மனச்சோர்வும் மன அழுத்தமும் மிக்கவரா நீங்க? அச்சச்சோ, ஏங்க இப்படி?

Depression and mental stress
Depression and mental stress
Published on

நாம் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். மகிழ்ச்சி நம் உடலாலும், மனதாலும் உணரப்படும் ஒரு இனிமையான உணர்வு. சுயஅன்பே நமது தனிப்பட்ட மகிழ்ச்சியின் தொடக்க புள்ளியாகும். உடல், மனம், பொருள் சார்ந்த இன்பங்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. எனினும் மனம் சார்ந்த  மகிழ்வுகள் நீண்ட காலம் நிலைக்கின்றன. 

நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம். அதனை மகிழ்வுடன் வாழ முயல்வதில் சுணக்கம் காட்டக் கூடாது. மகிழ்ச்சியை மனித மூளையில் ஆக்சிடோசின், செரோடோனின், டோபமைன் ஆகிய மூன்று சுரப்பிகளே உருவாக்குகின்றன. மகிழ்ச்சியை பெறுவதற்கான ஒரே வழி, நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் நபர்களின் தொடர்பில் தொடர்ந்து இருப்பதுதான்.

நமது மனதை நேர்மறையாக பயிற்றுவிப்பது நமது உள் மகிழ்ச்சிக்கு மிக முக்கியமானது. தியானம், சுவாசப் பயிற்சிகள், பொதுவான உடற்பயிற்சிகள் அனைத்தும் மகிழ்ச்சிசுரப்பிகளை தூண்டுகின்றன. நமது மனதையும், உடலையும் நேசிக்க வைக்கின்றன. மகிழ்ச்சியான நபர்களை அடிக்கடி சந்திப்பதன் மூலம் நாம் நேர்மறை அதிர்வுகளை பெற முடியும்.  

எதிர்மறை அதிர்வுகள் நேர்மறை அதிர்வுகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் நம் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளை நம்மால் எளிதில் மறக்க முடிவதில்லை. ஆனால்,மகிழ்வான நிகழ்வுகளை எளிதில் நாம் மறந்து விடுகிறோம்.

நாம் வாழ்க்கையின் சிறு, சிறு மகிழ்வான நிகழ்வுகளைக்கூட ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அடிக்கடி புன்னகைப்பதும், தேவை ஏற்படும் போது வாய் விட்டு சிரிக்கவும் தயங்கக்கூடாது. நாம் மிகவும் விரும்பும் செயல்களை செய்வதில் ஒவ்வொரு நாளும் நமது நேரத்தைச் செலவிடவேண்டும் இதனால் மகிழ்ச்சி நம்முடன். வந்து குடியேறும்.

இதையும் படியுங்கள்:
அவசரம் வேண்டவே வேண்டாமே!
Depression and mental stress

நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்ப்பது முக்கியம். இறைவன் படைப்பில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமான திறமையுடையவர்கள். நமக்குள் இருக்கும் சிறப்பான திறனை நாம் தான் கண்டுபிடித்து, அதற்கு உரம் போட்டு வளர்க்க வேண்டும். மற்றவர் போல் வாழ முயலும் போது, நமது உண்மைத்தனமை நீர்த்து போய்விடும். மகிழ்வதற்கு வாழ்வில் நேரமும், வாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.

மனம் சோர்வடையும் போது, மிக விரைவாக அதிலிருந்து வெளியே வந்து விட வேண்டும். மனச்சோர்வு அதிகமாவதாக உணரும்போது போது, வெட்கப்படாமல் உளவியல் ஆலோசனைகளை பெற வேண்டும். இதன் மூலம் நாம் இழந்த மகிழ்ச்சியை விரைவில் திரும்ப பெறமுடியும்.

மன அழுத்த மேலாண்மை, ஆழ்ந்த தூக்கம், நல்ல சுகாதாரம், ஆரோக்கியமான உணவு, நன்னடத்தை, பிறர் செய்யும் தீமைகளை மன்னித்தல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சிறந்த மன ஆரோக்கியம் பெறுதல், மனநிறைவான வாழ்க்கை, பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவுதல், சத்தான உணவை சாப்பிடுவது,  ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, உடல் கேட்கும் போது ஓய்வெடுப்பது, நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வது, நன்றியுணர்வுடன் இருப்பது, குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்வது, நம்பகமான நண்பர், குடும்ப உறுப்பினருடன் மனம் விட்டு பேசுவது, பிடித்த இசையுடன் இணைவது போன்றவை நமது மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன.

இதையும் படியுங்கள்:
வேண்டாத பழக்கங்களை விரட்டினால் வெற்றி கிட்டும்!
Depression and mental stress

மகிழ்வுக்கும், பொருளாதரத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. பல பரம ஏழைகள் மகிழ்வோடுதான் வாழ்கிறார்கள். பணக்கார குடும்பங்கள் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியின் அடையாளமே இருப்பதில்லை.

மகிழ்ச்சி என்பது அகநிலை. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருவது இன்னொருவருக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய அவசியமில்லை. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் தங்கள் சொந்த மகிழ்ச்சியை வரையறுத்து பின்பற்ற வேண்டும். நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு. நாம் மகிழ்ச்சியுடன் இருக்க மற்றவர்களை நம்புவது, அவர்களின் கைகளில் நமக்கான அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கொடுப்பது ஆகும். ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும் மட்டுமே இது வழிவகுக்கும்.

நமது கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற வேண்டாத குப்பைகளை மனதில் தேக்கி வைத்து அதனை வாய்வழியாகவும், செயல் வழியாகவும் வெளிப்படுத்துவதால் மகிழ்ச்சி இருக்கும் இடம் தெரிவதில்லை.

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், நம்மை தடை செய்ய யாராலும் முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் பூங்காற்றும், சில சமயங்களில் புயல்காற்றும் வீசக்கூடும். அது நம்  எல்லோருடைய வாழ்வில் இயல்பானதே. வாழ்க்கை சக்கரம் உருளும்போது இவையெல்லாம்  எதார்த்தமான நிகழ்வுகளே என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கவலைகள் கலையும் மேகங்கள் போல. வரதெரிந்தது போல தானாகவே போய் விடும்.

எனக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை வைத்தால், மனது எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com