... அந்த மரம் எந்த மரம்?
Fire

3. தீக்காப்பு அறிவூட்டல்

இது கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களும், கட்டட உரிமையாளர்களும், கட்டிடத்தின் தீத்தடுப்பு ஏற்பாடுகள் பற்றியும், அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்வது ஆகும். அத்துடன் கட்டிட உரிமையாளர்கள், அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் போன்றோர் தேவையான தீத்தடுப்பு விதிமுறைகள் பற்றி அறிந்திருப்பதையும், கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள தீத்தடுப்புச் சாதனங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான பராமரிப்பு முதலியவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதையும் இது குறிக்கும்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே ஒரு கட்டிடத்தின் தீத்தடுப்புக்கு முக்கியமானவையாகும். ஒன்றில்லாமல் மற்றொன்றைச் சரியாகச் செயல்படுத்த முடியாது. இருப்பினும், கட்டடங்களில் இவற்றைச் சமநிலையில் ஏற்படுத்துவது தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com