உறவுகளைப் பேணுவதிலேயே உள்ளது மகிழ்ச்சி!

Happiness lies in maintaining relationships
Happiness lies in maintaining relationshipsImg Credit: Pinterest

ரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி என ஆரம்பித்து அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, மாமா, சித்தி, சித்தப்பா என இன்னும் பல உறவுகள் இன்றி பெரும்பாலானோர் தனித்து விடப்பட்ட தீவுகள் போன்று வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேர் உறவுகளை மதித்துப் பாதுகாக்கிறோம் என்பது கேள்விக்குறிதான். உறவினர்களை அரவணைத்து சென்ற காலம் மலையேறி விட்டது. அதனால்தான் பல சமயங்களில் நாம் தனித்து விடப்படுகிறோம். உறவுகளின் மகத்துவம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூட சொல்லலாம்.

குடும்ப உறவு முறைகள் என்பது அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தனது மகனுக்கு உடல் நலமில்லாவிட்டால் தாய்க்கும், தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கே அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகின்றனர். அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர். அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும் பொழுது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன. மேலும், சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும்போது மன வலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. உறவுகளின் வலிமை.

இன்றைய பரபரப்பான பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பர்களின் முகம் பார்க்க முடியவில்லை. நேரமில்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி மனதைத் தேற்றிக் கொள்கிறோம். காரணம், வசதிகளும், வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன. அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி, தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது. பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது.

இதையும் படியுங்கள்:
வாய்வு தொல்லைக்குக் காரணமாகும் உணவுகள் எவை தெரியுமா?
Happiness lies in maintaining relationships

தன் நலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன. ஒரு மரம் தளிர்க்க நல்ல நிலமும் நீரும் தேவைப்படுவது போல, மனித வாழ்வு சிறக்க உறவு முறைகளின் அன்பும் அரவணைப்பும் அவசியம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஒருவருக்காக ஒருவர் உருகித் தவித்து அன்பு செலுத்தும் வீட்டில்தான் ஆனந்தம் அமைதி கொள்கிறது.

அன்பு கொண்ட உள்ளத்தை விட உலகில் உயர்ந்தது வேறென்ன? அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள்தான் வாழ்க்கையை மேன்மையாக்கும். இனியாவது உறவுகளோடு ஒட்டி வாழ்ந்து உறவுகளை வளர்ப்போம்; மேன்மையுடனே வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com