

சிக்கலான ஒரு பிரச்சினையில் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் (Decision Making Skills) தடுமாறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
இந்த மூன்று காரணங்களை நன்கு அறிந்து அதிலிருந்து விடுபட்டுச் செயல்பட்டால் பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவுகளை எடுக்கலாம்.
அந்த மூன்று காரணங்கள் என்னென்ன?
1. சுய சந்தேகம்:
தன் மீது சந்தேகப்படுவதே முதல் காரணம். நமது திறமை, ஆளுமை, குணாதிசயம், இந்தப் பிரச்சினைக்கு நம்மால் முடிவெடுக்க முடியுமா என்ற எண்ணம் – ஆகிய இந்த சந்தேகப் போக்கு நம்மை சரியான முடிவை எடுக்க முடியாமல் செய்யும் முதல் காரணமாகும்.
ஒரு முடிவை எடுத்த பின்னர் சந்தேகம் ஏற்பட்டு அந்த முடிவை மீண்டும் பரிசீலனை செய்து அதை எடுக்காமல் தவிர்ப்பதும் இதனால் தான்.
இதைத் தவிர்ப்பது சுலபம் தான். சில சின்னச் சின்ன பிரச்சினைகளில் நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவை ஆராய்ந்து அது எப்படிப்பட்ட நல்ல விளைவைத் தந்திருக்கிறது என்பதை யோசித்தால் இந்த சுய சந்தேகம் நீங்கி விடும். தன்னம்பிக்கை ஓங்கும்.
2. அடுத்தவருக்கு நல்லவராக ஆக முயல்வது:
அடுத்த காரணம் மற்றவர்களுக்கு நல்லவராக நம்மைக் காட்டிக் கொள்ள முயல்வது.
உங்கள் மனைவியோ அல்லது கணவரோ எதைச் சொன்னாலும் உடனே சரி என்று சொன்னால் அவர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் – உங்களையும் அவர்கள் கோபத்திலிருந்து தப்பிக்க வைக்கும் அந்த ஆமாம் என்ற சொல்.
அலுவலகத்தில் மேலதிகாரி கொடுக்கும் அத்தனை வேலைகளையும் வாங்கிக் கொண்டு ஒன்றையும் திறம்படச் செய்ய முடியாமல் தவிப்பது இன்னொரு ரகம். எங்கே அவரது நல்ல அபிப்ராயத்திலிருந்து நாம் ஒதுக்கப்படுவோமோ என்ற பய உணர்வே இதற்குக் காரணம், இதை நீக்குவதும் சுலபம் தான்.
நமக்கென உள்ள மதிப்புகளை கைவிட்டு விடாமல் நம்முடைய திறமைகளையும் பலத்தையும் நன்கு உணர்ந்து ஒரு பிரச்சினைக்கு உரிய முடிவை எடுத்து அதற்கான காரணத்தை மென்மையாகச் சொல்லி மற்றவரை வழி நடத்தலாம்.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஆமாம் சாமி போட்டு சந்தோஷப்படுத்த முடியவே முடியாது.
உரிய காரணத்தைச் சொல்லி 'நோ' என்றால் முதலில் சங்கடப்பட்டாலும் பின்னால் அனைவரும் உங்களையும் உங்கள் மதிப்புகளையும் திறமையையும் நன்கு உணர்ந்து கொள்வர் – நிச்சயமாக!
3. அசை போட்டுப் பார்த்தல்:
அசைபோடுவது என்பது நாமாக மனதிற்குள்ளாக ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்மறை எண்ணங்களையோ அல்லது பல கடந்த கால நிகழ்வுகளையோ நினைத்து ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பது.
இதன் உடனடி விளைவுகள் இரண்டு விதத்தில் இருக்கும்.
ஒன்று அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசுவது அல்லது புகார் செய்வது. சக ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி மகிழ்ச்சி கொள்வது அல்லது புதிதாக வந்த மேலதிகாரியைப் பற்றித் தவறாகப் பேசுவது ஆகியவையே இதன் விளைவுகளாக அமையும்.
இன்னொன்று தன்னிரக்கம் கொள்வது. கடந்த காலத் தவறுகள் மற்றும் நமது தோல்விகளை நினைத்து தன் மீதே இரக்கம் கொள்வது. அந்தத் தவறு அல்லது தோல்வியிலிருந்து எந்த பாடமும் கற்காமல் இருப்பது.
இது தொடர்ந்து ஒருவரிடம் இருந்தால் அவர் தான் பார்க்கும் எதையும் எதிர்மறையாகவே பார்ப்பார். அதில் உள்ள தவறுகளையே கண்டுபிடிக்க மனமானது முயலும். இதைத் தவிர்க்க ஒரு வழி உள்ளது.
இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் போது அதை நினைப்பவருக்கு (அதாவது உங்களுக்குத் தான்!) ஒரு கற்பனை பெயர் கொடுத்து 'என்னப்பா, இப்படி நினைக்கிறாய். நல்ல விதமாக எண்ணி ஒரு நல்லதைச் சொல்லுப்பா' என்று கேட்கலாம். நாளடைவில் அந்த கற்பனை கதாபாத்திரம் வெட்கப்பட்டு எதிர்மறையாக நினைப்பதையே விட்டு விடும்.
ஆக பிரச்சினைகள் வரும் போது முடிவெடுக்க முடியவில்லை என்றால் கீழ்க்கண்ட மூன்று வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சுய சந்தேகத்தை நீக்க வேண்டும்.
எப்போதும் மற்றவரை சந்தோஷப்படுத்த ஆமாம் சாமி போடக் கூடாது. மாறாக நமது திறமை, முடிவெடுக்கும் திறன் மீது நம்பிக்கை வைத்து மற்றவரிடம் பேச வேண்டும்; அவர்களை வழி நடத்த வேண்டும்.
கடந்த கால தோல்விகள், மோசமான நிகழ்வுகளை நினைத்து நினைத்து ஒரு நெகடிவ் பர்ஸனாலிடி ஆகி விடக் கூடாது. ஆக்கபூர்வ சிந்தனையாளராக ஒவ்வொரு விஷயத்தையும் அணுகி முடிவெடுக்க வேண்டும்.