

வீட்டில் பூஜை செய்வது என்பது வெறும் ஆன்மிக சடங்காக மட்டும் கருதப்படாமல் புனிதமான ஆன்மிக செயலாகவே கருதப்படுகிறது. பூஜை செய்யும்போது தீர்த்தம், பிரசாதம், விளக்கு, தூபம் முதலியவற்றை சரியான முறையில் பயன்படுத்தி மந்திரங்களை உச்சரிப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி வீட்டில் நேர்மறை சக்திகளை ஈர்க்கின்றன. அந்த வகையில் 10 நிமிடம் தினமும் வீட்டில் பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஆன்மிக ஒழுக்கம்: வீட்டில் பூஜை செய்யும்போது மனம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இணைந்து பூஜை செய்ய வேண்டும். பூஜையின் முழு பலன்கள் கிடைக்க பூஜை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமைதியாக அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்துவது ஒரு முக்கியமான ஆன்மிக ஒழுக்கமாக இருக்கிறது. வீட்டில் பூஜை செய்யும்போது சுவாமி முன் நின்று விளக்கேற்றி முடித்தால் மட்டும் முழு பலன் கிடைக்காது. ஆகவே, வீட்டில் பத்து நிமிடம் மனம் ஒன்றி பூஜை செய்யும்போது ஆன்மிக ஒழுக்கம் ஏற்படுகிறது.
நேர்மறை ஆற்றல்: உலகில் நல்ல சக்தியும் எதிர்மறை சக்தியும் இயங்கினாலும் ஒருவருக்கு பல தடைகள், குழப்பங்கள், மன அழுத்தங்கள் போன்றவை ஏற்படுவது எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாகவே கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்பட்டு நேர்மறை சக்திகளை வீட்டுக்குள் அழைக்கும் சக்தி பூஜைக்கு இருக்கிறது.
உள்ளம் தெளிவடைதல்: உயிரின் ஆதாரமாக மட்டும் நீர் கருதப்படாமல், தெய்வீக ஆற்றலை தாங்கும் சக்தி கொண்டதாக இருப்பதால் வீட்டில் பூஜை செய்யும்போது தீர்த்தம் கட்டாயம் வைக்க வேண்டும். பூஜையின்போது, ‘இறைவனே இந்த தீர்த்தத்தில் எழுந்தருள்வாயாக’ என மனதார வேண்டி தீர்த்தம் வைக்கும்போது தெய்வீக அதிர்வுகள் மனதில் உள்ள அசுத்தமான எண்ணங்களை நீங்கச் செய்து உள்ளம் தெளிவடைகிறது.
பிரசாதம்: பூஜையின்போது இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, சாதாரண உணவு இறைவனுக்கு வைக்கும்பொழுது அது புனிதமாக மாறுகிறது. எளிய பொருட்களான கற்கண்டு, சர்க்கரை, பால், பழங்கள் போன்றவையே பூஜைக்கு போதுமானவையாகும். அதிலும் குறிப்பாக வெற்றிலை, பாக்கு வைத்து இறைவனை வழிபடுவதால் குடும்ப நலன் அதிகரிக்கிறது.
விளக்கேற்றுதல்: விளக்கின் ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றுவதோடு ஞானத்தை அளிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுவதால், பூஜையில் விளக்கு ஏற்றுதல் மிகவும் முக்கியமான ஆன்மிக அம்சமாகும். வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கி நல்ல சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க, அகல் விளக்கு அல்லது நெய் விளக்கு ஏற்றுவது அவசியம். ஆன்மிக ரீதியாக தூபம், சாம்பிராணி போடுவதால் எதிர்மறை ஆற்றல்கள் அகன்று சுத்தமான தெய்வீக அதிர்வுகளை உருவாக்குகிறது.
மன அமைதி: வீட்டில் பூஜை செய்யும்பொழுது குறைந்தபட்சம் ஒரு மந்திர ஸ்லோகம் அல்லது இறைவனின் நாமத்தை உச்சரிப்பது வலிமையான ஆன்மிகப் பயிற்சியாக அமைந்து மன அமைதியை அதிகரிக்கிறது. அதிகமான மந்திரங்கள் தெரியாவிட்டாலும் ‘ஓம் நமசிவாயா, ஓம் நமோ நாராயணா, ஓம் சக்தி’ போன்ற எளிய நாமங்களை மனதார சொல்லும்போது அதனுடைய பலன் பல மடங்கு அதிகரிக்கிறது.
ஞானம் பெறுதல்: இறைவனுக்கு பூஜை முடிந்த பின்பு அமைதியாக அமர்ந்து சில நிமிடங்கள் நன்றி செலுத்துவது முக்கியம். வாழ்க்கையில் நிறைவு மற்றும் மன அமைதியை தரும் முக்கிய ஆன்மிக ரகசியமாக நன்றி உணர்வு இருக்கிறது. இவ்வாறு தினசரி பூஜை செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி மனோபலம் அதிகரிக்கிறது. மேலும், ஆரோக்கியமும் செழிப்பும் நிலைத்து இருக்கும்.
ஆகவே, தினந்தோறும் 10 நிமிடங்கள் வீட்டில் பூஜை செய்வதை ஒரு பழக்கமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஆன்மிக சாதனையாக மாற்றிக் கொண்டால் என்றென்றும் வீடு சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும்.