

ஒரு கிராமத்தில் வெளிநாட்டு செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் பொன்னும், பொருட்களும், மாட மாளிகைகளும், குறையாதச் செல்வமும் இருந்தது. இருப்பினும் அந்த செல்வந்தருக்கு அவர் வீட்டின் முன் இருந்த ஒரு ஏழையின் குடிசையின் மேல் படர்ந்திருந்தப் பூசணிக்காயின் மீது மிகுந்த ஆசை இருந்தது.
அந்தப் பூசணிக்காயை அவர் எடுத்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். மிகுந்த ஆர்வத்தினால் ஒரு நாள் அந்த பூசணிக்காயை அவர் திருடி எடுத்து சமைத்து சாப்பிட்டு விட்டார். இதனை அறிந்த அந்த ஊர் மக்கள் அனைவரும் அக்குடும்பத்தை பூசணிக்காயைத் திருடிய குடும்பம் என்றே அழைத்து வந்தது.
வெளி ஊரிலிருந்து வருபவர்கள் முகவரி கேட்டாலும் “அந்த பூசணிக்காயை திருடியவர்கள் வீடா?” என்றே அடையாளம் காட்டினர். பல ஆண்டுகளுக்கு இந்நிலையே தொடர்ந்தது. இவ்வாறாக அந்த செல்வந்தருக்கு ஊரின் இருந்த நல்ல பெயரானது குறைந்தது.
இதனால் மனம் உடைந்த அந்த செல்வந்தர் இந்நிலையை மாற்ற ஒரு ஜோசியரிடம் சென்று இதை எவ்வாறு சரி செய்வது என்று கேட்டார்.
அதற்கு அந்த ஜோசியர் வீட்டில் தினசரி ஐம்பது பேருக்கு அன்னதானம் வழங்குமாறு கூறினார். அதனால் அந்த செல்வந்தரும் அவருடைய வீட்டில் தினசரி ஐம்பது பேருக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார். பின் காலம் செல்ல செல்ல அந்த ஊரின் அனைவருமே “சாப்பாடு போடும் குடும்பம்” என்று அழைக்கத் தொடங்கினர்.
முகவரி கேட்டு வருபவர்களிடமும் “சாப்பாடு போடும் குடும்பமா” என்று முகவரி சொல்லி வந்தனர்.
எவ்வளவு பொருள் செல்வம் இருந்தாலும் மனிதனிடத்தில் பேராசை குறையாத ஒன்றாகவே இருந்து வருகிறது. செல்வந்தருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய இச்சை அவரது குடும்பத்தைத் திருட்டு குடும்பம் என்று கூறும் அளவிற்கு பெயர் வாங்கித் தந்தது.
அதனை சரி செய்ய அவர் பல வருடங்கள் தம்முடைய செல்வங்களைச் செலவு செய்து வந்தார். “பூசணிக்காய் திருடிய வீடு” என்ற பட்டம் மாற்றி “சாப்பாடு போடுபவர்கள் வீடு“ என்று மாறியது.
இப்படியே “முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தால் போல என்ற பழமொழி” தோன்றியது.
மனித வாழ்வில் தன்னிடம் இருக்கும் செல்வங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டே மனஅமைதி கொள்ள வேண்டும். அடுத்தவரிடம் இருக்கும் பொருட்கள் மீது ஆசை கொள்வது தவறானது. அவ்வாறு ஆசைப்பட்ட செல்வந்தரின் நிலை பற்றி இக்கதை குறிப்பிடுகிறது. இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்.