

63 நாயன்மார்கள் தங்களின் அசைக்க முடியாத சிவபக்தியால், சாதாரண மனிதர்களுக்கு விசித்திரமாகத் தோன்றும் வகையில் தொண்டாற்றி உள்ளனர். தங்களையே வருத்திக்கொண்டும், உலகநியதிகளுக்கு மாறாக விசித்திரமான முறையிலும் தொண்டாற்றியவர் கள் பலர் உள்ளனர். பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள இவர்களின் சில விசித்திரமான தொண்டுகள் பற்றி காணலாம்.
இயற்பகை நாயனார்:
இறைவனால் கொடுக்கப்பட்ட அனைத்தும் இறையடியாருக்கு சொந்தம் என்ற எண்ணத்தில் சிவனடியாருக்கு தன் மனைவியை தானமாக அளித்தவர். வேதியர் போன்று சிவனடியார் வேடத்தில் வந்த சிவன், அவருடைய மனைவியை பணிவிடை செய்ய அளிக்குமாறு கூற எவ்வித தயக்கமும் இன்றி தானமாக வழங்கியவர் இவர்.
இளையான்குடி மாற நாயனார்:
சிவனடியார் பசிக்கு உணவளிக்க, நடு இரவில் மழை பெய்யும் நேரத்தில் விதைத்து வந்த நெல்லை அறுத்து வந்து, வீட்டின் கூரையையே விறகாகப் பிரித்து சமைத்தவர்.
சிறுத்தொண்ட நாயனார்:
சிவனடியாராக வந்த இறைவனின் கட்டளைக்கிணங்க, அவருடைய பசி தீர்ப்பதற்காக, தனது ஒரே மகனை சமைத்துப் படைக்கத் துணிந்தவர்.
திருநீலகண்ட நாயனார்:
சிவபெருமானின் ஆணைப்படி, மனைவியைத் தீண்டாமல், வயதான காலத்தில் கோல் பிடித்து, குளத்தில் மூழ்கி சிவன் அருளால் இளமையைப் பெற்றவர்.
கண்ணப்ப நாயனார்:
வேடர் குலத்தைச் சேர்ந்த இவர் இறைவனின் சிலையின் கண்ணிலிருந்து வழிந்த ரத்தத்தைக் கண்டு, தன்னுடைய கண்ணை எடுத்து இறைவனுக்குப் பொருத்தி, மற்றொரு கண்ணையும் பொருத்தத் துணிந்தவர். சிவபெருமானின் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் கண்ணை தானம் செய்ததுடன் மாமிசத்தையும் நைவேத்தியமாகப் படைத்தவர்.
பூசலார் நாயனார்:
சிவனாலயம் கட்ட கையில் பணம் இல்லாததால், மனதிற்குள்ளேயே சிவபெருமானுக்கு ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தைக் கட்டி கும்பாபிஷேகமும் செய்தவர். மன்னன் கட்டிய பிரம்மாண்டமான கோயிலின் கும்பாபிஷேகத்தைவிட பூசலாரின் மனக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கே சிவபெருமான் முன்னுரிமை அளித்தார்.
மானக்கஞ்சாற நாயனார்:
மகளின் திருமணத்தின் இப்பொழுது சிவனடியார் கேட்டார் என்பதற்காக மணப்பெண்ணின் கூந்தலை வெட்டி அடியாரின் ஆபரணத்திற்காக கொடுத்தவர்.
வாயிலார் நாயனார்:
வேளாளர் மரபிலே அவதரித்த இவர் மனதிற்குள் சிவனுக்கு கோவிலைக் கட்டி, அன்பு என்னும் நீரை ஊற்றி, உண்மையான பக்தி என்ற விளக்கை ஏற்றி பூஜித்தவர் இவர்.
எறிபத்த நாயனார்:
சிவனுக்குரிய மலர்க்கூடையை பறித்துச் சென்ற யானையையும், அதற்குத் துணையாக இருந்த பாகனையும் கொன்று, ஈசன் மீதான அன்பை வெளிப்படுத்தியவர்.
அதிபத்த நாயனார்:
தினமும் கிடைக்கும் மீன்களில் மிகவும் சிறந்த மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கடலில் தூக்கி எறிந்தவர்.
கணம்புல்ல நாயனார்:
சிவபக்தர் ஒருவர் கணம்புல் என்னும் புல்லை விற்று கிடைத்த பணத்தில் கோயில்களில் விளக்கேற்றி வந்தார். ஒருநாள் புல் விற்கவில்லை. இருந்தாலும் அந்த புல்லினால் விளக்கேற்றினார். புல்லால் ஆன திரி சீக்கிரம் அணையுமே என வருந்திய அவர் தன் தலைமுடியை திரியாக்கி விளக்காக எரிக்க முயன்றார்.அவரை சோதிக்க விரும்பாமல் சிவன் நேரில் காட்சியளித்து சிவலோகத்தில் வாழும் வரத்தை அளித்தார்.
மூர்க்க நாயனார்:
சூதாட்டத்தில் வென்ற பணத்தைக் கொண்டு நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவளித்து தொண்டு செய்தவர். சூதாட்டத்தில் யாராவது ஏமாற்றினால் அவர்களை தண்டிக்கவும் தயங்காததால் இவர் 'மூர்க்கர்' என அழைக்கப்பட்டார்.
சாக்கிய நாயனார்:
புத்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இறைவனுக்கு நைவேத்தியமாக பொருள்களை சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலையில் கல்லையே மலராகக் கருதி நாள்தோறும் சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிப்பட்டவர் இவர். ஆயினும் அவரது பக்தியை ஏற்று, அந்தக் கல்லை மலராக ஏற்றுக்கொண்டு அவருக்கு முக்தி அளித்தார்.
காரைக்கால் அம்மையார்:
இறைவனின் அருளால் கணவருக்காக மாம்பழம் வரவழைத்தவர். இறைவனை வேண்டி பேய் உருவம் பெற்றவர். கைலாய மலைக்குச் செல்லும் பொழுது புனிதமான அந்த பூமியில் கால் படக்கூடாது என்பதற்காக தலையாலேயே நடந்து சென்றவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். 63 நாயன்மார்களுள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே நாயன்மார் இவர்தான்.
இந்த நாயன்மார்களின் பக்தி, பக்தி உலகிலும், பெரிய புராணத்திலும் மிகவும் தனித்துவமானதாக கருதப்படுகிறது.