ஒரு மனிதன் வெற்றிபெற அவனது திறமை. ஆற்றல், அறிவு மட்டும் போதாது. இணக்கமான சூழ்நிலைகளும் அவசியம். அவற்றை எப்படி உருவாக்குவது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
இணக்கமான மனிதர்கள்;
இணக்கமான சூழ்நிலைகள் என்பது இணக்கமான மனிதர்களையும் உள்ளடக்கியது. ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும்போது அதற்கு உதவி செய்ய மனிதர்கள் தேவை. அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் இணக்கமான நட்பு இருந்தால்தான் அவர்கள் உதவுவார்கள். செய்யும் செயலில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்ய இணக்கமான வல்லுனர்கள் தேவை. புது ப்ராஜெக்ட் ஒன்றை செய்து முடித்தால் அதை அப்ரூவ் செய்ய இணக்கமான மேலதிகாரிகள் தேவை. எனவே இவர்கள் அனைவருடனும் நட்புடனும் மரியாதையுடனும் பழகுவது மிகவும் அவசியம்.
இணக்கமான மனது;
ஒரு செயலை செய்து முடித்து குறிப்பிட்ட துறையில் சாதிக்க நினைக்கும் மனிதருக்கு முக்கியமான தேவை அதை செய்து முடித்து சாதிப்பேன் என்று நினைக்கும் மனதுதான். ஒரு சாதனையாளருக்கு தன் மீதான நம்பிக்கை மிக முக்கியம். அத்துடன் திடமான மனதும் தேவை. முயற்சிகளில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால், மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயலும் தெம்பு வேண்டும். சவால்கள் சங்கடங்கள் எதிர்பட்டால் சமாளிக்கும் சாமர்த்தியம் வேண்டும். தோல்வியில் துவளாத இரும்பு மனம் வேண்டும்.
இணக்கமான சூழ்நிலைகள்;
அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தன் இலட்சியப் பாதையில் செல்ல திட்டங்கள் தீட்ட இணக்கமான சுற்றுப்புற சூழ்நிலைகள் அமைய வேண்டும். அப்போதுதான் தெளிவாக சிந்தித்து திட்டமிட முடியும். இரைச்சல் அற்ற அமைதியான சூழலில் திட்டமிட வேண்டும். பின் அவற்றை செயலாற்ற இணக்கமான சூழ்நிலைகள் வேண்டும். அலைபேசி அழைப்புகளோ, மனிதர்களோ தொந்தரவு தராத வண்ணம் சூழலை அமைத்துக்கொண்டு செயலில் இறங்க வேண்டும். அதே சமயம் மனதும் தெளிந்த நீரோடை போல இருத்தல் அவசியம். ஏதேனும் தேவையற்ற சிந்தனைகளோ, எண்ணச்சிதறல்களோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன்;
அவ்வப்போது மனதில் இந்த செயலை செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழும். 'உன்னால் இந்த செயலை செய்ய முடியுமா?’ என்று அவநம்பிக்கை தரும் மனிதர்களும் சுற்றி இருப்பார்கள். திட மனதுடன் 'என்னால் முடியும்' என்று அவர்களுக்கும் தன் மனதிற்கும் பதில் சொல்லி இணக்கமான சூழ்நிலையை மனதுக்குள் உருவாக்கிக் கொள்வதும் மிக மிக அவசியம். அவ்வப்போது தோல்விகளோ அல்லது தடங்கல்கோ ஏற்பட்டால் இந்த சூழ்நிலை தற்காலிகம் என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்து செயல்பட வேண்டும். வெற்றி விரைவில் வந்து சேரும்.