'தீக்சாபூமி'யில் அம்பேத்கர் தொண்டர்களுடன் எடுத்துக் கொண்ட 22 உறுதிமொழிகள்!

அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறிய பின், தனது தொண்டர்களுக்கு தம்மா தீட்சை வழங்கிய அவர் கூறிய 22 உறுதிமொழிகளை பார்க்கலாம்..
Ambedkar
Ambedkar
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் 1956 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாளன்று, புத்த சமயத்தைத் தழுவினார். தற்போது அந்தப் பகுதி, தீக்சாபூமி (Deekshabhoomi) என்றழைக்கப்படுகிறது.

'தீக்சா' என்ற புத்த சமயத்தினர்களின் சொல், அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. 'பூமி' நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் புத்த சமயத்தை ஏற்றுக் கொள்ளும் இடம் என்று கொள்ளலாம்.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அம்பேத்கர் எடுத்த முடிவைப் பின்பற்றி, புத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப்பட்டுள்ள தீக்சாபூமியில் இருக்கும் புத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாக இருக்கும் தீக்சாபூமி, இந்தியாவிலுள்ள புத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக இருக்கிறது. அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாற்றம் பெற்ற அக்டோபர் 14 ஆம் நாளிலும், அசோக விசயதசமி நாளிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவ்விரு நாட்களில், இங்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறிய பின்னர், தனது தொண்டர்களுக்கு, தம்மா தீட்சை வழங்கினார். இந்நிகழ்வில் மும்மணிகள் மற்றும் ஐந்து நல்லொழுக்கங்கள் வழங்கப்பட்டபின், அம்பேத்கர் வழங்கிய 22 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. அவை:

1. பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேசுவரன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.

2. கடவுளின் மறுபிறப்பாக நம்பப்படுகின்ற, ராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.

3. கௌரி, கணபதி மற்றும் இந்துக்களின் ஏனைய ஆண் மற்றும் பெண் கடவுளர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.

4. கடவுளின் மறுபிறப்பில் நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன்.

5. புத்தர் விஷ்ணுவின் மறுபிறப்பு என நான் நம்பவோ கருதவோ மாட்டேன். இது ஒரு அடிமுட்டாள்தனம் என்றும் பொய்ப் பரப்புரை எனவும் நான் நம்புகிறேன்.

6. நான் சிரார்த்தமளிக்கவோ, பிண்டமளிக்கவோ மாட்டேன்.

7. நான் புத்தரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மீறும் வகையில் நடக்க மாட்டேன்.

8. பிராமணர்களால் ஆற்றப்படும் எந்த நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்.

9. நான் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என நம்புகிறேன்.

இதையும் படியுங்கள்:
அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் ஏப்ரல் 14!
Ambedkar

10. நான் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குப் பெருமுயற்சி எடுப்பேன்.

11. நான் புத்தரின் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றுவேன்.

12. நான் புத்தரால் முன்மொழியப்பட்ட பத்துப் பாரமிதாக்களைப் பின்பற்றுவேன்.

13. நான் அனைத்து உயிர்களிடமும் இரக்கமும் அன்பும் செலுத்துவதோடு அவற்றைப் பாதுகாப்பேன்.

14. நான் திருட மாட்டேன்.

15. நான் பொய்யுரைக்க மாட்டேன்.

16. உடலின்பத்தினால் தூண்டப்பட்ட பாவங்களைச் செய்ய மாட்டேன்.

17. மது, போதைப்பொருள் போன்ற மதிமயக்கும் பொருட்களை உட்கொள்ள மாட்டேன்.

18. நான் நாளாந்த வாழ்வில் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றவும், இரக்கம் மற்றும் அன்பைப் பொழிவதற்கும் பெருமுயற்சி எடுப்பேன்.

19. சமத்துவமின்மையை ஊக்குவிப்பதன் மூலம் மனித இனத்துக்கு எதிராகவும், மனித இனத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டையாகவும் உள்ள இந்து மதத்தை நான் துறக்கிறேன். பௌத்த மதத்தை எனது மதமாக ஏற்றுக்கொள்கிறேன்.

20. நான் புத்தரின் தம்மமே உண்மையான ஒரே மதம் என உறுதியாக நம்புகிறேன்.

21. நான் ஒரு புதிய பிறவி எடுத்துள்ளதாகக் கருதுகிறேன்.

22. நான் இதன் பின்னர், எனது வாழ்வை புத்தரின் தம்மத்தின் போதனைகளின் வழியே முன்னெடுப்பேன்

என உளத்தூய்மையுடன் உறுதியளித்து வெளிப்படுத்துகிறேன்.

இதையும் படியுங்கள்:
டாக்டர் அம்பேத்கர் கூறிய அற்புதமான 15  போதனைகள் – நம் வாழ்வியல் பாடங்கள்!
Ambedkar
logo
Kalki Online
kalkionline.com