
கந்த சஷ்டி கவசத்தின் வயது சுமார் 250 ஆண்டுகளாகும். இதை இயற்றியவர் பாலதேவராய ஸ்வாமிகள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும் அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால், ‘கந்தர் சஷ்டி கவசம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும், திருச்செந்தூர் தலத்திற்காக அவர் இயற்றிய, ‘சஷ்டியை நோக்க சரவணபவனார்’ என்று ஆரம்பிக்கும் சஷ்டி கவசம் 270 வரிகளைக் கொண்ட கவசம் பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிபூர்வமானது.
ஒரு சமயம் பாலதேவராய சுவாமிகள் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கெனவே பாலதேவராய ஸ்வாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்தத் திருவிழா காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினர். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே என்று எண்ணியவர் முருகப்பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.
முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்புரிந்ததோடு, தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளம் பிரவாகமாக ஓடியது.
‘சஷ்டியை நோக்க சரவணபவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர்வேலோன்...’
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன்முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களையும் இயற்றி முடித்தார். ஆறு சஷ்டி கவசங்களையும் பாலதேவராய ஸ்வாமிகள் இயற்றி முடித்தபோது அவரை வாட்டி வந்த வயிற்று வலி முற்றிலும் காணாமல் போயிருந்தது. சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள், மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி வணங்கினார்.
உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் சஷ்டியில் மனம் உருகி பாராயணம் செய்வது கந்த சஷ்டி கவசம்தான். அதை இயற்றிய பாலதேவராயர் அந்த கந்த சஷ்டி கவசத்தை சென்னிமலையில் அரங்கேற்றுமாறு முருகனிடமிருந்து அவருக்கு உத்தரவு கிடைத்ததாம். அதன்படியே சென்னிமலை தலத்தில் கந்த சஷ்டி கவசம் அனைத்து முருக பக்தர்களின் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
கந்த சஷ்டி கவசம் பாடும்போது,
‘ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமுமொளிரும்’
என்ற வரிகள் வருகின்றன. இந்தப் புதிரான வரிகளுக்கான விளக்கம் ஐயும் (ஐம்) கிலியும் (க்லீம்) சௌவும் (ஸெளம்) ஆகியவை பீஜாக்ஷரங்கள் எனப்படும். இதை பீஜம் + அட்சரம் எனப் பிரிப்பர். பீஜம் என்றால் உயிர்ப்புள்ள விதை. அட்சரம் என்றால் எழுத்து. உயிர்ப்புள்ள எழுத்து விதைகள் ஒன்று சேர்ந்தால் அது மந்திரமாகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்கு செல்பவன் இறைவனின் காலடியை அடைவான்.
‘ஐம் க்லீம்’ என்ற மந்திர எழுத்துக்களும் உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளி பொருந்திய ‘ஸௌம்’ என்ற மந்திர எழுத்தும் எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும் இப்படிப் பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ குமாராய நம) மூலாதார எழுத்துக்குரிய நாதத் தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே என் கண்முன் தினமும் நின்று ஒளிர வேண்டும் என்பதே மேலே உள்ள வரிகளின் பொருள். முருகனுக்குரிய ஆறு எழுத்து மந்திரமான, ‘சரவணபவ’ உடன் ‘ஓம் ஐம் சரவணபவாய நம’, ‘ஓம் க்லீம் சிகாயை வஷட் ஓம் ஸௌம் சுப்பிரமணிய நமஹ’ என்ற இந்த மந்திரங்களையும் சேர்த்து சொல்லும்போது அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது.
ஆனால், இதையெல்லாம் நாமே சொல்லக் கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று தகுந்த நியம நிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது பக்தர்கள் அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால், கந்த சஷ்டி கவசம் அருளிய பாலதேவராய சுவாமிகள் தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களை சேர்த்து விட்டார். கந்த சஷ்டி கவசம் படிக்கும்போது இந்த வரிகளைச் சொன்னால் நாம் நியமத்துடன் மேற்கொண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தம் ஆகிறது. நமது நன்மைகளுக்காகவும் முக்திக்காகவும் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்சமல்ல என்பது தெரிகிறது அல்லவா?
பல்வேறு அருட்பலன்களை அருளும் கந்த சஷ்டி கவசத்தினை நாளை ஞாயிற்றுக்கிழமையன்று (22.06.2025) மதுரையில் நடைபெற்று வரும் முருகர் மாநாட்டில் ஐந்து லட்சம் பக்தர்கள் ஒன்று சேர்ந்து பாடிப் பாராயணம் செய்ய உள்ளனர். பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வது ஒரு சாதனை முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றி பதினாறு பேரும் பெற்று நெடுநாள் வாழலாம். நவகிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடும். குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படிப் பல பலன்கள் கந்த சஷ்டி கவச பாராயணத்தில் உள்ளன.
தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து நல்ல பலன்களைப் பெறுவோம், முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.