
அழுகை என்பது ஒரு இயற்கையான செயல். இது பல்வேறு காரணங்களால் தூண்டப்படுகிறது. மக்கள் ஏன் அழுகிறார்கள் என்பதற்கு பல்வேறு உளவியல் மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. காரசாரமான உணவை சாப்பிடும்பொழுது, பச்சை மிளகாயை கடிக்கும்பொழுது, தொலைக்காட்சியில் உணர்ச்சி மயமான காட்சிகளைக் காணும்பொழுது நம்மை அறியாமல் கண்களிலிருந்து நீர் அருவி எனக் கொட்டும்.
அழுகை என்பது சோகம், வலி, ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். அழுகையின்பொழுது உடல் ரீதியாகவும் சில மாற்றங்களைக் காணலாம். முகம் கோணிப்போவது, ஒலி எழுப்பி அழுவது, சில நேரங்களில் மகிழ்ச்சி, பயம் போன்ற காரணங்களினாலும் அழுகை வரும். அழுகையின்பொழுது மூளையிலிருந்து குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
1. காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு: குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட உதவி பெறுவதற்காக அழுவது நடைமுறையில் உள்ளதுதான். குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அவர்களின் கவனத்தை பெற்று தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ள அழுகையை பயன்படுத்துவதுபோல் பெரியவர்களும் நினைத்ததை சாதித்துக்கொள்ள சில சமயம் அழுகிறார்கள். நாம் ஏதேனும் ஆபத்தில் இருக்கும்பொழுது அல்லது எதிர்வினையை கட்டுப்படுத்த முடியாதபோது அழுகையின் மூலம் வெளிக்காட்டுகிறோம்.
2. வலியிலிருந்து நிவாரணம் பெற: வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு மக்கள் அழுகிறார்கள் என்பதை அறிந்தால் நிச்சயம் ஆச்சரியம்தான் உண்டாகும். உடல் மற்றும் உணர்ச்சி வலியை போக்குவதற்கு அழுகை என்பது ஒரு இயற்கையான வழியாகும். உடல் அல்லது மனரீதியான வலியை வெளிப்படுத்துவதற்கும் அழுகை உதவுகிறது. அழுகை ஆக்ஸிடாசின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற உணர்ச்சி துயர நிவாரணிகளை வெளியிடுகிறது.
3. அனுதாபம் பெறுவதற்கு: அழுகையின் மூலம் எளிதாக பிறரின் அனுதாபத்தைப் பெற்று விடலாம். மற்றவர்களின் வலியை உணரும்பொழுது அழுவதன் மூலம் அனுதாபத்தைக் காட்டலாம். இது மற்றவர்களின் வலியை நாம் புரிந்துகொண்டதை காட்டுவதற்கான ஒரு வழியாகும்.
4. ஆறுதலையும் ஆதரவையும் பெறுவதற்கு: ஏதேனும் ஒரு கஷ்டம் அல்லது துயரம் ஏற்பட்டால் அழுவது என்பது இயற்கையாக நிகழும். அந்த சமயத்தில் பிறரின் ஆறுதலையும், ஆதரவையும் பெறுவதற்கு இந்த அழுகை பயனுள்ளதாக உள்ளது. ஆறுதலையும் ஆதரவையும் பெறுவதன் மூலம் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்த இது ஒரு வழியை உண்டாக்குகிறது.
5. உதவி பெறுவதற்கு: சிலர் அழுகையை ஒரு சிறந்த சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். அழுகையை கையாளுவதன் மூலம் மென்மையான இதயம் கொண்டவர்களை எளிதாக வீழ்த்தி, அழுகை வார்த்தைகள் பேசி தாங்கள் நினைத்ததைப் பெறுகிறார்கள்.
6. உணர்வு ரீதியான பாதிப்பு: தனக்கு நெருக்கமான ஒருவர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறக்கும்பொழுதோ உணர்ச்சிப் பெருக்கில் அழுது விடுவது. ஒருவரின் வேதனையை வெளிப்படுத்துவதில் அழுகை முக்கியப் பங்கு வகிக்கிறது. சிலர் உணர்ச்சிப்பூர்வமான திரைப்படத்தைப் பார்க்கும்பொழுது கூட அந்த கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் தன்னை அறியாமல் அழுது விடுவார்கள். துக்கம், இழப்பு அல்லது சோகமான நிகழ்வுகளால் ஏற்படும் அழுகை இது.
7. மகிழ்ச்சி அழுகை: மகிழ்ச்சியான தருணங்களில் கூட அழுகை ஏற்படும். இது சந்தோஷத்தின் மிகுதியால் வருவது. சாதனைகள் செய்யும்பொழுது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீர் விட்டு அழுவது என்பது இயல்பாக நடைபெறக்கூடியது.