

முன்னொரு காலத்தில் ஒரு புகழ்மிக்க சிற்பி இருந்தார். அவர் செதுக்கும் சிலைகள் உயிர் பெற்று எழுவது போல அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். ஒருமுறை அவருடைய சீடன் ஒருவன், “ஆசானே, உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு அழகான சிலைகளைச் செதுக்க முடிகிறது? இதன் ரகசியம் என்ன?" என்று கேட்டான்.
அதற்கு அந்தச் சிற்பி புன்னகைத்துவிட்டு, “நான் எதையும் புதிதாகச் செதுக்குவதில்லை. அந்தப் பாறைக்குள் ஏற்கனவே அந்தச் சிலை உயிரோடு ஒளிந்திருக்கிறது. நான் வெறுமனே தேவையற்ற கற்களை மட்டுமே அகற்றுகிறேன். அந்தச் சிலை அங்கு இருக்கிறது என்று நான் முழுமையாக நம்புவதால்தான் என்னால் அதை வெளியே கொண்டு வர முடிகிறது,” என்றார்.
இந்தக் கதை நமக்கு உணர்த்தும் பாடம் மிகவும் ஆழமானது. நம்முடைய வாழ்க்கையும் அந்தப் பாறையைப் போன்றதுதான். அதில் ஒளிந்திருக்கும் வெற்றியை வெளியே கொண்டு வருவதும், வராமல் தடுப்பதும் நாம் பயன்படுத்தும் 'வார்த்தைகள்' என்னும் உளிதான்.
நீங்கள் விதைப்பது எத்தகைய விதை?
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரபஞ்சத்தில் விதைக்கப்படும் ஒரு விதை என்பதைப் பலர் உணர்வதில்லை. துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பலர் தெரியாமலேயே தவறான விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறோம்.
“எனக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கப் போகிறது” அல்லது “நான் ஒரு பெரிய பதவியில் அமரப் போகிறேன்." என்று சொல்லும்போது உங்கள் ஆழ்மனம் அதைப் பின்வருமாறு மொழிபெயர்க்கிறது: "அப்படியானால் அது இப்போதைக்கு உன்னிடம் இல்லை.” இந்த இல்லாமை என்ற உணர்வுதான் வாழ்வில் மீண்டும் மீண்டும் தடைகளை உருவாக்குகிறது. எதை அதிகமாகச் சொல்கிறீர்களோ, அதுவே வாழ்வில் நிஜமாக மாறுகிறது.
“எனக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கப்போகிறது” என்று சொல்லும்போது, உங்கள் ஆசை 'எதிர்காலத்தை' நோக்கியே இருக்கிறது. ஆனால், ஆழ்மனமோ அதை 'இப்போது என்னிடம் இல்லை' என்றே புரிந்து கொள்கிறது. இந்த இடைவெளியைத் தவிர்க்க, "நான் ஒரு அழகான வீட்டில் வசிப்பதற்கான தகுதியைப் பெற்றுவிட்டேன்" அல்லது “என் கனவு இல்லம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது” என்று நிகழ்காலத்தில் பேசப் பழகுங்கள்.
பிம்பத்தை மாற்றும் மந்திரம்
ஒரு விஷயம் ஏற்கனவே உங்களிடம் இருப்பது போலப் பேசத் தொடங்கும்போது ஒரு பெரிய மாற்றம் நிகழ்கிறது.
“நான் ஒரு வெற்றியாளன், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை என்னுடையது” என்று நீங்கள் பேசும்போது, உங்கள் முழு நரம்பு மண்டலமும், “ஆம், இதுதான் நான்” என்று நம்பத் தொடங்குகிறது. நீங்கள் சொல்லும் சொல்லே உங்கள் ஆற்றலாக மாறுகிறது.
நமது மூளை நிஜத்திற்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு விசித்திரமான உறுப்பு. நீங்கள் எதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களோ, அதையே உண்மையாக ஏற்றுக்கொண்டு, அதற்கான ரசாயனங்களை சுரக்கத் தொடங்குகிறது.
ஒரு விதையை நட்ட மறுநாளே அது மரமாகிவிடாது. அந்தச் சிறிய முளை வெளியே வரும்போது அது ஒரு பெரிய ஆலமரம் என்பதற்கான எந்த அடையாளமும் இருக்காது. ஆனால், நாம் அந்த முளையை அலட்சியப்படுத்துகிறோமா? இல்லை. அதற்குத் தண்ணீர் ஊற்றுகிறோம், வேலி அமைத்துப் பாதுகாக்கிறோம்.
நேர்மறையான எண்ணங்களும், வார்த்தைகளும் அந்த விதையைப் போன்றவைதான். இன்று பேசும் நம்பிக்கை வார்த்தைகள் உடனடியாகப் பலன் தராதது போலத் தோன்றலாம். ஆனால், அந்தச் செயல்முறையை நம்புங்கள். உங்கள் கனவு நனவாகும் வரை அந்த நம்பிக்கையை வார்த்தைகளால் பாதுகாத்தும், புதுப்பித்துக் கொண்டும் இருங்கள்.