

அனைவருக்கும் பிடித்தவர் ஆக இருப்பதா அல்லது நமக்குப் பிடித்த வகையில் வாழ்வதா..? எதில் நீங்கள் இயல்பாக இருக்கிறீர்கள்..?
அனைவருக்கும் விரும்பத்தக்கவராக இருந்தால்:
அனைவருக்கும் ‘விரும்பும் நபராக’ இருக்க நினைக்கும் ஒருவர், அவரின் பற்றிய நல்லெண்ணத்தை மற்றவர்களின் மனதில் பரப்பிக்கொண்டே இருப்பார். இது சுமூகமான குழுப்பணி, வலுவான நட்புறவுகள் மற்றும் நம்பகமான தொழில்முறை என்று பல நன்மைகளைத் தரும். பணியிடங்களிலும் இந்தக் குணம் பெரும்பாலும் பதவி உயர்வுகள், தலைமைத்துவ வாய்ப்புகளாக மாறுகிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமாக அனைவரையும் திருப்திபடுத்துவதில் பல குறைபாடுகளும் உள்ளது. ஒருவர் தொடர்ந்து மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கே அடிபணியும்போது, அவர் தனது அடையாளத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார். உளவியலாளர்கள் சில நபர்களுக்கு இது மன அழுத்தம், பதட்டம், மனக்கசப்பைகூடத் தூண்டக்கூடும் என்று குறிப்பிடுகின்றனர். சில நேரங்களில் இதை பின்பற்றும் தனிநபர் ‘தான் ஏதோ தேர்ந்தெடுக்காத வழியில்’ சிக்கிக்கொண்டதாகக்கூட உணரலாம்.
ஆக, ஒரு புறம் இது சக தொடர்புகளை வளர்க்கும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது, பேச்சுவார்த்தைகளுக்கு உதவுகிறது மற்றும் சமூகங்களில் நல்லெண்ணத்தை உருவாக்குகிறது. ஆனால், அது உங்களின் இயல்புக்கு மாறாக பின்பற்றப்பட்டால் மற்றவர்களால் கையாளப்படுவதற்குக்கூட வழிவகுக்கும்.
உங்கள் பாணியை நீங்கள் பின்பற்றினால்:
இயல்பில் தங்களுக்குப் பிடித்தபடி வாழ்வது என்பது ‘பிறர் என்ன தீர்ப்பு வழங்குவார்’ என்ற அச்சமின்றி உங்கள் தனித்துவத்தை நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்வதாகும். இது ஒருவருக்கு உயர்ந்த தன்னம்பிக்கை, படைப்பாற்றல், பிறரிடமிருந்து உண்மையான மரியாதையை பெறவைக்கும்.
சில நேரம் பார்ப்பதற்கு இது வழக்கத்திற்கு மாறானவையாக இருந்தாலும், ஒரு தரப்பினர் இதைப் போற்றுகிறார்கள். இருந்தாலும், இந்தப் போக்கு தேவையானதைப் புறக்கணிப்பதோ அல்லது சமூக நெறிகளை நிராகரிப்பது போன்ற இயற்கைக்கு மாறான வழியில் ஒருவரின் தனித்துவம் வெளிப்படுத்தப்படும்போது; அது அவர்களுக்கே தீமையை வரவழைத்து விடும் . இது தனிமைப்படுத்தலுக்கோ அல்லது தேவையற்ற மோதலுக்கோ வழிவகுக்கும். உண்மையான நம்பகத்தன்மை என்பது சுய வெளிப்பாட்டையும், மற்றவர்கள் மீதான அக்கறையையும் சமநிலைப்படுத்துவதாகும்.
ஆக, தனித்துவம் பெரும்பாலும் புதுமைகளைத் தூண்டுகிறது. சொல்லப்போனால் பல தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் தலைவர்கள் இதனால் உருவாகியுள்ளனர். ஆனால், இதே தனித்துவம் பிடிவாதமாக மாறும்போது, அது அருகில் இருப்பவர்களை அந்நியப்படுத்தி, முன்னேற்றத்தைத் தடுக்கும் அபாயத்தையும் உண்டாகும்.
இந்த அணுகுமுறைகள் இயல்பாக உங்களிடம் இருந்தால்:
ஒரு வேளை உங்களுக்கு அனைவருக்கும் விரும்பும்படி இருப்பதே பிடித்திருந்தால்; தாராளமாக பின்பற்றுங்கள், அனைவரோடும் இணையுங்கள். ஆனால் அது உங்களுக்கு முரணாக இருக்கும்போது பிறரின் திருப்திக்காக "ஆம்" என்று சொல்வதைத் தவிர்க்கப் பாருங்கள். இதே உங்களின் தனித்துவத்தையே நீங்கள் பின்பற்ற விரும்பினால்; முதலில் சுய-ஏற்பை (self acceptance) வளர்த்துக்கொள்ளுங்கள். இது மற்றவர்களின் கண்ணோட்டங்களை மதிக்கும், அதே வேளையில் அவர்களிடம் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய எல்லைகளை உங்களுக்குப் புரியவைக்கும். காலப்போக்கில், இந்தப் பழக்கங்கள் உங்களின் இயல்பாக மாறும்போது; விருப்பங்களை நேர்மையாக வெளிப்படுத்த வைக்கும். குற்றவுணர்ச்சியின்றி கருத்து வேறுபாடுகளை அனுமதிப்பது போன்றவை உங்களிடம் காணவைக்கும். இந்தக் கலவையானது உண்மையும், நேர்மையும் சேரும் ஒரு இயல்பான அடையாளத்தை உருவாக்குகிறது.
இதைப் பற்றி சிறந்த சிந்தனையாளர்கள் சொன்ன கருத்துகள்:
மகாத்மா காந்தி: ஒருவர் தனது தனித்துவத்தை இழந்து, ‘ஒரு இயந்திரத்தின் ஒரு சாதாரண பாகமாக செயல்படுவது’ மனித கண்ணியத்திற்குக் குறைவான செயலாகும் என்று கூறியுள்ளார்.
(https://www.azquotes.com/)
ரால்ப் வால்டோ எமர்சன்(Ralph Waldo Emerson): உங்களை வேறொருவராக மாற்ற தொடர்ந்து முயற்சிக்கும் இவ்வுலகில், நீங்களாகவே இருப்பதுதான் மிகச்சிறந்த சாதனையாகும்."
(https://www.goodreads.com/)
மார்க் டுவைன்(Mark Twain): தனக்குத்தானே திருப்தி கொள்ளாத ஒரு மனிதனால் நிம்மதியாக இருக்கமுடியாது.
எலினோர் ரூஸ்வெல்ட்(Eleanor Roosevelt): உங்கள் அனுமதியின்றி யாரும் உங்களைத் தாழ்வானவராக உணரவைக்க முடியாது.
ஆக, உண்மையான மனிதனின் வெற்றி என்பது கருணையையும், நேர்மையையும் ஒன்றிணைப்பதில் அடங்கியுள்ளது. அதாவது, உங்கள் தனித்துவத்தை இழக்காமல், அனைவராலும் அணுகக்கூடியவராக இருப்பகும் கலவையில் இருக்கிறது.
உங்கள் மீதான தேவையற்ற குற்றவுணர்ச்சிகளைத் தூக்கியெறிந்து, துணிச்சலான கருத்து வேறுபாடுகளுடன் கூடிய உண்மையான ஆளுமையைப் பெறுவீர்கள். சுயமரியாதையுடன் வாழும் சுதந்திரத்தை முழுமையாக உணர்வீர்கள்.