
1. உப்பு சுற்றி போடுதல்:
கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்து வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி நீரில் கரைக்க உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.
2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்:
சிகப்பு மிளகாயை கையில் எடுத்து வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி நெருப்பில் போட திருஷ்டி கழியும்.
திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் வெடிக்காது நமக்கு கமறும்.
3. கற்பூரம் ஏற்றுதல்:
கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி, தரையில் தட்டிவிட்டு வாசலில் போட கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.
4. படிகாரம் சுற்றுதல்:
மிளகாய் சுற்றுவது போலத்தான் இதுவும். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடும்.
5. கருப்பு வளையல்:
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோட திருஷ்டி விலகும்.
6. காலடி மண்:
காலடி மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றி அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து வெளியில் எறிய திருஷ்டி போய்விடும்.
7. எலுமிச்சை குங்குமம்:
வியாபார ஸ்தலங்களுக்கும், வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிய திருஷ்டி விலகும்.
8. தேங்காய் உடைத்தல்:
தேங்காயின் மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
9. பூசணிக்காய் உடைத்தல்:
பூசணிக்காயில் குங்குமத்தையும் சில்லறை காசுகளையும் போட்டு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
10. ஆரத்தி:
கல்யாணம் மற்றும் பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தல் ஆகும்.
11. பட்சி திருஷ்டி:
குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப் பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன.
பொதுவாக நீங்கள் திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் கையில் கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறு இருக்க வேண்டும்!
நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக் கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும்.
திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றலாம். பெரியவர்கள் தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உறவினர் திருஷ்டி, ஊரார் திருஷ்டி, தீயசக்திகள் திருஷ்டி என்று பலவிதமான திருஷ்டிகளை கூறுவதுண்டு. திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள் கூறவேண்டும். அதை ஒரு குருவிடம் உபதேசம் பெற்று உபயோகிக்க வேண்டும்.
பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி, அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது.
அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்தால் அது உத்தமமான தினமாகும். சூரிய அஸ்தமன சமயமே திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணம்.
இந்த பழக்கத்தை எப்படி நம்புவது என்று சிலர் கேட்கலாம்.
பலன் கிடைப்பதனால் தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப் போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாமும் நம்புவோம்.