

வீட்டுக் கடன் காப்பீடு (Home Loan Insurance) என்பது கடன் வாங்கியவர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிடும்போது அல்லது இயலாமை ஏற்படும்போது, நிலுவையில் உள்ள கடன் தொகையைக் காப்பீட்டு நிறுவனமே வங்கிக்குச் செலுத்த உதவும் ஒரு பாதுகாப்புத் திட்டமாகும். இது குடும்பத்தினரை கடன் சுமையிலிருந்து பாதுகாக்கிறது.
1) வீட்டு கடன் காப்பீடு மற்றும் வீட்டுக் காப்பீடு ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு:
வீட்டுக் கடன் காப்பீடும் வீட்டு காப்பிடும் முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், பலர் அவற்றை அடிக்கடி குழப்பிக்கொள்கிறார்கள்.
வீட்டுக் காப்பீடு என்பது தீ, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குறிப்பிட்ட அபாயங்களுக்கு எதிராக நாம் சொந்தமாக வைத்திருக்கும் சொத்து அல்லது வீட்டிற்கு பாதுகாப்பு அளிப்பதாகும். இந்த காப்பீடு நம் வீட்டில் ஏற்படும் சேதங்களை சரி செய்வதற்கான செலவு ஈடு செய்யும்.
வீட்டுக் கடன் காப்பீடு என்பது ஒரு சொத்தை வாங்குவதற்காக எடுக்கப்பட்ட கடனுக்கான பாதுகாப்பை குறிக்கிறது. இந்தக் காப்பீட்டு திட்டங்கள் கடன் வாங்கப்பட்ட நேரத்தில் இருந்து அதன் நிலுவையில் உள்ள பொறுப்புகளுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.
அதாவது உடல் ஊனம், வருமான இழப்பு அல்லது கடுமையான நோய் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளால் நம் வீட்டுக் கடன் மாதாந்திரத் தவணைகளை நம்மால் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வீட்டுக் கடன் காப்பீட்டு வழங்குநர்கள் நமக்காக அவற்றை ஈடு செய்வார்கள்.
எனவே பெரும்பாலான கடன் வழங்குபவர்கள் வீட்டுக் காப்பீட்டை கட்டாயம் ஆக்கியுள்ளனர். இருப்பினும் வீட்டுக் கடன் காப்பீடு கட்டாயம் இல்லை. அது பெரும்பாலும் கடன் வாங்குபவரின் விருப்பத்தைப் பொறுத்தது. இந்த முக்கிய வேறுபாட்டை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
2) வீட்டுக் கடன் காப்பீட்டிற்கு எவ்வளவு செலவாகும்?
சொத்தின் மதிப்பு, இருப்பிடம் மற்றும் பல காரணிகளைப் பொறுத்து வீட்டுக் கடன் காப்பீட்டுச் செலவுகள் கடன் வழங்குநர்களிடையே மாறுபடும்.
3) இதன் முக்கிய அம்சங்கள்:
இந்தக் காப்பீட்டுத் தொகையும் கால அளவும் நம் வீட்டுக் கடனின் காலம் (15, 20 அல்லது 30 ஆண்டுகள்) போன்றே அமையும். பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், காப்பீட்டு நிறுவனம் நிலுவைத்தொகையை நேராக வங்கிகளுக்கோ அல்லது கடன் வழங்குநருக்கோ செலுத்தும்.
கடன் அசல் தொகை குறையக் குறைய, காப்பீட்டுத் தொகையின் மதிப்பும் தானாகவே குறைந்து கொண்டே வரும்.
இதற்கான பிரீமியத்தை ஒரே முறையில் ஒற்றைக் கட்டணமாகவோ அல்லது மாதாந்திர இஎம்ஐ தொகையுடன் சேர்த்தோ செலுத்தலாம். கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் கடுமையான நோய்கள், வேலை இழப்பு அல்லது விபத்தினால் ஏற்படும் உடல் ஊனம் போன்றவற்றுக்கும் கூடுதல் காப்பீடு பெறலாம்.
4) இதன் முக்கிய நன்மைகள்:
கடன் வாங்கியவர் இல்லாத சூழலில் குடும்பத்தின் மீது கடன் சுமை விழாமல் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதனால் குடும்பத்தினர் கடனை அடைக்கத் திணற வேண்டியதில்லை. காப்பீட்டு நிறுவனம் நேரடியாக வங்கியுடன் பேசி நிலுவைத் தொகையை செலுத்தி விடும்.
நிலுவைக் கடன் உடனடியாக அடைக்கப்படுவதால், வங்கி வீட்டைப் பறிமுதல் செய்யும் சூழ்நிலை தவிர்க்கப்படுகிறது.
காப்பீட்டுக்கான பிரீமியம் தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C மற்றும் 80D யின் கீழ் வரிச் சலுகை பெறலாம். ஆனால் பிரீமியம் தொகையை கடனுடன் சேர்த்து இஎம்ஐ-யாக செலுத்தினால் இந்த வரிச் சலுகை கிடைக்காது.
பெரிய தொகையைக் கடனாகப் பெற்ற பிறகும், எதிர்பாராத அவசர காலங்களில் குடும்பத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் வராது. எனவே கடன் திருப்பிச் செலுத்துவது குறித்த கவலை இன்றி நீண்ட காலத்திற்கு நிம்மதியாக இருக்க உதவுகிறது.
வீட்டுக் கடன் காப்பீடு எடுப்பது ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி கட்டாயம் இல்லை என்றாலும், நம் குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், எதிர்பாராத நிதி நெருக்கடிகளிலிருந்து உங்கள் குடும்பத்தையும் சொந்த வீட்டையும் பாதுகாக்கும் சரியான காப்பீட்டு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.