‘எட்டடுக்கு மாளிகை, ஏகபோக செல்வம் இருந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்பி கொண்டிருக்கிறோம்.. ஆனால், அடிப்படை தேவைகளும், அன்றாட வாழ்விற்கு அவசியமானதும் கிடைத்து, சந்தோஷத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த பத்தையும் பத்தரை மாற்று தங்கமாக எண்ணுங்கள், வாழ்வு வளம் பெறும். பத்தைப் படி மகிழ்ச்சியைப் பிடி..
பிரம்மாண்டமான வீடு கட்டிக் கொள்கிறீர்கள். பால்கனி… வீட்டிற்குள்ளே நீச்சல் குளம், வீட்டின் முன்புறமும் பின்புறமும் மரங்களும், வண்ண வண்ண பூச்செடிகளும் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது. மாலை வேளையில்…. பால்கனியில் பிரம்பிலான ஊஞ்சலில் காற்றோட்டமாக அமர்ந்து ஆழ்ந்த சுவாசம் விடுகிறீர்கள். சுவர்களில் வண்ணமயமான வண்ணங்கள் சினிமா செட் போல கண்ணைக் கவர்கிறது. சுவற்றில் ஒரு கிறுக்கல் இல்லை. பறவைகளின் சத்தமும் கேட்கிறது. ஆனால் ஒரே ஒரு சத்தம் மட்டும் கேட்கவில்லை. ஆம் அதுதான் மழலைச் சத்தம் அதைத்தான் இந்த பொன்னான வரிகளும் சுட்டிக் காட்டுகிறது. வீட்டில் கேட்க வேண்டியது சலங்கை ஒலி அல்ல; கேட்க வேண்டியது சிரிப்பொலி.
வீட்டு எஜமானி பட்டுப்புடவைச் சரசரக்க… தலையில் மல்லிகை மணமணக்க.. டீ.வி. சீரியல்களில் வரும் சின்னத்திரை நடிகை போல கழுத்திலும், கைகளிலும் பொன் நகைகளால் பூட்டி அழகாக வளைய வருகிறாள்… ஆனால், அவள் முகத்தில் ஒன்றில்லை. ஆம் அது புன்னகை... இதோ அந்த வரிகள் கழுத்திலும், கைகளிலும் பொன் நகை முக்கியம் அல்ல; முகங்களில் புன்னகை பூத்தாலே போதும்.
மாடமாளிகை நகைகள் அணிந்து வளைய வளைய வரும் பெண்மணி… தன்னுடைய மாமனாரை ஓர் அறையில் ஒதுக்கி வைத்து பராமரிக்காமல் விட்டால் அவரின் அழுகுரல் அல்லவா கேட்கும். அது கேட்கலாமா? வயதானவரின் அழுகுரலை விட மழலையின் அழுகுரல் அமுதமல்லவா? அதற்கு உதாரணம் இந்த வார்த்தை, வயது வந்தோர் வயதானோர் அழுகுரல் அல்ல; தவழும் குழந்தைகள் அழுகுரல் போதும்.
பணம் கொட்டிக் கிடக்கின்றது. ஆட்கள் கைக்கட்டி வாய்பொத்தி நிற்கிறார்கள். உங்கள் கார் ஓட்டுநர் அன்று ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாக வந்து விடுகிறார். ஆதலால் நீங்கள் அவரை ”கெட் அவுட் ஐ ஸே! என்று பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினால் அவரின் மனது என்ன பாடுபடும். அதை அவர் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் நிலையை எண்ணிக்கொண்டே மனதிற்குள் புழுங்குவார் அதே புழுக்கத்தில் வண்டி ஓட்டுவார் விபத்துக்குள்ளாகவும் நேரிடலாம். அதை விட அவரிடம் ஏன் தாமதம் உங்களுக்கு உடல்நிலை ஏதாவது பிரசசனையா? என ஆதரவாக நலம் விசாரித்தால் அவர் மனம் நிறைவில் தங்களை உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு சேர்த்து விடுவார். ஆணவமும் அவமானங்களும் தேவை அல்ல; அரவணைப்புகள் தாம் தேவை.
கார் ஓட்டுநரை கடிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைகிறீர்கள். சமையல் செய்யும் பெண்மணி எண்ணெய் பாட்டிலை தவற விடுகிறார். சமையலறை முழுவதும் எண்ணெய்…. பாட்டில் துண்டுகள். உடனே, ”அறிவிருக்கா? முண்டம் முண்டம்! நீ ஒரு வேலைக்கும் லாயக்கில்லை” என்று திட்டினால். அன்றைய சமையலில் உப்பு சற்று தூக்கலாக இருப்பதை உணர்வீர்கள் அதற்கு இந்த வரிகளைப் படித்து கொள்ளுங்கள். பேசும் வார்த்தைகளில் வேண்டாம் சூடு; அச்சூடு மனித உறவுகளுக்கு கேடு.
