
மடாலய குரு வெட்டிய மரம்
தி விஸ்டம் ஆஃப் இன்செக்யூரிடி (The Wisdom of Insecurity) என்ற தனது நூலில் பிரபல தத்துவ ஞானி ஆலன் வாட்ஸ் (Alan Watts) ஒரு சிறிய சம்பவத்தை நகைச்சுவையாகக் கூறுகிறார்.
அது இதுதான்:
ஒரு மடாலயத்தின் தலைமை குருவுக்கு அடுத்த நிலையில் இருந்த கின்யோ என்பவருக்கு ரியோகேகு என்ற சகோதரர் இருந்தார். அவர் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுபவர். மடாலயத்தின் பக்கத்தில் அதிகமாக நாற்றம் அடிக்கும் ஒரு நெட்டில் மரம் (Nettle Tree) இருந்தது. அனைவரும் ரியோகேகுவைக் குறிப்பிடும்போது நெட்டில் ட்ரீ குரு (நாத்தம் பிடிச்ச குரு) என்று அழைக்க ஆரம்பித்தனர் –அவரது குணத்தை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில்!
இந்தப் பட்டப் பெயரால் பெரிதும் கோபமுற்ற அந்த குரு அந்த மரத்தை வெட்டிவிட்டார். அடி மரம் மட்டும் இருந்தது.
இனி அப்படிக் கூப்பிடமாட்டார்கள் என்று குரு எதிர்பார்த்ததற்கு மாறாக இப்போது அனைவரும் அவரை ‘அடிமர குரு’ என்று பொருள்படும் ‘ஸ்டம்ப் குரு’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
முன்னைவிட இது மோசமாக இருக்கிறதே என்று எண்ணிய குரு இப்போது அடிமரத்தையும் வெட்டித் தூக்கி எறிந்தார்.
குழி மட்டும் இருந்தது. இப்போது அனைவரும் அவரை ‘சாக்கடை குரு’ என்று அழைக்க ஆரம்பித்தனர். குரு நொந்து போனார்.
ஆலன் வாட்ஸின் விதி
இந்த சம்பவத்தை விவரிக்கும் ஆலன் வாட்ஸ், இதுதான் ‘பேக்வேர்ட் லா’ என்று கூறுகிறார். அதாவது ஒரு செயலில் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிர்மாறாக நடப்பது பேக்வேர்ட் லா – பேக்வேர்ட் விதி எனக் கூறப்படுகிறது.
இதை ஒரு உதாரணம் மூலம் நன்கு புரிந்து கொள்ளலாம்.
ஒரு நீச்சல் குளத்தில் தண்ணீர் மீது நீங்கள் மிதக்க விரும்பி அதிக முயற்சி செய்தால் நீங்கள் குளத்தில் அமிழ்ந்து போவீர்கள். ஆனால் நீங்கள் மூழ்க ஆரம்பிக்க முயற்சித்தால் நீங்கள் மிதக்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் மூச்சை நீங்கள் நிறுத்தினால் மூச்சே இல்லாமல் போய்விடும். அதன் போக்கில் விட்டால் மூச்சு நிதானமாக வரும்.
ஆலன் வாட்ஸின் விதி கூறுவது இதுதான்:
நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் முதலில் உங்கள் படுக்கையைத் தயார் செய்யுங்கள்” – என்கிறார் அவர்.
இதன் பொருள் என்ன? கடைசி படியை முதலில் செய்யுங்கள் மற்றவை எல்லாம் தானே சரியாகி உங்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடும் என்பதுதான்.
கடற்படை சோதனை
கடற்படையில் சேர விரும்புவோர்க்கு நீரில் மூழ்காமல் இருக்கும் பயிற்சி ஒன்று, சோதனையாக தரப்படுகிறது. இதன் பெயர் ‘DROWN PROOF’ சோதனை!
கையையும் காலையும் கட்டி நீரில் போடும்போது ஐந்து நிமிடம் அப்படியே இருந்து நீரில் மூழ்காமல் இருக்க வேண்டும்.
இது முடியுமா? பலர் ஓவென்று அலறி உடனேயே தங்களை வெளியில் தூக்குமாறு சத்தம் போடுவார்கள்.
சிலரோ கையையும் காலையையும் வேக வேகமாக உதறுவார்கள். ஆனால் அந்த உதறலே அவர்களை நீரில் மூழ்க அடிக்கும்.
மூச்சைப் பிடித்து நிறுத்த விரும்புவோரோ அதிக ஆக்ஸிஜனை இழந்து மூச்சு விடுவதில் சிரமப்படுவர்.
நிதானமாக இருப்பவர்கள் தங்களை நீரில் மூழ்கும்படி விட்டு விடுவர். நீரின் ஆழத்தில் சென்றவர்கள் தானே மேலே வருவர். அப்போது மூச்சை நன்கு விடுவர்.
இது உடலுக்கான பயிற்சி மட்டுமல்ல; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவரா நீங்கள் என்பதைப் பார்க்கவும் இந்த ட்ரவுன்- புரூபிங் (DROWN PROOFING) சோதனை நடத்தப்படுகிறது.
பேக்வேர்ட் லாவுக்குச் சிறந்த உதாரணம் இந்த சோதனைதான்!
இனிமேல் பேக்வேர்ட் லாவைக் கடைப்பிடிப்போமா, நண்பர்களே!