எழுத்து சித்தர் பாலகுமாரன் தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்தவர். அவர் வாழ்க்கையை அணுகுவதில் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர். 1970ம் ஆண்டு முதல் எழுத்துலகில் இருக்கும் பாலகுமாரன் பல படங்களில் உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். எத்தனையோ படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர்தான் புதுப்பேட்டை படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். அந்தவகையில், இவரின் சிறந்த 15 பொன்மொழிகளைப் பற்றி பார்ப்போம்.
1. எது உயர்ந்ததோ? அது தாழும், எது தாழ்ந்ததோ? அது உயரும்.
2. யார் எதிரி? யார் நண்பன்? காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம்தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள்.
3. கடவுள் என்பது அறிவல்ல. அதுவொரு அனுபவம். அது படிப்பறிவல்ல, பட்டறிவு. அது அறிந்து கொள்வதல்ல, கேட்டுத் தெரிந்து கொள்வதும் அல்ல, அது உணரப்படுவது.
4. உறவு என்பது தொடர்பு கொள்ளும் விதத்தில் அமைந்தது. பிறரைத் தொடர்பு கொள்ள தன்னைத் தெரிய வேண்டும். தன்னைத் தெரிய தனிமைப் பழக வேண்டும். தனிமைப் பழகத் தீவிர சிந்தனை வேண்டும். தீவிர சிந்தனை என்பது ஒரு பழக்கம். ஒருவித பயிற்சி..
5. சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம். அனுஷ்டானத்தைவிட அன்பு முக்கியம். பொய்யான ஜாதி கர்வத்தைவிட சத்தியமான பிரியம் முக்கியம். இந்தக் குணங்கள்தான், கருவிலிருந்த குழந்தைக்கும் இயல்பாக இருந்தன. வித்து பலமாக இருந்தால், விருட்சம் பெரியதாக வளரும்.
6. என்ன இருக்கிறதோ அதை மட்டும் ஏற்க வேண்டும் . என்ன இல்லையோ அதை மறக்க வேண்டும் . கிடைத்ததைக் கொண்டாட வேண்டும் . விதித்ததை அனுபவிக்க வேண்டும் . இனித்தாலும் , கசந்தாலும் நீயே என்றும் பிரபஞ்ச சக்தியை பற்றிக் கொள்ள வேண்டும் . அந்த சக்தியோடு மனம் லயித்துக் கிடக்க வேண்டும் .
7. இல்லறத்தைத் துறப்பது துறவல்ல. அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்.
8. காதல் என்பது ஒரு போதையில்லை. அபகரித்து ஆளுகின்ற போரில்லை. நாலு பேர் பொறாமை படுகின்ற வெற்று கம்பீரமல்ல. காதல் என்பது தெளிவு.
9. ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்தில், ஆசைப்பட்ட விதத்தில் கிடைக்காமல்போவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
10. அன்பு என்பதில் அவமானம் என்பதேயில்லை. அகந்தையானக் காரியங்களில் தான் வெற்றி, தோல்வி, அவமானம், பஹுமானம் ஆகியவை உண்டு.
11. முடியாதென்ற ஒன்று உண்டா? முயன்று முழு வலியோடு எழுந்து உடைத்திட வேண்டும்.
12. பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்.
13. எப்போது ஒட்ட வேண்டும். எப்போது வெட்ட வேண்டும் என்பது வெகுசிலருக்கே தெரியும். ஆசையில்லாதவருக்கே அதை செயல்படுத்த முடியும்.
14. வயிற்றை அமைதியாக வைத்துக் கொள்ள மூளை என்பது விழிப்பாக இருக்க வேண்டும். மூளை விழிப்பாக இருக்க மனம் என்பது கூர்மையாக இருக்க வேண்டும். ஆகா! ஏதேதோ விஷயங்கள் மனதைச் சார்ந்திருக்கின்றனவே.
15. எல்லா முடிவுகளும் பிரச்சனையின் அழுத்தத்தில் தானாய் வெளிவரும். பிரச்சனைகள் மேலோட்டமாய் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவுகள் சிலசமயம் இன்னொரு பிரச்சனையாகிவிடும்.
இதில் சில பொன்மொழிகள் பாலகுமாரின் உடையார் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.