
ஒருவரிடம் உதவி கேட்கப் போகும்போது கால நேரம் அறிந்து போக வேண்டும். உதவி செய்பவரின் மனநிலையை அறிந்தும் போக வேண்டும். காரணம் ஒரு சிலர் நாள், கிழமை, நேரம் என பார்ப்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட நேரங்கள் என ஒவ்வொரு மதத்தினரிடமும் ஒரு முறைப்பாடு வைத்துள்ளனர். அதன்படி பெரும்பாலானோர் செயல்படுகிறார்கள். சிலருள் சிலரே நேரம், நாள், கிழமை என எதையும் பார்ப்பதில்லை. அவர்கள் முற்போக்குவாதிகள் என அவர்களை அவர்களே அழைத்துக் கொள்கிறார்கள்.
முக்கியமான நபர்களை சந்திக்கப் போவது என்பது மரியாதை நிமித்தம் எனும்போது காலை வேளை சிறந்ததாக அமையும். ஒரு நாளின் முற்பகல் வேளை என்பது எல்லோர் மனதிலும் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் பொதுவாக இருக்கும். நாம் சந்திக்கப் போகும் நபர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை அவரைச் சுற்றியுள்ள நபர்கள் மூலம் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கொடுப்பவர் நல்ல மனநிலையில் இருக்கும் போதே நாம் கேட்கும் உதவிகள் நமக்குக் கிடைக்கப் பெறுவது எளிதாகின்றது. பிறந்தநாள், கொண்டாட்டங்கள் நிறைந்த நாளில் ஒருவர் உதவி செய்யும் நிலையில் இருந்தால் அவரிடம் உதவி பெறுபவர் கேட்டால் பெறப்போகும் உதவி பகுதியாகவோ முழுமையாகவோ பெறுதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.
தசரத மன்னனை, இருமுறை கைகேயி காப்பாற்றி உதவியதால், கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக உறுதி தருகிறார் தசரதன். தசரத மன்னனின் மூத்த மகனான இராமருக்கு முடிசூட்ட நாள் குறித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார் தசரத மன்னன். இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அறிந்திருந்தால் கைகேயி. இராமனின் முடிசூட்டும் விழாவை முறைப்படி சொல்ல கைகேயி அரசி குடியிருக்கும் மாளிகைக்குச் செல்கிறார் மன்னர் தசரதன். கூனியின் பேச்சைக் கேட்டு தன் மகனுக்கு நன்மை எனக் கருதி, கைகேயி சமயம் பார்த்து தனக்கு உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து, இராமருக்கு முடி சூட்டக் கூடாது, அவளது மகனான பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், சகோதரன் இடையூறு இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் எனக் கருதி இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் இருக்க வேண்டும், அதை நிறைவேற்ற வேண்டும் என தசரதரிடம் வேண்டுகிறாள். செய்து கொடுத்த சத்தியத்தின் படி மிகவும் வருந்திய மனதோடு அவரது வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருகிறார், பின் படுக்கையாகிறார், மரணிக்கிறார் என வால்மீகி இராமாயணம் எடுத்துரைக்கின்றது.
இந்த உலகில் வல்லவன் வகுத்ததே நியாயம் என எடுத்துக் கொள்ளப்படுகின்றது. எப்படி திரௌபதி ஐவருக்கு மனைவி என்பதை தரும நியாயம் என எடுத்துரைக்கிறதோ வியாச பாரதம், அப்படி அவரவர்க்கென்று நியாய தர்மங்களை வகுத்துக் கொள்கின்றனர். கைகேயியைப் பொருத்தவரையில் அவள் பெற்ற வரங்கள் நியாயம். இப்படி சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கின்றனவா என்பதை ஒருவரிடம் ஒரு உதவி கேட்கப் போகும் போது தெரிந்து கொள்வது அவசியம் ஆகின்றது.
உதவி செய்பவர் கோபமான மனநிலையில் இருக்கும்போது பொருள் உதவிக்கோ, ஒரு பரிந்துரை உதவிக்கோ என எந்த உதவிக்கும் கேட்கப் போகுதல் நன்மை பயக்காது. அவர்கள் ஒன்றும் மகாபாரதத்தில் வரும் "இல்லை" எனச் சொல்லாமல் கொடுக்கும் கர்ணன் ராஜா அல்ல; அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமும் அல்ல. பிறகு உதவி செய்கிறேன் எனச் சொன்ன தருமருக்கு, எண்ணும் எண்ணங்கள் மாறுதலுக்கு உரியன, செய்யும் உதவியை உடனே செய்து விடுங்கள் எனச் சொன்ன பீமன் போல் யாரும் அங்கே வர மாட்டார்கள். கொடுப்பதை தடுக்கும் உள்ளங்களும், கொடுக்க நினைப்பதை தடுக்க நினைக்கும் உள்ளங்களும் இங்கு அதிகம்.
ஒருவரிடம் உதவி கேட்கப் போகும் போது கால நேரம் பார்த்து, 'ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு' போல் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.