
மனிதன் ஒரு சமூக மிருகம். அவனால் சமூகத்தில் தனித்து வாழ இயலாது. சிறைச்சாலைகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவை மனிதர்களை தனிமைப்படுத்துகின்றன. எனவேதான், அவை நம்மால் விரும்பப்படுவதில்லை. நமக்கு உறவுகள் பிறப்பு, திருமணம், சமூகம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன. இவை நமது வாழ்வுக்கு பலத்தை சேர்க்கின்றன. தற்போதைய சமூகச் சூழலில் கூட்டுக் குடும்பங்கள் மறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. சிக்கலான நேரங்களில் தம் அனுபவங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரை வழிநடத்த பெரியவர்கள் எவரும் இருப்பதில்லை.
நமது வாழ்க்கை தரும் சவால்களுக்கு தீர்வு காண திறந்த உரையாடல்கள் உதவுகின்றன. இவை தனி மனிதன் தனது பெற்றோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள், பணிபுரியும் இடம், பொதுவெளிகள் ஆகியவற்றுடன் செயல்பட மிகவும் தேவைப்படுகின்றன. பல போர்கள் முறையான பேச்சுவார்த்தையால் தவிர்க்கப்பட்டுள்ளதாக வரலாறுகள் உள்ளன.
உறவுகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு தொடக்கத்திலேயே தீர்வினைக் காண வேண்டும். ஆனால், நம்மில் பலர் மற்றவர்களில் உண்மை நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் உறவுகளில் சில தவறுகளை செய்து விடுவதுண்டு. இந்த உறவுப்பிழைகள் மற்றவர்களுடனான நமது உறவுகளை மிகவும் பாதிக்கவல்லன. இதனால், சில உறவுகளை நாம் இழக்க நேரிடலாம். சில உறவுகள் வலியுடன் நீடிக்கலாம். நம்மிடம் நெருக்கமாய் இருந்த உறவுகளும் காணாமல் போய் விடலாம். இவ்வாறான உறவுப் பிழைகளினால், சமீப காலங்களில் இந்தியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இவ்வாறான உறவுப் பிழைகள் நாம் மற்றவர்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களை குற்றம் சாட்டுவதில்தான் தொடங்குகின்றன.
உறவுகளில் குடும்ப உறவுகள் நெருக்கமானவை. மிகவும் முக்கியமானவை. வாழ்நாள் முழுவதும் நம்முடன் நீடித்து வருபவை. ஆனால், பணியிட உறவுகள் அவ்வாறு அல்ல. தற்காலிகமானவை. எனினும் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையாவது தேவைப்படுபவை. இந்நிலையில் குடும்ப உறவுகளின் உரையாடல்கள் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் இருத்தல் அவசியம். உறவுகளின் உரையாடல்களில் உணர்வுகளும் உணர்ச்சிகளும் மிகவும் முக்கியமானவை.
குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் பக்குவப்பட்ட உரையாடல்கள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சாத்தியமில்லை. நமது மனம் படிப்பறிவு, பட்டறிவு, வளர்ப்பு முறை, சமூக பின்புலம், நம்பிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. நம்முடன் வாழ்க்கையில் பயணிக்கும் அனைவரும் நம்மைப் போன்றே மனக் கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. எனவே, வாழ்க்கையில் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. ஒருவரை ஒருவர் பிறரிடமுள்ள குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுவதுதான் சிக்கலில்லாத வாழ்கைக்கு அடித்தளமாக அமையும்.
வாழ்வில் நம்மை வழி நடத்த ஓர் ஆலோசகரின் உதவியை பெற்றுக் கொள்வதில் தவறில்லை. நமது வாழ்வை மேலும் திறம்பட வெற்றியுடன் கொண்டு செலுத்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். நாம் நமது உரையாடலில் பிறரின் சூழ்நிலையில் நம்மை வைத்துப் பார்ப்பது, எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்ப்பது, அறிவுப்பூர்வமாக மென்மையானக் குரலில் பேசுவது, பிறருடன் அதிக எதிர்பார்ப்பில்லாமல் பழகுவது, தவறுகளை ஏற்றுக்கொள்வது, உண்மையாக இருப்பது, மற்றவர்களின் கருத்துகளை மதிப்பது போன்றவற்றை கடைபிடிப்பது வாழ்வின் சிக்கல்களை விரைவாக தீர்க்க உதவும்.
நமது உணர்வுகளை நேரடியாகவும், கேட்பவரிடம் மதிப்புடனும் வெளிப்படுத்துவது நல்லது. உறவுகளை பலப்படுத்த மன்னிப்பும், மறதியும் மிகவும் முக்கியம். உறவுகளில் திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். உறவுகளில் சிக்கலைத் தீர்க்க நேரம் ஒதுக்காமல் அலட்சியம் காட்டுவது சிக்கலை மேலும் பெரியதாக்கும். உரையாடல் இல்லாமை உறவுகளை மெல்ல மெல்ல சிதைக்கும்.
நாம் பேசும் வார்த்தைகளுடன், நமது உடல் மொழியும் நம் மன உணர்வைப் பற்றி நிறையச் சொல்லும். நம் பேச்சும், உடல் மொழியும் ஒன்றாக இருக்கும்போது, நம் பேச்சினை மற்றவர்கள் விரும்பிக் கேட்பார்கள். பிறருடன் பேசும்போது கைகளை கட்டிக்கொள்வது நம்மை பயப்படுபவராகக் காட்டும். நமது உடலினை தளர்வாக வைத்துக் கொண்டு கேட்பவரின் கண்களை நேராகப் பார்த்து பேசுவதன் மூலம் நாம் நேர்மையானவர் என்னும் நம்பிக்கையை அவர்களின் மனதில் விதைக்க முடியும். ஒரு நம்பிக்கையுள்ள புன்னகை, விலக விரும்புபவர்களையும் நம்மோடு திரும்ப இணைக்கும். குழந்தைகளுடன் பேசும்போது, அவர்களின் அருகில் அமர்ந்து, பாசத்துடன் பேசுவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை பெற முடியும்.
ஆபத்து காலங்களில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப, துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் நமக்குத் தேவை. உறவுகள் மேம்பட விட்டுக்கொடுப்பது, முடிந்த உதவிகளைச் செய்வது, அன்பளிப்பு தருவது, குடும்ப நிகழ்வுகளில் அடிக்கடி பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து, நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் போன்றவை மிகவும் உதவும். இனியேனும், உறவின் உன்னதம் உணர்வோம். வாழ்வில் உயர்வோம்.