
பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தை இப்படி இருக்கிறதே என்று புலம்புவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனரே தவிர, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. ஒரு தாய் இப்படிப் புலம்புகிறார், 'நான் பள்ளியில் படிக்கும்போது அனைத்திலுமே முதலாவது மாணவியாக வருவேன். எனக்கு படிப்பில் சோர்வு என்பதே இருந்ததில்லை. எதிலுமே நான்தான் முதலாவதாக வருவேன்.
ஆனால், என் மகள் எனக்கு நேர்மாறாக இருக்கிறாள். படிப்பில் அவளுக்கு ஆர்வமே இருப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. பள்ளிக்குப் போகவே அவளுக்குப் பிடிக்கவில்லை’ என்பதுதான் அந்தப் புலம்பல்.
அவரது மகளின் அந்த நிலைக்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். குறிப்பிட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பது, பெற்றோருக்கு கடினமாக இருக்கிறது. நன்றாக படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் அளவுக்கு மீறிய நெருக்கடி, குழந்தைகளுக்கு இருக்கும்.
ஏதேனுமொரு கற்றல் குறைபாடு மற்றும் அது கண்டுபிடிக்கப்படாமை, பள்ளியில் நடக்கும் சில சந்தோஷமான மற்றும் வருத்தத்திற்குரிய நிகழ்வுகள் போன்ற அம்சங்களில் ஏதோவொன்று குழந்தையின் செயல்பாட்டை பாதிக்கும் காரணியாக இருக்கும். அதைக் கண்டுகொள்வதுதான் அனைத்து சிக்கல்களையும் புரிந்து கொள்வதற்கான அடிப்படை.
‘தங்கள் குழந்தை படிப்பில் முதல் மாணவராக இல்லையே, தங்களின் பக்கத்து வீட்டுப் பிள்ளையைப்போல் அதிக மதிப்பெண்களை எடுப்பதில்லையே’ என்று, ஏராளமான பெற்றோர்கள் ஒப்பீடுகளிலும், வீண் கவலைகளிலுமே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். இத்தகைய அவர்களின் எதிர்மறை எண்ணமானது அவர்களது குழந்தைகளுக்கு தீங்காக முடிந்து விடுகிறது.
இளம் வயது மாணவர்களின் தற்கொலைகள் மற்றும் பெருங்குற்றங்கள் போன்ற சம்பவங்கள் பெருகி வரும் இக்காலத்தில் தமது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எந்த வகையில் ஆக்கப்பூர்வமாக உதவ வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
தங்களது பிள்ளைகளின் பள்ளியில் என்ன நடக்கிறது என்பதே தங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்பதை பல பெற்றோர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்தப் பிரச்னையைப் போக்க ஒரு குழந்தையின் அன்றாட செயல்பாடுகளில் சோம்பேறித்தனம் மற்றும் நேரமின்மை போன்ற காரணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நாம் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த நாளில், குழந்தையின் பள்ளியில் என்ன நடந்தது, அதன் நண்பர்கள் யார், நடத்தப்பட்ட பாடம், குழந்தைக்கு மிகவும் உதவியாக இருந்த ஆசிரியர்கள் ஆகிய அம்சங்களைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் குழந்தையின் சவால்களை நீங்கள் அறிந்து, அதற்கு எப்படி உதவ முடியும் என்பதை திட்டமிடலாம்.
குழந்தையைப் பற்றிய உங்களின் அதீத எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டு, அதன் இயல்பான திறன்களுக்கு மதிப்புக் கொடுக்க, ஒவ்வொரு பெற்றோரும் பழகிக்கொள்ள வேண்டும்.
முதலில் நம் குழந்தைகள் பற்றிய நமது கவலையால் புலம்பலை நிறுத்தி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்தனை செய்து அவர்கள் வாழ்க்கையில் உயரவும் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முயற்சி செய்வோம்.