DATSUZOKU - வெறும் அரை நாளில் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை ஓட ஓட விரட்டலாம்... ஜப்பானியர்களின் மேஜிக்!

அன்றாட வாழ்க்கை சலிப்பை உடைத்து புதிய அனுபவங்கள் மூலம் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெற உதவும் ஜப்பானிய ‘டட்சுஜோகு’ முறை!
Datsuzoku method
Datsuzoku methodImage credit: AI Image
Updated on

வழக்கமான அன்றாட நடைமுறை எல்லோரையும் சற்று அலுப்படையத்தான் செய்கிறது.

காலையில் எழுந்திருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் செல்வது, அங்கு ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வது, மீண்டும் வீட்டுக்கு வந்து படுக்கைக்குச் செல்வது - என்ன போர் அடிக்கும் வாழ்க்கை இது என்று அடிக்கடி சொல்லி வருத்தப்படுவது! – இது எல்லோருக்குமான ஒரு அனுபவம் தான்!

இந்த சலிப்பிலிருந்து மீண்டு உற்சாகம் பெற ஏதேனும் ஒரு வழி உண்டா?

உண்டு என்கின்றனர் ஜப்பானியர்.

அதற்கான வழிமுறையின் பெயர் டட்சுஜோகு (DATSUZOKU).

'டட்சு' என்ற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தம் 'தப்பிப்பது' என்பதாகும்.

'ஜோகு' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'ரொடீன்' – அதாவது அன்றாட நடைமுறை – என்பதாகும்.

அதாவது அன்றாட நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பிப்பது தான் 'டட்சுஜோகு!'

டட்சுஜோகு தருவது இன்பமயமான ஒரு ஆச்சரியத்தைத் தான்!

ஒரு அரைநாள் விடுமுறை கிடைத்தது என்றால் உங்கள் ஊரில் உள்ள ஒரு மியூஸியத்திற்குச் சென்று அங்குள்ளவற்றைப் பார்த்து ஆச்சரியப்படலாம்.

ஒரு டான்ஸ் வகுப்பிற்கோ அல்லது ஒரு இசைப் பள்ளியிலோ சேர்ந்து ஒரு புதிய கலையைக் கற்கலாம்.

ஒரு புதிய க்ளப்பில் சேர்ந்து பல புதிய நண்பர்களைப் பெறலாம். நல்ல ஒரு ஹோட்டலுக்குச் சென்று புதிய உணவு வகை ஒன்றை சாப்பிட்டு மகிழலாம்.

ஒரு புதிய புத்தகத்தைப் படிக்கலாம். பணம் செலவழிக்க வழி இல்லையே என்றால் நூலகம் இருக்கவே இருக்கிறது.

மாலையில் நடைப்பயிற்சி செய்ய மெரீனா பீச் இருக்கவே இருக்கிறது.

சற்று யோசித்துப் பார்த்தால் ஏராளமான வழிகளால் உங்கள் சலிப்பூட்டும் நடைமுறையை ஒழித்துக் கட்டலாம்.

எதிர்பாரா அழைப்புகள் வந்தால் அதை ஏற்று விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

இந்த உத்தியைப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடைவோரின் அனுபவங்கள் பிரமாதமானவை.

இதையும் படியுங்கள்:
வெறும் கல்வித்தகுதி வெற்றியைத் தராது! இன்றைய இளைஞர்களுக்குத் தேவை இதுதான்!
Datsuzoku method

ஒருவர் தன் வீட்டைச் சுற்றி இருந்த வெற்று நிலத்தை அழகிய தோட்டமாக மாற்றினார். அவருக்கு மட்டும் அது ஆச்சரியத்தைத் தரவில்லை; சுற்று வட்டாரமே அவரைப் பார்த்து வியந்து போற்றியது.

இன்னொருவர் ஒரு பக்கக் கதை மட்டும் கட்டுரை எழுத ஆரம்பித்தார். அது அவருக்கு புகழை மட்டும் தரவில்லை. நல்ல ஒரு புதிய வருவாயையும் அளித்தது.

டட்சுஜோகுவினால் அன்றாடம் அந்தக் கணத்தில் வாழ்வது என்ற நல்ல ஒரு நடைமுறையும் உருவாகும். அன்றாடம் புதிய அனுபவங்கள், புதிய சூழ்நிலைகள், சவால்கள், கருத்துக்கள் ஆகியவற்றால் நாம் எதையும் சமாளிக்கும் திறனைப் பெறுகிறோம். ஒரு வலுவும் தானே உருவாகிறது.

சலிப்பில்லாத வாழ்க்கைக்கு ஒரு உன்னத வழி டட்சுஜோகு!

logo
Kalki Online
kalkionline.com