

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாமல் உங்கள் மனைவி, கணவன், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் மீது தேவையில்லாமல் கோபப்பட்டு கத்தியிருக்கிறீர்களா? இதை நினைத்து பிறகு குற்ற உணர்ச்சியால் வருந்தியிருப்பீர்களே!
உண்மையில், இந்த தேவையற்ற கோபத்திற்கும், அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இது நம் மனதிற்குள் நீண்ட நாட்களாக புதைந்து கிடக்கும் முடிவில்லாத உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். இப்படிப்பட்ட மனத்தடைகளை எப்படி கண்டறிந்து சரிசெய்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
ஏன் இப்படி நடக்கிறது?
நமக்கு மிகவும் நெருக்கமானவர்களோ அல்லது அறிமுகமில்லாதவர்களோ, கடந்த காலத்தில் நமக்கு ஒரு மிகப்பெரிய துரோகத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தியிருக்கலாம். அந்த நேரத்தில் நம்மால் அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்டிருக்க முடியாது அல்லது நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்க முடியாது.
இந்த வெளிப்படுத்தப்படாத கோபம், ஏமாற்றம் மற்றும் அழுகை ஆகியவை நம் மனதிற்குள் ஒரு பிரஷர் குக்கர் போல தேங்கிக் கொண்டே இருக்கும். இதற்கு ஒரு வடிகால் கிடைக்காத போது, தற்செயலாக நடக்கும் சிறு சிறு விஷயங்களுக்குக் கூட, சம்பந்தமே இல்லாத நபர்கள் மீது நமது கோபம் வெடித்துச் சிதறுகிறது. இதைத்தான் உளவியலில் (உணர்வுகளின் எச்சம்) Emotional Residue என்று கூறுகிறார்கள்.
இதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய வழிமுறைகள்!
மனதில் இருக்கும் இந்த தேவையற்ற பாரத்தை இறக்கி வைக்க சில முக்கியமான வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.
உங்கள் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை முதலில் கண்டறியுங்கள். அது ஏமாற்றமா, குற்ற உணர்ச்சியா அல்லது பயமா என்பதைப் புரிந்துகொண்டு, அந்த உணர்ச்சிக்கு ஒரு பெயரிடுங்கள்.
உங்களுக்கு தீங்கு செய்தவர் வந்து மன்னிப்பு கேட்பார் என்றோ அல்லது நடந்ததை நியாயப்படுத்துவார் என்றோ காத்திருக்க வேண்டாம். அந்தப் பிரச்னைக்கான முடிவை நீங்களே உங்கள் மனதிற்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் மனதில் உள்ள ஒட்டுமொத்த கோபத்தையும், சொல்ல நினைக்கும் வார்த்தைகளையும் ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின்னர், அந்த காகிதத்தை சுருட்டி வீசியோ, கிழித்தோ அல்லது எரித்தோ உங்கள் உணர்ச்சிகளை வெளியேற்றுங்கள்.
உங்களுக்கு துரோகம் செய்தவர்களை அவர்கள் நன்மைக்காக மன்னிக்க வேண்டாம்; உங்கள் சொந்த மன அமைதிக்காக அவர்களை மன்னித்து கடந்து செல்லுங்கள்.
உங்கள் மனதை வேறு சில நேர்மறையான விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். பாடுவது, ஓவியம் வரைவது அல்லது அந்த இடத்தை விட்டு சிறிது தூரம் விலகிச் செல்வது போன்ற மாற்று வழிகளில் உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள்.
நமது மனப் பிரச்னைகளுக்கு 100 சதவீதம் முழுமையான தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குறைந்தது 40 சதவீதமாவது நமது மன அமைதியைத் திரும்பப் பெற முடியும். இதுவே நமது வாழ்க்கையை இன்னும் சற்று நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழ ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்.