
தசரா பண்டிகையின் நோக்கமே தீமையை அழித்து, தர்மத்தினை நிலைநாட்டுவதுதான். இது பண்டிகை மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியலின் முக்கியமான ஒரு அத்தியாயமாகும். இதை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் இறுதியில், தர்மத்தின் முழு வடிவமான சூரிய குல சக்கரவர்த்தி ஸ்ரீராமர், தீமையின் முழு அடையாளமாக விளங்கும் அசுரகுல சக்கரவர்த்தி இலங்கை வேந்தன் ராவணனை அழிக்கிறார்.
தசராவின் நோக்கத்தை நாம் அடைய வேண்டும் என்றால் நம் மனதில் உள்ள அந்த ராவணனை கண்டறிய வேண்டும். நம் மனதின் கோபம், பொறாமை, பேராசை, சந்தேகம், பயம், வன்மம் போன்ற தீய குணங்கள் ஆகியவையே நம் மனதின் உள் இருள் அல்லது ராவணன் என்று உணர்ந்து கொள்ளலாம்.
உங்கள் மனதின் ராவணனை அடையாளம் கண்டறியுங்கள்: ராவணனுக்கு உள்ள பத்து தலைகளைப் போல நம்முள் பல தீய குணங்கள் இருக்கலாம். பேராசை, கோபம், பெருமை, சோம்பல், சந்தேகம், பொறாமை, வன்மம், பயம், அலட்சியம், சூழ்ச்சி போன்ற குணங்களை நாம் கண்டறிய வேண்டும். இந்த உணர்வுகள் அவ்வப்போது நம்மிடமிருந்து வெளியில் வரலாம். ஆனால், நாம் அதை ஒப்புக் கொள்வதில்லை. அத்தகைய குணங்களைக் கண்டறிந்து அதை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் பணியினைச் செய்ய வேண்டும்.
ராவணன் எப்போதும் அகம்பாவம் பிடித்தவனாக இருந்தான். மற்றவர்களின் பேச்சினை அலட்சியம் செய்தான். அவன் கிரகங்கள் அனைத்தையும் பகைத்துக் கொண்டான். தனது சகோதரன் விபீஷணன் கூறிய அறிவுரைகளையும், தனது மனைவி மண்டோதரியின் ஆலோசனைகளையும் அவன் மதிக்கவில்லை. கடவுளிடம் தனது பலத்தினை காட்ட முற்பட்டான். தவறானவர்களின் பேச்சைக் கேட்டு மதி மயங்கினான். பிறன்மனை நோக்கியதால் யுகங்கள் தோறும் இகழப்படுகின்றான்.
ஸ்ரீராமர் அளித்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி, ராவணன் உயிர் பிழைத்து இருக்கலாம். ஆனால், அவன் எதிரியின் பலத்தினை குறைவாக மதிப்பிட்டான். அதோடு, தனது ரகசியம் அறிந்த சகோதரனை பகைத்துக் கொண்டான். தனது அண்ணன் குபேரனிடம் இருந்து முறைகேடாக கைப்பற்றிய அரசாட்சி அவனிடம் இல்லாமல் போனது. தர்மம் தொடர்ந்து தோற்காது. அது இறுதியில் வென்றே தீரும். அதனால், ராவணனை போல இருக்க முயற்சி செய்யாதீர்கள்.
ஸ்ரீராமரை பின்பற்றுங்கள்: ஸ்ரீராமர் எப்போதும் தன்னை விட, தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றியும், தனது நாட்டு மக்களைப் பற்றியும் சிந்தித்தார். ஸ்ரீராமர் தனது குடும்பத்தினருக்காக தனக்குக் கிடைக்க வேண்டிய அரச பதவியை துறந்து, கானகம் சென்று துன்பத்தினை அனுபவித்தார். அவர் மீண்டும் வந்து அரச பதவியை ஏற்றதும், தனது தனிப்பட்ட இனிமையான வாழ்க்கையை விட, நாட்டு மக்களின் கருத்துக்களே முக்கியம் என்று தனது மனைவியைப் பிரிந்தார்.
ஸ்ரீராமர் எப்போதும் தனது கடமைகளை சரிவரச் செய்தார். ஒரு மகனாக தந்தையின் சொல்லைக் காப்பாற்றி வனவாசம் சென்றார். ஒரு மாணவனாக தங்களின் குருவின் எண்ணங்களை செயல்படுத்தி அசுரர்களை அழித்தார். ஒரு கணவராக தனது மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காதவர். தனக்கு உதவிய சுக்ரீவனின் மனைவியை மீட்டுக் கொடுத்தார். அதேவேளை வாலியின் மகனை இளவரசானாக்கி தர்மத்தினை நிலைநாட்டினார்.
தான் வென்ற இலங்கை நாட்டை தானே எடுத்துக் கொள்ளாமல், ராவணனின் சகோதரனிடம் ஆட்சியை கொடுத்தார். இப்படி ஸ்ரீராமர் எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். இந்த தசராவில் தீமையான குணங்களை பொசுக்கி, நேர்மறையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.