அலுவலகத்திலிருந்து கணவரை, "சீக்கிரம் வாருங்கள் திரைப்படம் செல்லலாம்" என்கிறீர்கள். அன்று ஏனோ அவர் வேலைப்பளுவினால் உரிய நேரத்தில் வரமுடியாமல் தாமதமாக வந்து விடுகிறார். உடனே படுக்கையறை தலையணைப் பறக்கும். தட்டுமுட்டு சாமான்கள் ராக்கெட்டாக பறக்க விடுகிறீர்கள். ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பி கொண்டு படுத்து கொள்கிறீர்கள். ஆனால் தூக்கம்தான் வராது. அதற்கு இந்த வரியைப் படிக்கலாம். கோபம் மனதிலிருந்து எடுக்கப்படும் வாந்தி; அந்த வாந்தி எடுத்தால் கிடைக்காது மனச்சாந்தி.
திருமண வரவேற்பிற்கு செல்கிறீர்கள் அங்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. எல்லோருடைய கண்களும் உங்களையே மேய்க்கும். சிலர் ”சூப்பர்டி இந்த டிரஸ்” என்று புகழ்வார்கள் நீங்கள் சென்றவுடன்… "இந்த மேனாமினிக்கி எப்படி டிரஸ் போட்டுகிட்டு வர்றா பாரு” என்று இகழ்வார்கள் உங்களைப் புகழ வேண்டுமானால் கண்ணியமான ஆடை அணிந்து செல்லுங்கள் அதற்கு இந்த வரி உதாரணமாகும். உடைகள் எடுப்பது உடலுக்கு பொருட்காட்சி அல்ல; அதில் எளிமையே ஒரு அருமை.
வீட்டில் பஞ்சணை, பஞ்சு மெத்தை, குளுகுளு வசதி இவ்வளவு இருந்தும் உங்களுக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் உங்கள் வீட்டு தோட்டக்காரர் அவருடைய ஓட்டு வீட்டில் தலைக்கு தலையணை இல்லாமல் கட்டாந்தரையில் படுத்தவுடன் தூங்கி விடுகிறார். தூங்குவதற்கு பஞ்சு மெத்தை தேவை இல்லை; ஆரோக்கிய உடலும், அமைதியான மனமும் இருந்தால் இந்த வரிக்கு நீங்கள் சொந்தக்கார்ர்கள் தான்.
காலை பிரட் சாண்ட்விச், மதியம் விதவிதமான பாஸ்ட் புட் ஐட்டங்கள், இரவு டின்னருக்கு பலவகையான பலகாரங்கள் இத்தனை இருந்தும் பசிக்காது. சாப்பிட முடியாது. ஆனால் எளிய உணவான கேழ்வரகு கூழ் கோதுமை, ரவை கஞ்சி சாப்பிட சொல்லி இருப்பார் மருத்துவர். அந்த அளவிற்கு உங்கள் உடல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும். பழைய சோறும் பச்சை மிளகாயும் அமிர்தமாய் சாப்பிடும் ஏழைகளை எண்ணிபடியே இந்த வரிகளைப் படியுங்கள்.
விதவிதமான வண்ண வண்ண உணவுகள் வேண்டாம்;
எளிமையான உணவில்தான் ஆரோக்கியம்.
வயது முதிர்வடைந்து விட்டது. அலுவலகம் உங்களை வீட்டிற்கு சென்று வாருங்கள் என்று கையசைத்து வழியனுப்பி விட்டார்கள். மறுநாள் முதல் போர்வையைப் போர்த்தி கொண்டு காலை பத்து மணி வரை தூங்கினால்… விரைவில் நீங்கள் வெறுமையை உணர்வீர்கள். உடல் சோம்பலால் பீடிக்கப்பட்டு உங்களுக்கு தேவையான நேரத்தில் ஒத்துழைக்காது. ஆகவே நீங்கள் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து நீங்கள் கதை எழுதலாம்; ஓவியம் வரையலாம்; இசைக் கேட்கலாம்; நூலகம் சென்று நல்ல நூல்களைப் படிக்கலாம். முடிந்தால் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுக்கலாம். அதில் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும். அதற்கான வரிதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஓய்வோ ஓய்வென்று ஓய்வெடுப்பதல்ல வாழ்க்கை இயக்கங்களில்தான் வெற்றி முழக்கம்.
இந்த பத்து வகையான வரிகளைப் படித்து பின்பற்றினால் வாழ்க்கை இனிமையாகும் மனம் நிறைவாகுமே!