

வாழ்க்கையில் எல்லோரும் உயர்வாக இருக்கவேண்டும் என்றால், நீங்கள் எல்லாவற்றையும் கடந்து வரும் ஆற்றலை விதைக்க வேண்டும். மகிழ்ச்சியின் ரகசியம் நீங்கள் விரும்புவதை செய்வது. வெற்றியின் ரகசியம் நீங்கள் செய்யப்போகும் செயலை விரும்புவதாகும்.
ஒருபோதும் சோகம் மட்டுமே வாழ்க்கையாக இருக்க முடியாது. சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது. இதை நன்கு உணர்ந்து செயல்படும் தன்மை யாருக்கு மனதில் இருக்கிறதோ அவர்களே நிம்மதியாகவும் நிறைந்த மனதோடும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.
வாழ்க்கையில் எப்போதும் உங்கள் வார்த்தைகளுக்கு மரியாதை வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள், உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.
எந்த இடத்திலும் வளவளன்னு பேசுவதை முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம். அதேமாதிரி எந்த இடத்தில், யாரிடம் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அப்போது தான், நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
எப்போதும் அதன் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. எப்போதும் உங்கள் வார்த்தைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதையும், நீங்கள் சொன்னால், அது இறைவனின் வாக்குக்கு சமமாக இருக்கும் என்றும் அடுத்தவர்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் உங்கள் எண்ணத்தில் முதலில் நீங்கள் தெளிவு இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வார்த்தைகளுக்கு தானாக மதிப்பு கூடும். ஆகவே மனதில் எதிர்மறை எண்ணங்கள் அகற்றி, நேர்மறை எண்ணங்கள் தோன்றும் வல்லமையின் வேர்களை, உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் நாம் நகைச்சுவை கலந்து வரும் வார்த்தைகளை கண்டு ரசிக்கிறோம். அதேசமயம் சோகமான நிகழ்வுகளை பார்க்கும் போது, வார்த்தைகள் வராமல் மெளனமாக தன் உணர்வுகளை எதிரில் உள்ளவர் வெளிப்படுத்தும்போது, நாமும் அந்த சோகத்தை, வார்த்தைகள் வராமல், பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறோம். இதுதான் வார்த்தைகளுக்கு உள்ள சிறப்பு அம்சம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அன்பான பார்வையில் எழும் கனிவு போல், அன்பான வார்த்தைகளில் பிறக்கும் மனிதம் போல், வாழ்க்கை சிறப்பாக இருக்க, ஒருபோதும் வன்மம் என்னும் விஷம் கலந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, நீங்களும் தாழ்ந்து, உங்கள் மதிப்பையும் வேரறுத்து விடாதீர்கள்.
ஐயன் வள்ளுவன் தன் குறலில், 'இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது?' என்ற குறளில் இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்திற்காக என்று கூறியிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து அதன்படி நடந்து, வன்சொற்கள் தவிர்த்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறையை நன்கு அறிந்த சான்றோர்கள் பலர், பல நல்ல பழக்கம் வழக்கங்களை தன்னகத்தே கொண்டு சிறந்து வாழ்ந்து, வழி காட்டியதைப் போல், நீங்களும், தன் மனதில்.நல்ல விஷயங்கள் இருப்பதை 'அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் 'காலம் பொன் போன்றது' என்பதைப் போல், உங்கள் வாழ்க்கையின் நல்வினைக்கு ஏற்றம் காணும் நல்ல உயிரோட்டமுள்ள வார்த்தைகள் விதைத்து, விருட்சமாக வாழ்ந்து வென்று காட்டுங்கள்.