
அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களையும் நாம் அனைவரும் கட்டாயம் புரிந்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் எந்த மொழியில், எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் மீது தனிப் பாசம் உண்டு. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பல மடங்கு அன்பினை தனது மகள் மேல் கொண்டிருப்பர் அப்பாக்கள். உலகில் அப்பாக்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரம் மகளாவாள்.
ஓர் ஆண் மகன் தனது வாழ்நாளில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாகக் கிடைத்த முத்தான மகள்தான் அவனது இறப்பு வரை அவனுடன் இருக்கிறாள். அதனால் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும், அக்கறையும் அலாதியானது. அற்புதமானது.
பெரும்பாலும் மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப பல காரணங்கள் உள்ளன. தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்கள் தன்னைத் தொடரும் நேர்மையான தோழனாகத் தங்களது தந்தையை மகள்கள் பார்க்கிறார்கள். மகள்கள் மணமாகி மறு வீட்டுக்குச் செல்லும் காலம் வரை தங்களது வாழ்நாளில் அதிக நேரத்தை அவர்களது தந்தையுடன்தான் செலவழிக்கிறார்கள். மகள் மணமாகி தன்னைப் பிரிந்துசெல்லும்போது தந்தையால் பெரும்பாலும் அழாமல் இருக்க முடிவதில்லை. ஆனால், தாய் எதார்த்த உலகைப் புரிந்துக் கொண்டு அமைதியாய் இருக்கிறாள்.
தங்களை எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தைதான் என மகள் திடமாக நம்புகிறாள். மகள்களுக்கு அவள் பிறந்தது முதல் வளரும் ஒவ்வொரு நாளும், உலகைக் கற்றுத்தரும் ஆசான் தந்தைதான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புதான் என்றாலும், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு அவர்களின் அப்பாவே ஆகும். அப்பாக்கள் தங்கள் மகன்களிடம் காண்பிக்கும் அதே அளவிலான கோபத்தை, தங்களது மகள்களிடம் எந்த சூழ்நிலையிலும் காண்பிப்பது இல்லை. வீட்டில் தவறு செய்யும் சகோதரன் வாங்கும் அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்குவது இல்லை. அவள் செய்யும் தவறுகள் அப்பாக்களால் எளிதில் மறக்கப்படுகின்றன. மன்னிக்கப்படுகின்றன.
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், ‘முடியாது, இல்லை’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. அவர்களால் அது முடிவதும் இல்லை என்பதுதான் உண்மை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள். வெளியிடங்களுக்குச் சென்று தாமதமானால், அது எந்நேரமாக இருந்தாலும், கால் கடுக்க காத்திருந்து அழைத்துவரும் உண்மையான காவலன் அப்பாதான்.
காதல் என்றால் என்ன? பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன? மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலைப் புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகளின் முதல் காதலன் அப்பாதான். தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் பெருமைமிகு கதாநாயகன் அப்பாதான். அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள்தான்.
ஒரு பெண்ணின் உறவில், அனைவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை வரும். ஆனால், எப்போதும், மாறி மாறி, தோன்றுபவர் அப்பாதான். அப்பாவிடம் அதிகமான மாற்றங்களைக் காண முடியும். அவற்றில் மகளின் நலனை மட்டுமே பார்ப்பவர் அப்பா. ஆனால், அம்மா, அப்பா மட்டும்தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள். கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு தடை போட முடியாமல் தவித்துதான் போகிறது.
ஒரு மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், கதாநாயகன், காவலன் என எண்ணற்ற பாத்திரங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்தான் அப்பா. ஆதலால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள். அப்பா, மகள் உறவு அற்புதமானது என்பதில் நம்மில் யாருக்கும் இரு வேறு கருத்துகள் இருப்பதற்கே வாய்ப்பே இல்லை எனலாம்.