
ஞாபக மறதி என்பது எல்லோருக்கும் வயது வேறுபாடின்றி சில சமயங்களில் அமைந்துவிடுகின்றது. சிலருக்கு ஞாபக மறதி என்பது நோயாக தொடர்கின்றது. ஞாபக மறதி என்பது படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கட்டாயம் இருக்கக் கூடாது. அப்படி இருப்போர் நினைவாற்றலை அதிகரிக்கும் மனக்கட்டளை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
திரும்பத் திரும்ப ஒரு விசயத்தை எண்ணுவதன் மூலம் சிலருக்கு ஞாபக மறதி மறக்கடிக்கப்படுகிறது; சிலருக்கு புதுப்பிக்கப்படுகிறது. ஞாபக மறதி என்பது சில சமயம் வரமாகவும், சில சமயம் சாபமாகவும் அமைந்துவிடுகிறது. பல துன்பங்கள், கவலைகள், மறக்க முடியா நிகழ்வுகள் என பலரது வாழ்விலும் நடந்துவருகின்றன. இவைகளெல்லாம், வரமாக அமைந்த காரணத்தால், காலப்போக்கில், ஞாபக மறதி எனும் தீயில் வெந்து மடிகின்றன. அதே சமயத்தில், இந்த காலகட்டத்தில், உற்ற சமயத்தில் நமக்கு செய்யப்பட்ட நன்மைகள், உதவிகள் ஞாபக மறதி எனும் சவக்குழிக்குள் சாகடிக்கப்படுகின்றன என்பதும் சற்று கசப்பான உண்மை.
சிலருள் சிலரே பெற்ற உதவிகளை, மாயத்தோற்றம் அளிக்கின்ற, தினந்தோறும் எழுகின்ற ஞாயிறு போல் ஞாபகத்தில் மறவாது அடிக்கடி எண்ணியவாறு உள்ளனர். பலரும் அவ்வாறு இருப்பதில்லை. ஞாபக மறதி எனும் நோயை நன்றி மறத்தலுக்கு மறந்துவிட வேண்டும். நாம் பிறருக்கு செய்யும் உதவிகளை செய்தவுடன் மறந்து விட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். பிறர் நமக்கு செய்யும் உதவிகளை மறவாமல் நடந்திட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
எழுத்தாளர்கள் நினைவுபடுத்தி, நினைவுபடுத்தி எண்ணங்களைக் கோர்வையாக்கி ஞாபகக் குவியலுக்கு மறவாது கொண்டு வருதல் மூலமே வெற்றியாளராக வலம் வர முடிகின்றது. கவனமாய் கேளுங்கள் என வகுப்புகளிலும், கவனமாக இருங்கள் என பெரியவர்களும், பொதுவான விழிப்புணர்வு வாசகங்களும் வலம் வருகின்றன. கவனம் சிதறுதல் கவனமின்மை ஞாபக மறதிக்கு வழிவகுக்கின்றன.
ஞாபக மறதியை கொன்றவர்கள் ஞானிகளாகவும், புகழ் பெற்றவர்களாகவும் வலம் வருகிறார்கள். ஞாபகம், ஞாபகமாயிருந்தால், ஞாலத்தை ஞாயிறு போல் வெல்லலாம். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு ஞாபக மறதியாளர். ஆனால் அவரது அயராத உழைப்பால் பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து நோபல் பரிசு வென்றார். எல்லோரும் ஐன்ஸ்டின் போன்று ஆகிவிட முடியாது.
வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு ஞாபக சக்தி அதிகம் இருக்க வேண்டும். அதற்கானப் பயிற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். கல்வி, வணிகம், வாழ்க்கை, எழுத்தாற்றல் என பல கலைகளில் வலம் வர வேண்டுமெனில் ஞாபக சக்தி கூடுதல் பலமாகும்.
வயது முதிர்வின் காரணமாக இயல்பாக ஞாபக மறதி வருகிறது. அதைக் கூட அன்றாட உடற், மனம், உணவு பயிற்சியென வென்றுவிடுகிறார்கள் பலரும். சிலர் யானையை விட அதிக ஞாபக சக்தி உடையவர்களாக இருக்கிறார்கள்.
பல சமயங்களில், ஞாபக மறதி என்பது கசப்பான உணர்வுகளை, நினைவுகளை, அனுபவங்களை, மறப்பதற்கு உரமாக இருக்கிறது. மனைவி மரணித்துக் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே கூடத்தில் ஓர் மூலையில் கணவர் உணவருந்திக் கொண்டிருக்கிறார். அங்கே ஞாபக மறதி நல்லதா? கெட்டதா? எனக் கேட்டால் என்ன சொல்ல இயலும்?