

மூப்பு, அதாவது வயோதிகம் (old-age) என்பது பிறவி எடுத்த அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால் அந்த முக்கியமான காலக் கட்டத்தில் பலர் தனிமையில் இருந்தே நாட்களைக் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அப்போதுதான், அவர்களுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்த நண்பர்கள், "இனி இவர்களுடன் இருப்பதால் நமக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை" என்றெண்ணி நிரந்தரமாக விலகிவிட்டனர் என்ற கசப்பான உண்மை புரியவருகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் சென்று கொண்டிருந்த காலங்களிலிருந்து உருவாக்கப்பட்டது அந்த 'நட்பு' என்ற பசுஞ்சோலை. ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் கவனிப்பினால் உருவான அந்த நட்பு, இறுதிவரை தொடரும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், "அது அப்படி அல்ல" என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
நண்பர்கள். ஒன்றிரண்டு முறை பரீட்சார்த்த முறையில், நீங்களாக தொடர்பு கொள்வதை நிறுத்திப்பாருங்கள். அவர்களிடமிருந்து எந்த குறுஞ்செய்தியோ, போன் அழைப்போ வராது. இதிலிருந்து 'நட்பு' என்ற பசுஞ்சோலை களையிழந்து கருக ஆரம்பித்துவிட்டதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இதை ஜீரணிக்க உங்கள் இதயம் மிகவும் கஷ்டப்படும்.
தனிமையை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராயிருந்தாலும், உங்களை சுற்றி வந்த மக்களிடம் ஆழ்ந்த புரிதலோ அன்போ இதுவரை இல்லாதிருந்ததை அறியும்போது இதயத்தில் ஒருவித சமூக வலி (social pain) உண்டாகும். உணர்வுபூர்வமாக உடனிருக்க வேண்டிய நேரங்களிலெல்லாம் நீங்கள் ஓடி ஓடி உதவியதெல்லாம் நினைவுக்கு வரும். இப்போது, இந்த வயதான காலத்தில், அவர்கள் உங்களை தனிமைப்படுத்திவிட்டு ஓடி ஒளிந்து கொண்டிருப்பதும், அவர்கள் எப்படியெல்லாம் உங்களுடன் உறவில் இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அதற்கு நேர் மாறாக நிலைமை மாறிவிட்டதும் உங்களுக்கு வேதனையான விஷயமாகத் தோன்றும்.
நீங்களாகப் போய் தொடர்பை உண்டுபண்ணிக் கொண்டால் மட்டுமே நட்பில் உயிரோட்டம் தென்படும். நட்பு என்ற உறவு அறிவிப்பின்றி அமைதி காக்கும்போது, அந்த மாற்றம் அவர்களுக்கொரு பொருட்டாகவே தெரியாது.
ஆனால் அந்த அமைதிக்கான காரணத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளாதபோது அதைப் பற்றி கேட்பதும் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணும். வயதான காலத்து நட்புறவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், அந்த உறவில் ஒருவருக்கொருவர் பெறும் ஆதரவு மற்றும் அரவணைப்பு போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மற்ற சவாலான பக்கத்தை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. கவனிக்கப்படாத பக்கத்தில் உள்ள ஏமாற்றங்களும் சமநிலையற்ற தன்மையும் நட்புறவின் ஒரு பகுதிதானே.
நட்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என எந்த விதி முறையும் கிடையாது. ஒரு பக்கத்து முயற்சியாலேயே அது உயிர் கொண்டுள்ளது என்றால் எந்த நேரமும் அது முழுவதுமாக உடைந்துவிடக் கூடும். மாணவப் பருவம் போன்ற வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் உருவாகும் நட்பு தவறான புரிதல்களாலேயே உடைந்துவிடுகிறது.
உறுதியான முடிவை எடுக்கும் முன் உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசலை உண்டு பண்ணி பிறகு முற்றிலுமாக உடைத்துக் கொள்வது அதிக வலி தராது. வயது முதிர்ந்த காலத்தில் பணி ஓய்வு, குடும்பம் பிரிதல் போன்ற பல் வேறு காரணங்களால் நீங்கள் தனித்து விடப்படுகிறீர்கள். போன் கால் மற்றும் நெருங்கிய வர்களின் வருகை குறையும்போது தனிமை கொடுமையாகிறது. புகை மற்றும் குடியைவிட அதிகளவு மனதையும் உடலையும் பாதிப்படையச் செய்கிறது தனிமை.
எனவே ஒரு சிறந்த நட்பை திட்டமிட்டு, உறுதியாக தேர்வு செய்து அதை நீடித்திருக்கச் செய்யும்போது உங்கள் தனிமை உணர்வு மறையும். ஆரோக்கியமும் ஆயுளும் கூடும்.