கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளைப் பலரும் மேற்கொள்கின்றனர். அந்த வகையில், வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கோபத்தைத் தணிக்க சில பரிந்துரைகளை இந்தப் பதிவில் காண்போம்.
யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்துகொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். இது, உறவுகளுக்கிடையே நீண்ட கால பந்தத்தை உருவாக்கும். 'அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை' எனும் பார்வையிலிருந்து விலகி, 'நான் என்ன செய்தேன்' என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும், ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
கோபம் வந்தவுடன் அதை உணர்ந்துகொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
நேர்மறை மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.
சிரிக்கப் பழகுங்கள், நகைச்சுவைத் திரைப்படங்கள், கார்ட்டூன் படங்கள் பாருங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
‘இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல், சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா?’ என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமலே போய்விடும்.
மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும். வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும். கோபத்தை வெல்லக்கூடிய ஆற்றல் மன்னிப்புக்கு மட்டுமே உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.