

சிலர் வாய் சவடாலில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல் பேசி எதிராளியை முட்டாளாக்க பார்ப்பார்கள். எந்த ஒரு விஷயமானாலும் முந்திரிக்கொட்டை போல் முன் நின்று தான் தான் பெரியவர் என்பது போலவும், தான் சொல்வதுதான் சரி என்பது போலவும் காட்டிக் கொள்ள முயல்வார்கள். இப்படிப்பட்டவர்களை சமாளிப்பதற்கான வழிகள் சில.
குருவைப் போல் கையாள்வது:
சில பேர் தனக்குதான் எல்லாம் தெரியும் என்பதுபோல் நடந்து கொள்வார்கள். அவர்களிடம் நமக்குத் தெரிந்த கருத்தை கூறுவது கூட மிகவும் கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை கையாள்வதற்கு மிகவும் சுலபமான வழி அவர்களை நம் குருவை போல் கையாள வேண்டியதுதான்.
குழந்தைகள் போல் விதவிதமான கேள்விகள் கேட்டு அவர்களை திணறடிக்கலாம். அவர்களின் பதில் நமக்கு, அவர்கள் கேள்வியை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் புரியவைக்கும். அவர்களிடம் நம் சொந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு கேட்டு போய்விடக் கூடாது. அவர்களிடம் பேசவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஆம், இல்லை என்பது போல ஒரு சில வார்த்தைகளில் பேச்சை முடித்துக்கொள்ளலாம்.
மௌனம் காப்பது:
அலுவலகத்தில் நம்மைவிட மேலான பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொண்டால் பேசாமல் சகித்துக்கொள்ள வேண்டியதுதான். நட்பு வட்டத்தில் இது மாதிரியான நண்பர்களிடம் நாசுக்காக நாம் நினைப்பதை தெளிவாக சொல்லிவிடலாம். இப்பொழுதெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்களைவிட வயதில் சிறியவர்கள் கூட இப்படித்தான் தனக்கு எல்லாம் தெரியும் என்ற விதத்தில் பேசி நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் விவாதம் செய்வதை விட்டுவிட்டு மௌனமாக சென்று விடுவது நல்லது. இதனால் உறவுகள் இடையே ஏற்படும் கசப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.
சகித்துக் கொள்வது:
எனக்குதான் எல்லாம் தெரியும் என்று பேசுபவர்களைக் கண்டு மற்றவர்கள் பேச்சை தவிர்க்கவே விரும்புவார்கள். அப்படி பேசுபவர்களை தவிர்க்க முடிந்தால் தவிர்த்து விடலாம். முடியாத பட்சத்தில் அவர்களை பேசவிட்டு பின்பு சரியான விதத்தில் எடுத்துச் சொல்லலாம். அப்பொழுதும் கூட சிலர் விடாக்கண்டனாக தான் சொல்வதுதான் சரி, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று விடாமல் சாதிப்பார்கள். இவர் இப்படித்தான் என்று ஒரு வழிக்கு வந்து அவர்களிடம் விவாதத்தை தொடராமல், நீங்கள் சொல்வதுதான் சரி என்பது போல் தலையாட்டி விட்டு நகர்ந்துவிடலாம்.
ஒதுங்கிச் செல்வது:
எதிராளி எந்த விதமான எதிர்வாதமும் வைக்கவில்லை என்றால் நல்ல நட்பு பாராட்டி பேசிக்கொண்டே இருப்பார்கள். அதுவே யாரேனும் குறுக்கு கேள்வி கேட்டால் அதை விரும்பாமல் இருப்பதுடன், தாங்கள் அறிவாளி போல் காட்டிக்கொள்வதற்காக எதிர்த்து விவாதம் செய்வார்கள். அத்தகையவர்களிடம் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல் ஒதுங்கிச் சென்று விடுவதுதான் நல்லது. அதை விட்டு அவர்களிடம் நீங்கள் சொல்வது தவறு என்று விளங்க வைக்க முயற்சி செய்தால் அது விழலுக்கு இறைத்த நீராகும். அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது தேவையில்லாத வேலை.
அமைதி காப்பது:
அப்படி விளங்க வைத்தாலும் அவர்களுக்கு புரியப்போவதில்லை. அத்துடன் நாம் சொல்லும் அந்த கருத்துக்களை அவர்கள் ஏற்க போவதும் இல்லை. நம்முடைய நேரமும் சக்தியும்தான் விரயமாகும். அப்படிப்பட்டவர்களிடம் அமைதி காப்பது தான் நல்லது. அவர்கள் கூறுவதை சிறிது நேரம் கேட்டுவிட்டு ரொம்ப அருமையாக பேசினீர்கள் என்று கூறிவிட்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவது தான் சிறப்பு.
கவன ஈர்ப்பு:
உளவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் centre of attraction, அதாவது நம் அனைவருக்குமே கவன ஈர்ப்பு தேவைப்படுகிறது. நமக்கு பல விஷயங்கள் தெரிந்தது போல் பேசுவது, காட்டிக்கொள்வது, தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல் மார்தட்டிக் கொள்வது எல்லாமே மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகதான்.
இப்படி தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் பாவ்லா செய்தால் நாம் பிறருக்கு எதிரில் அசிங்கப்பட்டு விடுவோம் என்பதை மறந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணமே! இதைப் புரிந்துகொண்டால் போதும் இப்படிப்பட்டவர்களை எளிதாக சமாளித்துவிடலாம்.