

சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் உள்ள தொடர்பையும், சனீஸ்வரன் ஏன் பெருமாள் பக்தர்களைத் துன்புறுத்துவதில்லை என்பதையும் இந்த பகுதியில் விரிவாக அறிந்துகொள்ளலாம் வாங்க.
எந்தவித குறையும் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக பல முயற்சிகளை எடுப்பவர்கள், அந்த முயற்சிகளோடு சேர்ந்து பெருமாளையும் வழிபட்டால் கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மேலோங்கும்.
பொதுவாக நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமை வழிபாட்டிற்கு உரியதாக சொல்லப் படுகிறது. அந்த வகையில் சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாளாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இது பெருமாளுக்குரிய விரத நாளாகவும் சொல்லப்படுகிறது.
மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம்பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம்.
சூரியனின் பிள்ளைகளில் யமுனை நதியை எல்லோரும் புனிதம் என்று கொண்டாடினார்கள். ஆனால் சனீஸ்வரனை மட்டும் அமங்கலம் என்று ஒதுக்கினார்கள். மனம் உடைந்த சனீஸ்வரனிடம் நாரதர் சொன்னார், ‘கவலையை விடு, அந்த கண்ணனை ஆபத்தில் இருந்து காப்பாற்று’ நீயும் போற்றப்படுவாய் என்றார். சந்தர்ப்பம் வந்தது. இரண்யனின் தங்கை ஹோலிகா நரசிம்மர் மேல் உள்ள பகையால் எப்பொழுதும் கண்ணனை கொல்ல துடித்துக்கொண்டிருந்தாள்.
மேலும் அவள் தீயால் தன் உடம்பு சுடப்படாமல் இருக்க விசேஷ வரத்தை வைத்திருக்கிறாள் என்றார் நாரதர். ஹோலி பண்டிகை அன்று தீயில் மறைந்திருந்து கண்ணனை பஷ்பமாக்க திட்டமிட்டாள் ஹோலிகா. சரியான நேரத்தில் சனீஸ்வரன் தன் கூர்மையான பார்வையை ஹோலிகா மேல் செலுத்தினார். அவ்வளவு தான். சனிப் பார்வை பட்ட உடனேயே ஹோலிகாவின் சக்தி அழிந்தது. கண்ணன் தீ மூட்ட ஹோலிகா எரிந்து சாம்பலானால். கண்ணனை காத்த சனீஸ்வரனுக்கு அன்று கிடைத்தது மிகப்பெரிய வரம்.
கண்ணன் சொன்னார், சனீஸ்வரனே, இனி நீ அமங்கலமில்லை. உன் நாளான சனிக்கிழமை மிகவும் புனிதமானது. கலியுகத்தில் நான் வேங்கடவனாக திருமலையில் இருக்கும் போது சனிக்கிழமை என்னை தேடி வருபவர்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி தருவேன்.
சனியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார். அதனால் தான் இன்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சனி தோஷங்கள் நீங்கி சகல யோகங்களும் கிடைக்கும் என்று ஐதீகமாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை விரதம் இருப்பது நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் ஆரோக்கியத்தைத் தரும், மேலும் ஏழரைச் சனி தோஷங்களிலிருந்து விடுபடவும் உதவும். சனியின் பிடியிலிருந்து விடுபடவும், கர்ம வினைகளைக் குறைக்கவும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது சிறந்தது.
சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று, திருமால் வழிபாடு செய்வதும், தீபம் ஏற்றி வழிபடுவதும் சங்கடங்களை நீக்கி செல்வத்தைப் பெருக்குவதாக நம்பப்படுகிறது. அதேபோல் பெருமாளுக்காக சனிக் கிழமையில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சனி பகவான் துன்பங்களை தருவதில்லை என்பது நம்பிக்கை.
அந்த வகையில் பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவற்றை முன்னிறுத்திதான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு வாரமும் வரும் சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து சங்கடத்திலிருந்து காக்கும் வெங்கடேச பெருமாளை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் பூலோக வைகுண்டம் இருக்கிறாரே.