
இந்த உலகில் வாழ்வதற்கு அறிவு மட்டும் தேவையில்லை. கூடவே பொருளாதாரமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும். ஆன்மிக நம்பிக்கைகளில் செல்வத்துக்கு அதிபதியாக மகாலட்சுமி தேவி வணங்கப்படுகிறார். பொதுவாகவே, நறுமணம் கொண்ட பொருட்களில் மகாலட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுவது உண்டு.
மகாலட்சுமியின் அம்சம் சில மணமிக்க பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இவற்றை சமையலுக்குப் பயன்படுத்துவதால் சாதாரண பொருளாகி விடாது. கிராம்பும் ஏலக்காயும் மூலிகை வகையைச் சார்ந்த தாவரங்கள். மகாலட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவை அடங்கும். இந்த இரண்டையும் வைத்து செல்வ வளத்தை பெருக்குவது எப்படி என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
செல்வத்தில் நாட்டம் கொண்ட பலருக்கும் தங்கள் குடும்பத்தில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய ஆசை இருக்கும். மகாலட்சுமியை வசியம் பண்ண பலவிதமான வழிகள் உண்டு. பணம் சம்பாதிப்பது கடினமான காரியம் என்றால், சேர்த்த பணத்தை நிலைக்க வைப்பது அதைவிட கடினமானதாக இருக்கும். ஒரு பக்கம் பணம் வந்து வந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் அது நிலைக்காமல் தேவையற்ற வழிகளில் கரைந்து கொண்டே இருக்கும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படுதல், இயந்திரங்கள் பழுதடைதல், வண்டி வாகன செலவுகள் என்று எதிர்பாராத செலவுகள் உண்டாகிக்கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் மகாலட்சுமியின் அருள் குறைவு என்பதுதான் அர்த்தம்.
மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைகுரிய ஏற்பாடுகளை செய்த பின் குத்துவிளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைக்கவும். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து விளக்கின் பாதத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்யவும். பூக்களில் மணமிக்க மகாலட்சுமி பெரிதும் விரும்பும் மல்லிகை மலர் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
பின்னர் கிராம்புகளை 54 அல்லது என்ற 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணிக்கையில் ஏலக்காயும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ளுங்கள். கிராம்பை பூ கட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டிக் கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், உலர் திராட்சை, மாதுளம் பழம், நெல்லிக்கனிகள் ஐந்து இவற்றை ஒரு தட்டில் விளக்கின் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து அதன் மீது ரூபாய் 501 (அவரவர் இஷ்டம்) காணிக்கை வைத்து இந்த இரண்டு மாலைகளையும் விளக்கின் மீது சாற்றி விளக்கின் ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பின் மகாலட்சுமி சுலோகத்தை வாசிக்கலாம். தொடர்ந்து 21 வாரங்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து வருவதன் மூலம் குபேர யோகத்தை அடையலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மகாலட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக உங்களுக்குக் கிடைக்கும்.
மாலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதன் நிறமும் மணமும் மாறும் பட்சத்தில் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை செய்ய முடியாத நிலையில் ஒரு பௌர்ணமியிலும் துவங்கி செய்யலாம். மகாலட்சுமி உங்களது வீட்டில் வாசம் செய்ய இந்த பூஜை முறை சிறந்த பலனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், முழு நம்பிக்கையோடு இதை செய்து பயனடையலாம். பூஜை செய்ய வேண்டிய நேரம் காலை 6 முதல் 7, மதியம் 1 முதல் 2, இரவு 8 முதல் 9 மணி வரை.
நாமும் மகாலட்சுமியின் அம்சமான குத்துவிளக்குக்கு மணமிக்க ஏலக்காய் மாலைகளை அணிவித்து வாழ்வில் செல்வந்தராக உயர்வோம்.