

தன்னம்பிக்கை வாழ்வின் முக்கிய அங்கம். வாருங்கள் தன்னம்பிக்கை வாழ்வின் முன்னேற்றத்திற்கு எப்படி உறுதுணையாக இருக்கிறது என்பதை பார்ப்போம்.
வாழ்வில் முன்னேற ஏன் தன்னம்பிக்கை அவசியம்?
தன்னம்பிக்கை என்பது நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை. சந்தேகமாக இருக்கிறதா? முதலில் உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் பாருங்களேன். வெற்றி உங்கள் பக்கம் தானாக வரும். வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கை மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது ஒருவர் தனது திறமைகளில் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ளும் மனஉறுதியைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை மனிதனை உயர்த்தும் ஆற்றல் கொண்டது.
தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு மனிதனின் பலமாகும். தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை நங்கூரம் இல்லாத கப்பலைப் போன்றது. தன் மீது நம்பிக்கை வைப்பவர் மட்டுமே இந்த உலகில் சாதித்து காட்ட முடியும். இது பிறக்கும்போதே வருவது அல்ல. மாறாக அனுபவம் விடாமுயற்சி மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலமாக நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு அரிய குணம்.
உங்கள் தன்னம்பிக்கை வளர்ப்பதற்கான எளிய வழிகள்
1. சிறு இலக்குகள்
முதலில் அடையக்கூடிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
2. என்னால் முடியும்
எந்த ஒரு காரியத்தை தொடங்கும்போது "என்னால் முடியும் i can do it என்ற ஒற்றை மந்திர சொல்லை மனதில் விதைக்க வேண்டும்.
3. தவறுகளில் இருந்து கற்றல்
நாம் செய்யும் தவறுகளைக் கண்டு வருந்தாமல் அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. நேர்மறை எண்ணங்கள்
ஒரு காரியத்தை தொடங்கும்போது எத்தனையோ எதிர் மறை எண்ணங்கள் வரலாம். அதனை ஒதுக்கி ஓரங்கட்டி விட்டு நேர் மறை எண்ணங்கள் மூலமாக அக்காரியத்தை தொடங்க வேண்டும்.
5. தோல்வியை தகர்த்தல்
தொடங்கிய காரியத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி உடனே கிடைக்காது போகலாம். தோல்வியை தகர்த்து எறிந்துவிட்டு 'என்னால் முடியும்' என்ற மந்திர சொல்லை மீண்டும் மனதில் விதைக்க வேண்டும்.
மூளையின் இந்த மந்திரச்சொல் மறுபடி முளைக்க வைக்கும். நகர்ந்தால் தானே நதி அழகு? பறந்தால் தானே பறவை அழகு? வளர்ந்தால் தானே செடி அழகு? முயன்றால் தானே மனிதனுக்கு அழகு.
சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம் . ஒருவன் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தான் எழுதுவதை நிறுத்தி விட்டானாம். அவன் மனது அவனிடம் கேட்டதாம் எங்கே போனது உன் எழுத்து? வண்ணங்கள் ஓவியத்திற்கு அழகென்றால் உன் எண்ணங்களே உன் எழுத்துக்கு அழகு என்று மனம் சொன்னதாம்.
மீண்டு வந்த அவன் வானம் தந்த வெளிச்சம் போல, நிலவு தந்த குளுமை போல, மழை தந்த மலர்ச்சி போல கடந்துபோன நேரத்திற்கு கவலைப்படாமல், புத்துயிர் பெற்று மௌனத்திற்கு விடை கொடுத்து மறுபடி பேனா முனையில் தொடங்கினானாம். அவன் எண்ணங்களை எழுத்தாக மாற்ற இதுதான் தன்னம்பிக்கை.
எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே உலகம் நம்மைப் பார்க்கும். தன்னம்பிக்கை என்பது நம்மை நாமே நம்புவது மட்டுமே அல்ல. நமது இலக்குகளை நோக்கி நம்பிக்கையோடு பயணிப்பதும்தான்.
நண்பர்களே, துவண்டு போகாதீர்கள். தன்னம்பிக்கையை உங்கள் மூச்சாக அணிகலனாக மாற்றி வாழ்வில் எல்லா வெற்றியையும் அடையுங்கள். துவண்டால் மீண்டும் எழுந்து வாருங்கள். your success will be determined by your own confidence and fortitude.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் தயக்கங்களைத் தகர்த்து, எந்த ஒரு கடினமான சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், தெளிவான இலக்குகளை நோக்கிச் செல்லும் துணிச்சலையும் நீங்கள் பெறுவீர்கள்.