

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சமூக அங்கீகாரத்துடன் ஒரு பந்தத்தில் இணைவதை குறிக்கிறது. இந்த திருமணம் கடவுள் சாட்சியாகவும், அக்னி தேவன் முன்னிலையில், பெரியோர்கள் ஆசியுடன் நடைபெறக் கூடிய ஒரு அற்புதமான வாழ்வியல் நிகழ்வாகும். இந்நிகழ்வில் கடினமான காலங்களிலும் அன்பு, மரியாதை, நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பு ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் தருவதாக உறுதியளிக்கப்படுகிறது.
திருமணத்திற்குப் பின்னர் மனஅழுத்தம்:
திருமணம் நடைபெறும்போது அனைவருக்கும் அது மகிழ்ச்சியான தருணமாகவே இருக்கிறது. அதன் பின்னர், அது மகிழ்ச்சியை மட்டுமே தாங்கி இருப்பதில்லை. வாழ்க்கை அடுத்த அடுத்த கட்டத்திற்கு மாறிக்கொண்டே இருக்கும்போது பொறுப்புகள் ஏராளமாக வந்து சேர்கின்றன. திருமணத்திற்கு பின்னர் ஒருவரின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகலாம். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயமும், பழக்கவழக்கங்களும், யோசனைகளும் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இதனால் திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியர் மனநலப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வது அதிகரிக்கிறது.
இவர்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி யாரிடமும் சொல்ல முடியாமல், உள்ளுக்குள் தவிக்கிறார்கள். இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு அவர்களின் சந்தோஷம் சிறிது சிறிதாக போய்விடுகிறது. திருமணம் ஏன் செய்தோம்? என்று கூட அவர்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது. இந்த பிரச்னையில் சிக்கியிருந்தால் கவலையை விடுங்கள். ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் உங்கள் வாழ்வில் வசந்த காலத்தை மீட்டெடுக்க முடியும்.
குடும்பத்தில் ஆதிக்கம் செய்ய முயலாதீர்:
திருமணத்திற்கு பின் ஒருவர் குடும்பத்தின் மீது ஒருவர் புதிதாக ஆதிக்கம் செலுத்த நினைக்காதீர்கள். உங்களுக்கு தகுந்த மாதிரி குடும்பத்தையோ, உங்களின் துணையையோ மாற்ற நினைக்காதீர்கள். பெரும்பாலான திருமணமான தம்பதிகளின் மன அழுத்தம் இதிலிருந்து தான் ஆரம்பமாகிறது.
உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்:
நீங்கள் உங்களது துணையை எப்படி உங்களுக்கு தகுந்தார்போல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அதுபோலவே அவரும் உங்களை நினைப்பார். உங்களது துணை விரும்புவதுபோல் நீங்கள் உங்களை சில விஷயங்களில் மாற்றிக்கொள்ளலாம். அது அவருக்கு அதிக மகிழ்ச்சியினை கொடுக்கும், அதைப் பார்த்து நீங்கள் விரும்பும் வகையில் அவரும் மாற முயற்சிக்கலாம். நீங்கள் எப்போதும் உங்களது துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் அது உங்களுக்கும் திரும்பக் கிடைக்கும்.
திடீர் பொறுப்புகளுக்கு பயப்படக் கூடாது:
திருமணத்திற்கு பிறகு புதிய தம்பதிகளுக்கு வீட்டு மேலாண்மை, நிதி சார்ந்த திட்டமிடல், எதிர்கால பொருளாதர திட்டமிடல், சேமிப்பு ஆகியவற்றை நிர்ணயம் செய்யும் பொறுப்பு ஏற்படும். இந்த பொறுப்புகளை கண்டு பயந்தால் அது அதிக மன அழுத்தத்தை உண்டாக்கும். இதற்கு மாறாக அந்த பொறுப்பினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் எப்போதும் சுமையாக தெரியாது.
திருமணத்திற்கு பின் குறையும் சுதந்திரம்:
திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கை முறை மாறத் தொடங்குகிறது, தாமதமான தூக்கம் நள்ளிரவில் நண்பர்களுடன் சுற்றுவது , கட்டுப்பாடற்ற தன்மை போன்ற பல செயல்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். திருமணத்திற்கு முன் இருந்த சுதந்திரத்தை விட்டு, தற்போது ஒரு கட்டுப்பாட்டிற்கு வரவேண்டி இருக்கும். அதை கட்டுப்பாடாக கருதாமல் திருமணமானவரின் பொறுப்பாக எண்ண வேண்டும்.
நிதி சிக்கல்கள்:
திருமணத்திற்கு பின்னர் திடீரென்று பல செலவுகள் நிச்சயம் வரலாம். அதற்கேற்ப உங்களுக்கான நிதியினை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. முன்பைவிட இப்போது நிதியினை பகிர்ந்து கொள்ளவும், நிதிக்கான தேவையில் இன்னொருவரும் உடன் இருக்கிறார் என்ற மனநிலையும் வரவேண்டும். அதனால் தேவையற்ற செலவுகளை சில காலங்கள் குறைத்து, சேமிப்பினை அதிகப்படுத்த வேண்டும்.
திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற:
முதலில் உங்கள் வயதினை கடந்தும் திருமண மாகாதவர்களை பார்த்து, உங்கள் மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இருவருக்கும் உள்ள பரஸ்பர பிரச்னைகளை தினமும் நீங்களே பேசி அதற்கு முடிவு கட்டுங்கள். புரிந்துகொள்ளவும் விட்டுக் கொடுக்கவும் தினமும் சில மணி நேரங்கள் பேசுங்கள்.
நிதி சார்ந்த விஷயங்களை இருவரும் சேர்ந்தே திட்டமிடுங்கள், பொறுப்புகளை சமமாக பிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்னையில் முன்றாம் நபரின் கருத்துக்களை எப்போதும் உள்ளே கொண்டு வராதீர்கள். தியானம், உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகிய ஏதேனும் ஒன்றை தினமும் இருவரும் சேர்ந்து செய்ய திட்டமிடுங்கள். இவற்றை எல்லாம் கடைபிடித்தால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மலரும்.