

மழைக்காலம் தொடங்கி குளிர்காலம் வரை சிலர் குளிப்பதற்கு மிகவும் சிரமப்படுவர்; அதற்குக் காரணம் இந்த ‘சுடு தண்ணீர், ஜில் தண்ணீர்’ பிரச்னைதான். இதில் எது சிறந்தது? இதை எப்படி சமாளிக்கலாம்? சுடு தண்ணீர் இல்லை என்றால்?
இந்தியாவின் பருவமழை அல்லது குளிர் காலங்களில் நம் உடல் ஏற்ற இறக்கமான ஈரப்பதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை எதிர்கொள்கிறது. இதில் ஹீட்டர்கள் அல்லது கீசர்களில் (geysers) உபயோகித்து குளித்து பழக்கப்பட்டவர்கள், அவை செயலிழந்தால், வேறு வழியில்லாமல் குளிரை தாங்கிக்கொள்ள அவசியமாகிறது. இதற்கு சில பாரம்பரிய முறைகள் பயனுள்ள தீர்வுகளை வழங்குகின்றன.
கடுகு அல்லது எள் போன்ற எண்ணெய்களைக் குளிப்பதற்கு முன் உடலில் தடவுவதன் மூலம் தொடங்குங்கள். இவை குளிரை எதிர்க்க (thermal barrier) பயன்படுகின்றன. பின் உடலில் தேவையான ஈரப்பதத்தையும் தக்கவைத்து, ரத்த ஓட்ட சுழற்சியையும் தூண்டி உடலுக்குக் கதகதப்பைத் தருகின்றன.
இதோடு குளிப்பதற்குமுன் வெறுமென உடலை தேய்த்துக்கொள்வதால் உடலில் ரத்த ஓட்டத்தைச் செயல்படுத்துகிறது; இதுவும் உடலை இயற்கையாகவே வெப்பப்படுத்துகிறது.
குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு முன் செம்பு பாத்திரங்களில் நீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பின் கிடைக்கும் சூரிய ஒளியில் அதை வைத்துவிடுங்கள்; இதனால் பல நுண்ணுயிர் எதிர்ப்பு நன்மைகளையும் (antimicrobial benefits), லேசான கதகதப்பையும் பெறமுடியும்.
இதோடு குளித்த பின்பும் நடுக்கத்தை உணர்ந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடைகளை அணிந்து; இஞ்சி, வெல்லம் மற்றும் நெய் போன்ற வெப்பமூட்டும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடல் வெப்பத்தைப் பராமரிக்க உதவுகிறது.
சுடு தண்ணீர் பிரியர் Vs ஜில் தண்ணீர் பிரியர்களுக்கு:
குளிர் காலத்தில் சூடான நீரில் குளிப்பது ஆறுதலை அளிக்கிறது. இது தசைகளைத் தளர்த்துகிறது. உடலில் திரவ சுழற்சியை மேம்படுத்துகிறது. சுவாசக் கோளாறுகளைப் போக்குகிறது. இருப்பினும் இதன் நீடித்த பயன்பாடு உடலில் உள்ள இயற்கை எண்ணெய்களை (natural oils) அகற்றி; ஒரு வறண்ட, அரிப்புடன் காணப்படும் சருமமாக மாற்றிவிடும். இறுதியில் பலவீனமான சருமத்திற்கு (weakened skin barriers) வழிவகுக்கும்.
மறுபுறம் குளிர்ந்த நீர் குளியல் ஆரம்பத்தில் சிலருக்குச் சங்கடமாக இருந்தாலும்; அதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மனக் கூர்மையை (Promote mental sharpness) ஊக்குவிக்கும்.
இறுதியில் குளிர்ந்த நீர் குளியல் நம் சரும துளைகளை இறுக்கமாக்கும். இதனால் நம் உடலில் இருக்கவேண்டிய எண்ணெய் இழப்பையும் தடுக்கும் (prevents excessive oil loss). இது பருவமழைக் காலத்தில் சருமம் தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்க உதவும்.
அப்போ எதுதான் சரி? சூடான அல்லது குளிரான குளியல் என இரண்டிற்கும் சில கலவையான விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. தொடர்ச்சியாக சூடான நீரைப் பயன்படுத்துவது சரும வறட்சி (dryness), சருமம் அலர்ஜிக்கு சுலபமாகத் தொற்றிக்கொள்ளும் வகையில் மாறிவிடும் (sensitivity).
அதேநேரத்தில், குளிர்ந்த குளியலோ சுவாசப் பிரச்னைகள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்குப் பொருந்தாது. எனவே, அனைவரும் ஒரு சீரான அணுகுமுறையைக் கடைபிடிக்கலாம். மழை அல்லது குளிர் காலங்களில் வெதுவெதுப்பான நீரைப் (Lukewarm water) பயன்படுத்துவது அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக நல்லது.