

ஸ்டீவ் ஜாப்ஸ், ஐன்ஸ்டீன், அரிஸ்டாடில், சாக்ரடீஸ், பேகன், ஹெலன் ஃப்ராங்க் எந்தேலர், சி.எஸ். லூயிஸ், கார்ல் சகன் ஆகியோரின் பொன்மொழிகள் மூலம் இந்த கட்டுரை பேரறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். ஆர்வம், படைப்பாற்றல், வாசிப்பு, நல்லவர்களுடன் உரையாடல், அனுபவங்களை சிந்தித்தல், தவறுகளை வாய்ப்பாக மாற்றுதல், பிரபஞ்சத்தில் தனித்தன்மையை உணர்ந்து தனி வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது.
தவறுகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான மேதைகளின் பொன்மொழிகள் என்ன?
மிக பிரமாதமாக பெரிய வேலையைச் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் செய்யும் வேலையை நேசிக்க வேண்டும் – ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஒவ்வொரு கஷ்டத்தின் நடுவிலும் வாய்ப்புகள் இருக்கின்றன – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
அரிஸ்டாடில் சொன்னார்: உன்னை உணர்வதுதான் பேரறிவின் முதல் படி.
பேரறிவை வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்த வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். காலம் வென்ற பொன் மொழிகளைப் படித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
சாக்ரடீஸ் கூறினார்: ‘ஆச்சரியப்படுவதுதான் பேரறிவின் முதல் படி’ என்று. ஆர்வம் உந்தும்போது கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. புதிய வழிகள் புலப்படுகின்றன. அவை நம்மை சாதாரண மனிதன் என்ற நிலையிலிருந்து துடிப்பான திறம்பட்ட மனிதன் என்ற நிலைக்கு உயர்த்துகிறது. படைப்பாற்றல் திறன் உள்ளவர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
உலகில் நாம் காணும் தலைவர்களும். வெற்றி வீர்ர்களும், திறன் உடையவர்களும் நிறைய நல்ல புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உங்கள் பரிமாணத்தை வானளவு உயர்த்த நல்ல புத்தகங்கள் வழி காட்டுகின்றன. வெவ்வேறு விதமான பார்வைகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களது எழுத்துத்திறன், எதையும் ஆராயும் மனப்பான்மை, சாதாரண சிந்தனா முறையிலிருந்து விலகி புதிய பார்வையில் சிந்திப்பது, எப்போதும் மனதளவில் வெளிப்படையாகவும், துடிப்புடனும் இருப்பது ஆகிய அனைத்தும் நல்ல புத்தகங்கள் தரும் சில நற்பண்புகளாகும்.
நல்ல சிந்தனையாளர்களுடன் பழகி அவர்களுடன் சிறிது நேரம் பேசினாலும் போதும், நம் வாழ்க்கையின் திசையே வெற்றியை நோக்கிச் செல்லும். நேருக்கு நேர் பேசுவது, குழுவாக அமர்ந்து விவாதங்களில் ஈடுபடுவது, தெரியாத அன்னியர்களிடம் சிறிது நேரம் பேசி அவர்களின் கண்ணோட்டத்தை அறிவது ஆகிய இவையெல்லாம் அறிவைப் பெறுவதற்கான வழிகளாகும்.
பிரான்ஸிஸ் பேகன், ‘புத்திசாலியான ஒருவன் அவன் காண்பதைவிட அதிக வாய்ப்புகளை உருவாக்குவான்’ என்று கூறுகிறார். வாழ்க்கையின் அனுபவங்கள் மதிப்பு மிக்கவை. அவை நமக்குப் பல தெரியாத விஷயங்களை போதிக்கின்றன. நமது செயல்களைப் பற்றியும் அவை மற்றவர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றி நாம் சிறிது சிந்திக்க வேண்டும்.
வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க இந்த அனுபவங்களே வழி வகுக்கும். இன்று என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று அன்றாடம் ஒரு பத்து நிமிடம் யோசித்தாலேயே போதும், நாளை தவறானவற்றைத் தவிர்க்கவும், நல்லனவற்றை மேம்படுத்தவும் அந்த சிந்தனை வழி வகுக்கும்.
ஓவியரான ஹெலன் ஃப்ராங்க் எந்தேலர் கூறுகிறார்: “தவறுகளும் துரதிர்ஷ்டமும் கூட நாம் எடுக்க வேண்டிய அடுத்த படிக்கான ஆதார விஷயங்களாகும்.”
நீங்கள் உங்கள் விபத்துக்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிதல் அவசியம்.
பிரபல எழுத்தாளரும் அறிஞருமான சி.எஸ். லூயிஸ் கூறுவது சிந்தனைக்குரியது. அவர் கூறுகிறார்: “நீங்கள் கொஞ்சம் உஷ்ணத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தீயின் அருகே நிற்க வேண்டும். கொஞ்சம் நனைந்திருக்க விரும்பினால் நீங்கள் ஷவரின் கீழே இருக்க வேண்டும்.
அதேபோல நீங்கள் சந்தோஷம், அதிகாரம், சமாதானம், நீடித்த வாழ்வு ஆகியவற்றை விரும்பினால் அவற்றிற்கு அருகே நிற்க வேண்டும்.”
பொருள் பொதிந்த இந்த பொன்மொழியை மனதில் கொண்டால் யாரை எப்போது அணுக வேண்டும் என்பதை நிச்சயமாக உணர்ந்து கொள்ளலாம்.
பிரபல விஞ்ஞானியும் ஏராளமான புத்தகங்களை எழுதியதோடு, அமெரிக்க தொலைக்காட்சியில் காஸ்மாஸ் தொடர் மூலம் ஒரு பெரும் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் கார்ல் சகன்! அவர் ஒரு வானியல் விஞ்ஞானி என்பதால் அவரது பார்வை மற்ற சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதிய அறிஞர்களிடமிருந்து சற்று வேறுபடுகிறது.
அவர் கூறுகிறார்: “ நம்மில் ஒவ்வொருவருமே இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் மிகவும் முக்கியமானவர்.”
அடடா! எவ்வளவு பெரிய உண்மை!
நாம் பிரபஞ்சத்தில் ஒப்பற்ற தனித்தன்மை கொண்டவர் என்று நினைத்தாலேயே போதுமே, நமது வழி தனி வழியாக அமையுமே!நம் வழியைக் கண்டுபிடித்து நடப்போமா?
கடந்த காலத் தவறுகளையும் தடைகளையும் வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றும் மனப்பக்குவத்தைப் பெறுவதன் மூலம், எந்தச் சூழலிலும் சோர்ந்து போகாமல் மிகச் சிறந்த வளர்ச்சியை உங்களால் அடைய முடியும்.