
பொதுவாக, நாடாப்புழுக்கள் (Tapeworms) என்றாலே அது வயிற்றுப் பிரச்சனையாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால், நம் உணவு மூலம் உடலுக்குள் நுழையும் இந்த ஒட்டுண்ணிகள், குடலில் மட்டுமல்லாது, சில சமயங்களில் ரத்தத்தின் வழியாக மூளைக்கும் ஊடுருவி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும். மருத்துவ ரீதியாக, இந்த நிலை நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் (Neurocysticercosis) என்று அழைக்கப்படுகிறது.
இது மூளை தொற்று மற்றும் வலிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை கூட ஏற்படுத்தலாம். இந்த ஆபத்தான ஒட்டுண்ணி பெரும்பாலும் சமைக்கப்படாத அல்லது சரியாகக் கழுவப்படாத காய்கறிகள், குறிப்பாக சேற்றில் வளரும் காய்கறிகள் வழியாகவே நம்மை வந்தடைகின்றன.
புழுக்கள் நுழைய வாய்ப்புள்ள காய்கறிகள்:
முட்டைக்கோஸ: முட்டைக்கோஸ் இலைகள் பல அடுக்குகளைக் கொண்டுள்ளன. இந்த அடுக்குகளுக்கு இடையே சிறிய பூச்சிகள் மற்றும் நாடாப்புழு முட்டைகள் எளிதில் மறைந்துவிடும். இதைச் சரியாகக் கழுவாமல் அல்லது அரைகுறையாக வேகவைத்து சாப்பிட்டால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
காலிஃபிளவர்: காலிஃபிளவரில் உள்ள சிறிய குழிகள் மற்றும் பூக்களுக்கு இடையில் மண் மற்றும் ஒட்டுண்ணிகள் சிக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகம். நாடாப்புழு முட்டைகளும் இந்த விரிசல்களில் பாதுகாப்பாக ஒளிந்திருக்கும்.
கீரை: கீரை இலைகள் பெரும்பாலும் பச்சையாகவும், சாலட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைச் சரியாகக் கழுவாமல் சாப்பிட்டால், நாடாப்புழுக்கள் உடலை அடையும் வாய்ப்பு அதிகம்.
பசலைக் கீரை: பசலைக் கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகள், மண் மற்றும் அசுத்தமான தண்ணீருடன் வரும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்படலாம். வயல்களில் கழிவுநீர் அல்லது அழுக்கு நீர் பாசனம் செய்யப்படும்போது இந்த புழுக்கள் தங்க வாய்ப்பு அதிகம்.
ப்ரோக்கோலி: காலிஃபிளவரைப் போலவே, ப்ரோக்கோலியின் சிறிய பூக்களுக்கு இடையேயும் நாடாப்புழு முட்டைகள் எளிதில் சிக்கிக்கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன்பு அதைச் சுடுநீரில் ஊறவைத்து நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
முள்ளங்கி மற்றும் முள்ளங்கி இலைகள்: முள்ளங்கி நிலத்திற்குள் வளரும் ஒரு காய் என்பதால், மண் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள் அதன் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும். அதன் இலைகளிலும் சிறிய பூச்சிகள் மறைந்திருக்கலாம்.
கொத்தமல்லி இலைகள்: கொத்தமல்லி இலைகளின் மெல்லிய இலைகளில் பூச்சிகள் மற்றும் முட்டைகள் எளிதில் மறைந்துவிடும். இவை பெரும்பாலும் சாலடுகள் மற்றும் அலங்காரப் பொருட்களில் நன்கு கழுவாமல் பயன்படுத்தப்படுவதால், தொற்று அபாயம் அதிகரிக்கிறது.
தடுப்பதற்கான எளிய வழிகள்:
இந்த ஆபத்தான நிலையைத் தவிர்க்க, நாம் காய்கறிகளைக் கையாளும் முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
காய்கறிகளை குறைந்தது 3-4 முறை ஓடும் நீரில் நன்கு கழுவ வேண்டும்.
இலை மற்றும் பூக்கும் காய்கறிகளை வெதுவெதுப்பான நீரில் 10-15 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தம் செய்வது மிகவும் நல்லது.
உப்பு அல்லது வினிகர் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவது, பூச்சிகள் மற்றும் முட்டைகளைக் கொல்ல உதவும்.
இந்த 7 காய்கறிகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல. மாறாக, அவற்றைச் சமைக்கும் முன் மிக மிகக் கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.