

அகத்தியர், அகத்திய முனிவர், (Agastya muni) சித்தர் என்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இந்து புராணங்களில் புகழ்பெற்ற ஒரு முனிவர் . அவர் தனது ஞானம், ஆன்மீக போதனைகள் ஆகியவற்றால் இந்திய பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். பல பண்டைய நூல்கள் அவரது வாழ்க்கையைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் பேசுகின்றன. அவர் ஒரு சிறந்த ஞானியாகவும் ஆன்மீகத் தலைவராகவும் விளங்கினார்.
அகத்தியரின் உண்மையான பிறந்த இடம் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. சில இலக்கியங்கள் அவர் சத்ய யுகத்தில் வராஹ கல்பத்தில் பிறந்ததாகக் கூறுகின்றன. இது அவரது தோற்றத்தை மிகவும் பழமையானதாகக் காட்டுகிறது. மற்றொரு வரலாறு அவர் மித்ரா மற்றும் வருணக் கடவுள்களால் உருவாக்கப்பட்ட ஒரு பானையில் (கும்பம்) பிறந்ததாகக் கூறுகிறது. அதனால்தான் அவர் 'கும்பஜா' என்றும் அழைக்கப் படுவதாகவும் வரலாறு கூறுகிறது.
தமிழ்நாட்டில், அகத்தியர் தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சித்தர் ஆவார். வட மற்றும் தென்னிந்தியாவின் கலாச்சாரங்களை ஒன்றிணைக்க அவர் உதவினார். அவர் வடக்குப் பகுதிகளிலிருந்து தெற்குப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, வேத மரபுகளைப் பரப்பினார். அவற்றை உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் கலக்கச் செய்தார். மேலும், அவர் யோகாத் துறையில் நிபுணத்துவம் பெற்ற புகழ் பெற்ற 18 சித்தர்களில் ஒருவராவார்.
அகத்தியரின் சித்த மருத்துவ சிகிச்சை தென்னிந்தியாவில் இன்றும் நடைமுறையில் உள்ளது. இது சித்த மருத்துவத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கிறது. இவர் மூலிகை மருத்துவ நடைமுறைகள் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
ராமாயணத்தில், அகத்தியர் ராமரின் வனவாசத்தின் போது தெய்வீக ஆயுதங்களை ராமருக்கு வழங்கி உதவியதாகக் கூறப்படுகிறது. மகாபாரதம் அகத்தியரின் ஞானத்தையும் வேத அறிவைப் பரப்புவதில் அவரது பங்கையும் பறைச்சாற்றுகிறது.
அகத்தியர் பற்றிய பல கதைகள் அவரது தெய்வீக சக்தியை எடுத்துக்காட்டுகின்றன. வாதாபி புராணம் அசுரரான வாதாபியை தனது ஆன்மீக சக்தியால் தோற்கடித்து, தனது ஞானத்தையும் வலிமையையும் எடுத்துக்காட்டியதாகக் கூறுகிறது.
மற்றொரு கதையில் தொடர்ந்து உயரமாக வளர்ந்து வந்த விந்திய மலையின் வளர்ச்சியை நிறுத்தச்சொல்லி தேவர்கள் அகத்தியர் முனிவரிடம் உதவி கேட்டபோது, அவர் மலையை தாழ்வாக இருக்க உதவியதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் லோபமுத்ரா என்ற இளவரசியை மணந்தார். பின்னர், அவர் அவரது சீடராகவும் மாறினார். அவர்கள் ஒன்றாக பல பாடல்களை இயற்றினர்கள்.
தமிழ் இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கு அவர் அளித்துள்ள பங்களிப்புகளுக்காக அவர் இன்றும் கொண்டாடப்படுகிறார். அவர் தமிழ் இலக்கணத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார், மேலும் அவரின் முதல் தமிழ் இலக்கண நூலான 'அகத்தியம்' இன்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்விருந்தாக இருக்கிறது. அவரது படைப்புகள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாக தமிழ் இலக்கிய உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அகத்தியர் ஒரு முனிவராகவும், ஞானியாகவும் மட்டுமல்லாமல், பண்டைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் மரபுகளையும் ஒன்றிணைத்த ஒரு கலாச்சார சின்னமாகவும் மதிக்கப்படுகிறார். இன்றும், அகத்தியரின் பங்களிப்புகள் திருவிழாக்கள், கோயில்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்படுகின்றன. அ
கத்தியரின் போதனைகளும் பாடல்களும் ஆன்மீகம் தேடுபவர்களை ஊக்கமூட்டுபவைகளாக அமைந்துள்ளன. இன்றைய இளைஞர்கள் அகத்தியர் போன்ற ஆன்மீகப் பெரியோர்களைப் பற்றி அறிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.